தொடர்கள்
தொடர்கள்
அமுதத் தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் - 9 - பாலாஜி & வேங்கடகிருஷ்ணன்

2021051814420944.jpg

பெரியாழ்வார் - ஸ்ரீ வில்லிபுத்தூர்

(ஓவியக்குறிப்பு)
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி திருக்கோயிலில், ட்வஜஸ்தம்பத்தின் எதிரில் இருக்கிறது பெரியாழ்வார் சந்நிதி. இக்கோயில் இன்று பார்க்கும் வடிவமானது நாயக்கர் கால கட்டிடக்கலையை சேர்ந்தது. முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் வடிவமைப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை. அளவில் மிகப் பெரியதாக இக்கோயில் இல்லை. கர்பக்ரஹத்தை ஒட்டி அமைந்துள்ள இரண்டு பிரகாரங்கள்.
பெரியாழ்வார் சந்நிதி ஒரு தனிப்பட்ட வடிவமைப்பாகும். சந்நிதியின் கர்பகிரஹத்தை ஒட்டி ஒரு சிறிய பிரகாரம் அமைந்துள்ளது. தங்க மூலம் பூசப்பட்ட தகடுகள் வேயப்பட்ட முன் மண்டபம் ஒன்று உண்டு. உற்சவ நாட்களில், ஆழ்வார் இங்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளுவார். இதனை ஆஸ்தானம் என்றும் அழைப்பதுண்டு. மூலவர் சந்நிதி ஒரு சதுரமான வடிவமைப்பு கொண்டதாகும். மூலவர் திருமேனி கர்பகிரஹத்தின் ஒரு கோடியில் இருக்கிறது. ஆழ்வார் மூலவர் திருமேனி சுதையினால் ஆனது. சுண்ணாம்பு சிந்தினால் செய்யப்பட்டு நீர் வண்ணம் பூசப்பட்டுள்ளது. அவருடைய முன்குடுமி தெளிவாக வடிமைத்து கட்டப்பட்டுள்ளது. பீடத்தின் மேலே மூலவர் திருமேனி ஐந்தடிக்கும் மேலான உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் திருமேனி சோழர் காலத்தியது என்று அதன் அமைப்பு தெரிவிக்கிறது. சோழர் காலத்திய திருமேனிகள் போல, பக்தர்கள் கோலத்தில் கூப்பிய கையோடு (அஞ்சலி முத்திரை) காணப்படுகிறது.

பெரியாழ்வார்

இயற்பெயர் விஷ்ணு சித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் சோழிய பிராமணர் மரபில் வந்த வெயர் குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்த பட்டர் என்பவருக்கும் பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். விஷ்ணுவின் வாகனமான கருடனின் அம்சம் என்று சொல்வதுண்டு. வடபத்ரசாயி என்ற பெயரில் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமாலுக்கு நந்தவனம் அமைத்து, தினம் பகவானுக்கு பூக்கட்டி மாலை சார்த்தி வந்தார். இவர் பாடல்களில் பாண்டிய மன்னர்களின் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறார். மூன்று பாண்டிய மன்னர்கள் காலத்தில் இவ்வாழ்வார் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் காலத்தவர் என்பதும்.. அந்த மன்னரால் ஆதரிக்கப்பட்டவர் என்பதும் தெரிகிறது.

இந்தப் பாண்டிய மன்னன் ஒருமுறை இரவில் நகர்வலம் வரும்போது, ஒரு வழிப்போக்கனை எழுப்பி விசாரித்தாராம். அவன் வடதேச யாத்திரை முடிந்து வீடு திரும்பியதாக சொன்னான். “யாத்திரையால் என்ன பலன் கண்டாய்?” என்று மன்னன் கேட்க... பரம்பொருளே அறிந்தேன் என்றார்.

“மன்னனே மழைக்காலத்திற்கு வேண்டியதை கோடையிலும், முதுமை காலத்திற்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக” என்ற பொருள்பட ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை சொன்னான். இது மன்னனை சிந்தனையில் ஆழ்த்தியது.

