அமெரிக்காவில் நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்துடன் அங்குள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் 19-ம் தேதியன்று (நவம்பர் 14 மாறியதற்கு காரணம் அங்கு எல்லாம் வீக் எண்ட் என்பதால்) குழந்தைகள் தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.

தமிழ் எழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி, வாசிக்கும் போட்டி, திருக்குறள் தேனீ, வார்த்தை விளையாட்டு, விளம்பரப் போட்டி என்று அனைத்திலும் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். பெரியவர்களுக்காக தமிழகம் பற்றிய வினாடி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சுமார் 400 குழந்தைகள் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகளில் பலர் பட்டுப்பாவாடை, சட்டையுடன் கலக்கினார்கள். அன்றைய தினம் அந்தப் பகுதியே தமிழ்நாட்டைப் போலக் காட்சியளித்தது.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நம் குழந்தைகளுக்கு நம் மொழி மற்றும் கலாசாரத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக தன்னார்வலர்கள் பலரால் நடத்தப்படும் தமிழ்ப் பள்ளிகளில், நியூ ஜெர்சியில் மட்டும் 1,000 குழந்தைகளுக்கு மேல் தமிழ் கற்று வருகின்றனர் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. வாரம் ஒரு முறை வகுப்பறை.
நியூ ஜெர்சியின் பல பகுதிகளில் இருந்து ப்லைன்ஸ்பாரோ என்ற இடத்தில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டது தமிழால் அடுத்த தலைமுறையை ஒன்று கூட்டும் ஒரு பெரிய முயற்சி. நியூ ஜெர்சி தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் சார்பில் இப்படி ஒரு பெரிய விழா நடத்தப்படுவது இது இரண்டாவது தடவை.
சிறுவர், சிறுமியர் தமது கொஞ்சும் தமிழில் தலைவர்கள், தமிழ் நாட்டு கலாச்சாரம், திருக்குறளின் பெருமை ஆகியவை பற்றிப் பேசி பரிசுகள் பெற்ற விதம் காண்பவரின் மனதை கவர்ந்தது.
தமிழ் மொழியை அமெரிக்க பாடத் திட்டங்களில் உலக மொழிகளின்கீழ் இணைக்க அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற விழாக்கள் அவசியத்தேவையே!
--சுசித்ரா ஶ்ரீனிவாஸ்





Leave a comment
Upload