தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மிகம் தெரிந்து தெளிவோம் - 11 -சுந்தரமைந்தன்.


பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!

பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சு என்கிற பழமொழியைச் சொல்லக் கேட்டிருப்போம்…
அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதை அல்ல. பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.
உபன்யாசகர்களும், கதாகாலட்சேபம் செய்பவர்களும் ஆன்மிக உரை நிகழ்த்துபவர்களும் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு “மகா கணபதிம்” என்று ஆரம்பித்து, , கடைசியில் ஆஞ்சநேயனைத் துதித்து “ராமச்சந்த்ராய ஜனக என மங்களம் பாடி முடிப்பது சம்பிரதாயமான மரபு. பக்தி சார்ந்த எந்தச் செயலும் நல்ல முறையில் நடந்து முடிந்ததைக் குறிப்பிடத்தான், 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள்.
அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்தில் அமைந்த இந்தப் பழமொழியைத் தொடங்கிய பின் ஏதோ நினைத்து ஏதோவாக முடிந்ததைக் குறிப்பிடத் தற்காலத்தில் பலர் அறியாமையால் பயன்படுத்துகின்றனர்.

பிள்ளையாரில் தொடங்கி அனுமாரில் முடிவு - மகாபாரதம் மகாபாரதம் வியாசர் சொல்லப் பிள்ளையார் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது.

பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!


வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்ல வேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். அதன்படி இடைவெளி இல்லாமல் வியாசரும் சொல்லப் பிள்ளையார் வேகமாக எழுதத் தொடங்கினார். வியாசர் வேகமாகச் சொல்லிக் கொண்டிருக்க, அவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதினார் பிள்ளையார். ஒரு கட்டத்தில், பிள்ளையாரின் எழுத்தாணியின் கூர் மழுங்கிப் போனது. உடனடியாக தனது வலக் கொம்பை (தந்தம்) ஒடித்து அதையே எழுத்தாணியாக உபயோகித்து, மகாபாரதத்தை எழுதி முடித்தார். இப்படி பிள்ளையாரோடு ஆரம்பித்த மகாபாரதம் அனுமாரோடு முடிகிறது.

பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!


மகாபாரதத்தில் இரண்டு இடத்தில் அனுமார் வருவது நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய விஷயமாகும்.
மகா பாரதப் போரின் கடைசி நாளின் போது, முதலில் அர்ஜூனனை ரதத்திலிருந்து இறங்கும்படி கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார். அர்ஜூனன் இறங்கியவுடன் கடைசி வரை உடன் இருந்ததற்காக அனுமாருக்கு நன்றி தெரிவித்து விட்டு கிருஷ்ணர் ரதத்திலிருந்து கீழே இறங்கிய உடனே ரதத்தின் கொடியில் இருந்த அனுமார் மறைய ரதம் தீப்பிடித்துக் கொண்டது. இதைப் பார்த்த அர்ஜுனனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. அனுமார் மட்டும் ரதத்தைக் காக்காமல் இருந்திருந்தால், எப்போதோ எரிந்திருக்கும் எனக் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் விளக்கினார். எனவேதான் மகாபாரதம் பிள்ளையாரிடம் தொடங்கி அனுமாரிடம் முடிகிறது.

ஆதியும் அந்தமுமாக விளங்கும் ஆத்யந்த பிரபு :

பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!


விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை “ஆத்யந்த பிரபு’ என்பர். ஆதி+அந்தம் என்பதையே ஆத்யந்த பிரபு’ என்று சொல்கிறார்கள்.
“ஆதி’ என்றால் “முதலாவது’. முதல் கடவுள் விநாயகர். “அந்தம்’ என்றால் “முடிவு’. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
ஆதி - ஸ்ருதி - பூர்ணம் - கணபதி
அந்தம் - ஸ்ம்ருதி - ஸம்பூர்ணம் - மாருதி
ஸ்ரீ ஆத்யந்தப்ரபு - ஸர்வத்ர சம்பூர்ணம்!

எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.
சிவனும் சக்தியும் இணைந்த உருவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்கிறார்கள். சிவனும், விஷ்ணுவும் சேர்ந்த மூர்த்தியை "சங்கர நாராயணன்" என்று அழைக்கின்றனர்.
இதே போல் விநாயகரையும், அனுமனையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட தோற்றமே ஆதியந்த பிரபு என்கிற தெய்வம். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். அனுமன், விநாயகர் இருவருமே புத்திக்கூர்மைக்குப் பெயரெடுத்தவர்கள். ஆத்யந்தப் பிரபு, புத்திக் கூர்மையின் சங்கமமாகவும் தோன்றுகிறார். இவரை வணங்கும் பக்தர்கள் எளிதில் வாழ்வை எதிர்கொண்டு அதில் ஆனந்தத்தைக் காண முடியும் என்பதன் கருத்தாக ஆத்யந்தப் பிரபு உருவம் உள்ளது.
சென்னை தரமணி அருகிலுள்ள மத்திய கைலாஷ் கோயிலில் ஆத்யந்த பிரபுவுக்கு சந்நிதி உள்ளது. சென்னையை அடுத்த வல்லக்கோட்டை தாண்டி வடக்கால் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஆத்யந்த பிரபு ஆலயத்தில் இவர்களை ஒருசேரத் தரிசிக்கலாம்.

பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!