“எனக்கு எல்லா சந்தோஷங்களும் இப்பிறப்பில் கிடைத்திருக்கிறது. என்னுடைய அடுத்த ஜென்மத்தில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று தனது புரோகிதர் ஆன செல்வ நம்பிகளை கேட்க, அவர் வித்வான்களை திரட்டி கடவுள் தத்துவத்தை பற்றி ஒரு விவாதம் நடத்துங்கள். பரம் பொருள் யாது? என நிரூபணம் செய்ய ஒரு போட்டி ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னார். மன்னன் அவ்வாறே செய்து... அதற்கு பரிசாக ஒரு பொற்கிழியை கட்டி வித்வான்களை அழைத்து சபை கூட்டினார்.

இதனிடையில், விஷ்ணுசித்தரின் (பெரியாழ்வார்) கனவில் எம்பெருமான் தோன்றி, அவரை அந்த மண்டபத்திற்குச் சென்று தன்னைப் பற்றி பேசி, தன் பரத்துவத்தை நிரூபணம் செய்யுமாறு பணித்தான். இதைக் கேட்ட இவர் மிகவும் அஞ்சி, பெரிய பெரிய வித்வான்களுக்கு இடையில் ஒன்றும் தெரியாத தான் எப்படி உம்மைப்பற்றி பேசி வெற்றிகொள்வது என்று கேட்க.. எம்பெருமான்.. “நீர் அங்கு செல்லும் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூற, அவரும் அதற்கு சம்மதித்தார். பின்னர் தான் கனவில் கொண்ட எம்பெருமானின் ஆணைப்படி பல வித்வான்கள் கூடியிருக்கும் அந்த மண்டபத்திற்குச் சென்றபோது, அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் இவரைப் பார்த்து நகைத்துப் (கேலிசெய்து) பேசினர். மேலும் ஒன்றும் தெரியாத இவர், இந்த அரங்கில் வந்ததே தப்பு என்றும், இந்த விஷயத்தில் இவர் கலந்து கொள்வது சரியில்லை என்றும் கூறி அவரது வருகையை ஆட்சேபித்தனர். இருந்தும், சபைக்கு வந்தோரை அவமதித்தல் தருமமன்று என்று கூறி, செல்வநம்பி விஷ்ணுசித்தரை அழைத்து வேதாந்தங்கள் கூறும் பரம்பொருள் யார் என்று நிச்சயிக்க (நிரூபிக்க) வேண்டினான்.

விஷ்ணுசித்தர் வால்மீகி, துருவன் ஆகியோரைப் போன்று பகவானாலேயே அறிவாற்றல் பெற்று, மிகுந்த திறமையுடன் “ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள்” என்று வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்தும் ஆயிரமாயிரம் மேற்கோள்களுடன் சந்தேகத்தை அறவே ஒழிக்கும் வண்ணம் விளக்கினார். இவர் இப்படி உரைத்தபோது... பொற்கிழி இவர் பக்கம் தாழ, இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டருளினார். இதனைக் கண்ட அரசன் மற்ற வித்வான்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம், பட்டத்து யானைமேல் விஷ்ணுச்சித்தரை ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றதுடன், விஷ்ணுசித்தரைப் போற்றும் வண்ணம் புகழ்துதிகள் பாடி, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தனர். மேலும் அரசன் இவருக்கு “பட்டர்பிரான்” என்ற திருநாமத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.

20210518144406759.jpg

தன்னை ஸ்தாபித்து (நிரூபித்து) இப்படி இவர் ஊர்வலமாக வருவதைகக்காண, எம்பெருமான் தன் பிராட்டியரான லக்ஷ்மியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் தன் பரிவாரங்களுடன் வந்து காட்சி தந்தான். தன் சிறப்புக்கு எம்பெருமானே காரணம் என்றறிந்த விஷ்ணுசித்தர், இப்படி அனைவரும் காணும்படி வந்து நின்ற எம்பெருமானுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி, தன் அன்பு மிகுதியால் காப்பாக, தான் அமர்ந்திருந்த யானைமேல் இருந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு “பல்லாண்டு பல்லாண்டு” என்று பாடல் பாடத் தொடங்கினார்.

