தொடர்கள்
வலையங்கம்
வாழ்த்துக்கள் ஆனாலும்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், குறிப்பிட்டு சொல்லும் படி எந்த ஊழல் குற்றச்சாட்டும் இந்த அரசு மீது சொல்ல முடியாமல் மோடி நல்லாட்சி நடத்திருக்கிறார் . எதிர்க்கட்சியான காங்கிரஸ் சில கேள்விகளை கேட்டிருக்கிறது. இந்தியா உள்நாட்டில் வலிமையாக இருக்கிறது. வெளிநாட்டில் அதை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது. இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவுதி அரேபியா வேலை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது. தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் பெயர்களை ஐநாவில் சீனா தடுத்து விட்டது. இந்தியாவின் தாக்குதலுக்கு நியாயமான விசாரணை வேண்டுமென்று ஐநாவில் பாகிஸ்தான் கேட்டபோது அவர்களுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, ஈரான், துருக்கி, மலேசியா நாடுகள் குரல் கொடுத்தன. ஜி ஏழு நாடுகள் மாநாட்டுக்கு முதலில் அழைப்பில்லை. இப்போது கன்னட பிரதமர் அழைத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார். இந்தியாவை முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பு தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி என்றாலும், அதற்கு உலக வங்கி, ஆசியன் வளர்ச்சி வங்கி கடன் தந்திருக்கிறது. இந்தியா எதிர்ப்பையும் மீறி இது நடந்திருக்கிறது. எனவே நமது வெளியுறவுக் கொள்கையில் பின்னடைவு என்பது காங்கிரஸ் கட்சியின் விமர்சனம்.அவர்கள் சொல்வது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும் இதில் மத்திய அரசால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இந்த அனுபவங்களை ஒரு பாடமாக வைத்துக் கொண்டு மத்திய அரசு செயல் பட வேண்டும்.