தொடர்கள்
கற்பனை
ஆசையும் ஆசியும் - மோகன் ஜி

20250423131244721.jpg

அந்தப் புல்வெளியில்

நடந்து கொண்டிருக்கிறது

ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா.

தேவதைபோல பெண் குழந்தையோ,

கிருஷ்ண விக்ரஹம் போன்ற

சிறுவனோ….

புத்தாடையணிந்து கேக் வெட்டுவார்கள்.

பலரும் கோரஸாகப் பாடிக் கொண்டாடுவார்கள்.

இந்த வெட்டவெளி விழாவில்

மேகங்களும் கலந்து கொள்கின்றன.

சுக்ல பட்சத்து தசமி நிலா

ஆசிகளைப் பொழிகின்றது.

அழைப்பே யின்றி ஆசிகள்!

மேகத்தையும் நிலவையும்

யார் அழைக்க வேண்டும்?!

என்னையுமங்கு யாருக்கும் தெரியாது.

அழைக்கவுமில்லை.

எனக்கு சாக்லேட் கேக் பிடிப்பதில்லை.

வொயிட் ஃபாரஸ்ட் கேக் தான் விரும்புவேன்.

பரிசுப் பொருட்களோடு

பத்து வயசுப் பிள்ளைகள் போகிறார்கள்.

மேஜிக் நிகழ்ச்சியும் உண்டாம்.

அந்த மேஜிக் நிபுணர் மட்டும்

ஒரு முயலைத் தொப்பியுள் இட்டு,

என் வயசையும் பத்தாக்கி

வெளியிலெடுத்தால் எப்படி இருக்கும்?!

திருஷ்டி கழித்து

அம்மா போட்டுவிட்ட

முதலிரண்டு பித்தான்கள் தெறித்துப்போன

சிகப்பு பூபோட்ட மஞ்சள் சட்டையில்

நானும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்….

அங்கிருந்து

கோரஸ் கேட்கிறது…

‘ஹேப்பி பர்த் டே டு யூ!’

மஞ்சள் சட்டைக்காரனை

அங்கேயே விட்டுவிட்டு,

நகர்ந்தபடி வாழ்த்துகிறேன்…

‘அமோகமாக இரு கண்ணே!’