பின்பு விஷ்ணுசித்தர் செல்வநம்பியாலும், அரசனாலும் மேலும் கொண்டாடப்பட்டு, பரிசுகள் பெற்று வில்லிபுத்தூர் திரும்பினார். தான் பெற்ற செல்வமனைத்தையும் வடபெரும் கோயிலுடையானுக்கு அளித்து, தன் பழைய தொண்டான கைங்கர்யமான திருமாலை கட்டுதலையே நித்தியமாகக் கொண்டார். பரம்பொருளுக்கே தீங்கு நேரலாம் என்ற அச்சத்தால், எம்பெருமானிடம் அன்பைக் கூட்டி பரிவு கொண்டிருந்தார் இவர். அந்தப் பரிவே இவருக்கு “பெரியாழ்வார்” என்னும் திருநாமத்தைப் பெற்றுத் தந்தது.

கண்ணன் திருஅவதாரம் தொடங்கி, பிள்ளைத் தமிழுக்கு இலக்கணமாக பாடல்கள் இயற்றிய பெரியாழ்வார், கிருஷ்ணாவதாரத்தில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தமானது “பெரியாழ்வார் திருமொழி” என்று வழங்கப்படுகிறது. திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள் தவிர 461 பாடல்கள் கொண்டது இவரது அருளிச்செயல்கள் ஆகும்.


பரம்பொருள் யார் என்ற நிரூபணத்தில், விஷ்ணுவை நிலைநாட்டிய விஷ்ணுசித்தர், அரசனால் “பெரியாழ்வார்” என்னும் திருநாமம் (பெயர்) சூட்டப்பெற்று, யானையின் மேல் ஊர்வலம் வந்தபோது, அங்கே எம்பெருமான் தோன்றி பெரியாழ்வாரைச் சிறப்பித்தான். தன் முன்னே தோன்றி, பெருமான் தன்னைச் சிறப்பித்ததைக் கண்டு சிறிதும் பெருமை கொள்ளாமல், இப்படி அனைவரும் காணும்படி வந்து நிற்கிறாயே! உனக்கு என்ன தீங்கு நேருமோ என்று அச்சப்பட்டு பெருமானுக்குக் காப்பிடும் வண்ணம் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா” என்று பாடி, மேலும் மேலும் அவனைப் புகழ்ந்து பல பாசுரங்களை அருளிச்செய்தார். அகில உலகங்களையும் காப்பவன் எம்பெருமான். அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு யாரால் தீங்கு வந்துவிடுமோ என்று அஞ்சி, அவனைத் திரும்பிப்போகும்படி ப்ரார்த்தித்து, அவனுக்குப் பல்லாண்டு பாடினார் இவர். கிருஷ்ணானுபவத்தில் மிகவும் ஊற்றம் கொண்டிருந்த இவர், தன்னை கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதையாகவே பாவித்து, கண்ணனை நீராட்ட அழைத்தார்; பூச்சூடிக்கொள்ள அழைத்தார்; காப்பிட அழைத்தார்; உணவுண்ண அழைத்தார்; இன்னுமின்னும் பல பல சிசிருஷைகளை ஏற்றுக்கொள்ள அழைக்கும் வண்ணம் பாசுரங்கள் பாடினார்.

மற்ற ஆழ்வார்களும், எம்பெருமானின் மீது பரிவு கொண்டிருந்தனர். ஆனால், எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடியதால், இவர் கொண்டிருந்த அன்பு “பொங்கும் பரிவு” ஆயிற்று. “பெற்ற தாயினும் ஆயின செய்யும் நாராயணா என்னும் நாமம்” என்பது திருமங்கை ஆழ்வார் வாக்கு. பெற்ற தாயைவிட பேருதவி செய்வது நாராயண நாமம் என்று அர்த்தம். ஆனால், அந்த நாராயணனிடம் அவன் தாயான யசோதையைக் காட்டிலும் பொங்கும் பரிவும் அன்பும் கொண்டிருந்தார் விஷ்ணுசித்தர்; அதனாலேயே இவருக்குப் பெரியாழ்வார் என்னும் திருநாமமாயிற்று.

“சோராத காதல், பெருஞ்சுழிப்பால் தொல்லைமாலையொன்றும்
பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்”
என்று இராமானுச நூற்றந்தாதியில் (பாசுரம் 15) பெரியாழ்வாரைப் போற்றிப் பாடியுள்ளார் திருவரங்கத்தமுதனார்.

ஒருநாளும் குறைவுபடாத அன்பினால் பெருஞ்சுழிப்படுகையாலே, நித்யனான எம்பெருமானின் திருவடிகளே அனைவர்க்கும் காப்பு என்று இருந்தபோதும், “உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு” அதாவது, அழகான உன் சிவந்த திருவடிகளுக்கு குறைவற்ற ரக்ஷை உண்டாகவேண்டும் என்று காப்புக்கட்டி, பல்லாண்டு பாடி மங்களாசாசனம் பண்ணிய புண்ணியர் (மேன்மையானவர், பெருமையுடையவர்) என்று பெரியாழ்வாரைப் போற்றுகிறார் அமுதனார்.

மேலும் இவர் நித்யசூரிகள் அனைவரையும் அழைத்து, “நீங்கள் ஒரு நொடியும் உறங்கிவிடாதீர்கள்! எம்பெருமானை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் சிறந்த காவலர்களாக இருங்கள்” என்னும் வண்ணம்,

“உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே
அறநெறி நார்ந்தகவாளே அழகிய சார்ங்கமே தண்டே
பறவையறையா உறகல் பள்ளியறை குறிக்கொள்மின்”

என்று பாடினார்.

இதுவே பொங்கும் பரிவு. இப்படிப் பட்ட பரிவைக் கொண்ட பெரியாழ்வாரை,

“மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவுதான் அன்றி - பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்.”

என்று போற்றுகிறார் மாமுனிகள் (உப.இர.மாலை, 18)

பாசுர விளக்கம்: ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்த விட்டுச்சித்தர் பெரியாழ்வார் என்கிற திருநாமத்தை விருதாகப் பெற்றார். இது எதனால் என்றால், எம்பெருமானுக்குக் காப்பிடும் விஷயத்தில், இவர் மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் விஞ்சி எழுந்த பரிவைக் கொண்டிருந்ததே ஆகும்.

இப்படிப்பட்ட காப்பிடும் வண்ணம் பாடப்பட்ட “திருப்பல்லாண்டு” என்னும் ப்ரபந்தம் மற்ற பிரபந்தங்களைக் காட்டிலும் மேன்மையானதாகக் கருதப்படுகிறது. “திருப்பல்லாண்டு” பிரபந்தத்தைப் போற்றும் வண்ணம், மாமுனிகள்...

“கோதிலவாமாழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு
ஓம் என்னும் அதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்
தான் மங்கலம் ஆதலால்"
என்று பாடியுள்ளார் ((உப.இர.மாலை, 19)

பாசுர விளக்கம்: குற்றமற்றவையான ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தக்களுக்கெல்லாம் திருப்பல்லாண்டே முதற் பிரபாந்தமாக அனுசந்திக்கப்படுகிறது. எதனால் என்றால், சகல வேதங்களுக்கும் “ஓம்” என்னும் பிரணவம் போலே உள்ள அர்த்தங்களுக்கெல்லாம் ஸங்க்ரஹமாய்க் கொண்டு மங்கள ரூபமாயும் இருப்பது பற்றியே.

இப்படிப்பட்ட சிறப்புடைய பெரியாழ்வாரையும், அவர் அருளிய திருப்பல்லாண்டு என்னும் பிரபந்தத்தையும் மேலும் போற்றும் வண்ணம் மாமுனிகள்,

“உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் - தண்டமிழ்நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர்செய்கலையில்
பைதல் நெஞ்சே நீ உணர்ந்துபார்”

என்று பாடியுள்ளார் (உப.இர.மாலை, 20)

பாசுர விளக்கம்: திவ்யப்ப்ரபந்தங்கள் அருளிச்செய்த ஆழ்வார்களுக்குள்ளே பெரியாழ்வாருக்கு நிகரான ஒருவர் உண்டோ என்றால் இல்லை; அவ்வாழ்வார்கள் அருளிச்செய்த நூல்களுள் திருப்பல்லாண்டோடு ஒத்ததொரு பிரபந்தம் உண்டா என்று பார்த்தாலும் இல்லை; மனமே! இதை நன்கு உணர்வாயாக!

அமுதத்தை தமிழ் பருகுவோம்...