அழைத்தவர்களின் தாட்சண்யத்திற்காக,விழாவிற்குச் சென்றவன் அந்த விழாவின் விசித்திரமான போக்குகளை எழுதினான். சக நிருபர்கள் அப்படி எழுதவில்லை. காரணம் எது செய்தி என்பதில் அவனது பார்வை பிறரிடமிருந்து மாறுபட்டிருந்தது.
ஒரு விழாவின் தேசிய முக்கியத்துவத்தைக் கருதி, அது பற்றி முழுமையாக செய்தி எழுத வேண்டும் என்று நினைத்துக் காத்திருந்தவனுக்கு மேடையின் விபரீதம் அவனது செய்தியை திசை மாற்றியது. ஹிண்டு வாசகர்களுக்கு சுவையாக இருந்த அந்தச் செய்தி ஆல் இண்டியா ரேடியோவில் அதிர்வலைகளைக் கிளப்பியது. என்ன நடந்தது?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வருடா வருடம் சுரங்க சட்ட திட்டங்களின்படி ‘பாதுகாப்பு வாரம்’ என்று ஒரு விழாவைக் கொண்டாடும். கருத்தரங்குகளில் சிலர் பேசுவார்கள், ஏதாவது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முத்தாய்ப்பான நிகழ்வுக்கு யாராவது ஒரு வி.வி.ஐ.பி. வருவது வழக்கம். சில வருடங்களில் அவன் வித்தியாசமாகவே செய்தி எழுதினான். அதாவது பாதுகாப்பு வாரத்தின் முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. காரணம் சுரங்க விபத்தில் ஒரு ஊழியர் பலியானார். இதை அவன் ஒரு சோகச் செய்தியாக ஹிண்டுவில் எழுதினான். மறுவருடம் ஒரு கருத்தரங்க நிகழ்வு இப்படிப்பட்ட ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டது. அப்போது நெய்வேலி இன்ஜினியர்களில் சிலர் சொல்வதுண்டு, ‘‘நிறுவனத்தில் பாதுகாப்பு வாரம் நடைபெறும்போது, ஹிண்டு நிருபரை விடுமுறையில் வெளியூருக்குச் செல்ல நிர்பந்திக்க வேண்டும். அவர் ஊரில் இருந்தால் இப்படிதான் செய்திகள் வருகின்றன.’’
அந்த வருடம், பாதுகாப்பு வார விழா முதல் 6 நாட்கள் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்தது. அவனுக்கு எழுதுவதற்கு விசேஷ செய்தி எதுவுமில்லை. 7ஆம் நாள் பாதுகாப்பு வாரத்தின் நிறைவு விழா. பிரதான விருந்தினர் தன்பாத்தில் இருந்த சுரங்கத்துறை டைரக்டர் ஜெனரல். சுரங்கப் பாதுகாப்பின் அதி உயர் அதிகாரி அவரே. அந்த விழாவில் என்.எல்.சி. சேர்மன் ஜி. எல் டண்டன் வரவேற்புரை ஆற்ற மேடையில் இருந்த மைக்குளைப் பிடித்தார், தன் உயரத்திற்கு சரிசெய்து கொள்வதற்காக. ஆனால் ஒரு மைக்கை தொட்டதும், ஷாக் அடித்தது. அப்படியே கீழே விழுந்துவிட்டார்.
சேர்மன் இப்படி கீழே விழுந்ததும், மேடையில் இருந்தவர்கள் அவரைத் தூக்கி நிறுத்தினார்கள். அவர் கொஞ்சம் தடுமாறினார். முன் வரிசையில் இருந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் விஸ்வநாதன் உடனே அவரை காரில் ஏற்றி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். பின்னால் சென்ற என்.எல்.சி. ஜீப்பில் அவனும் தொற்றிக் கொண்டான். ஏனென்றால் சேர்மன் அவனது நெருங்கிய நண்பர். மருத்துவமனையில் சேர்மனுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது.
சற்று நேரம் படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருக்கு பதற்றம் நீங்கியது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். இருந்தாலும் அரைமணி நேரம் மருத்துவர்கள் அவரை தம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அடுத்து விழா நிறைவடையும் சமயத்தில் அவர் அதே மேடைக்குச் சென்றார். அவர் கையில் ஒரு ரிமோட் மைக் கொடுக்கப்பட்டது. அவர் அப்போது சொன்ன ஒற்றை வாக்கியம், ‘‘I became a victim of what all I wanted to say’’. என்ன ஆன்டிகிளைமேக்ஸ் பாருங்கள். அந்த நிருபருக்கு அதுதானே செய்தி.
தன் செய்திக் கட்டுரையை இப்படித் தொடங்கினான் அவன், ‘‘பாதுகாப்புப் பற்றி பேச வேண்டுமென்றால், மேடை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அங்கே பாடம் சொல்லிக் கொடுக்க பாதுகாப்பில்லாத மைக் கிடைத்தது.’’
இப்படித் தொடங்கிய தன் செய்திக் கட்டுரையில் ஆல் இண்டியா ரேடியோ மைக்கை பிடித்தபோதுதான் சேர்மன் ஷாக் அடித்து கீழே விழுந்துவிட்டார் என்று எழுதினான். சற்றே நீளமான அந்த செய்தி, நல்ல ஆங்கில நடையில் சுவையாக எழுதப்பட்டிருந்ததால், ஹிண்டு பத்திரிகை அந்த செய்தி எல்லா பதிப்புகளுக்கும் செல்லும்படியாக நடுப்பக்கத்தில் ஒரு பெட்டிச் செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தி வேறு இடத்திலிருந்து அதிர்வலைகளைக் கிளப்பியது.
டெல்லியில் இருந்த ஆல்இண்டியா ரேடியோ டைரக்டர் ஜெனரல் இந்தச் செய்தியைப் படித்ததும், புதுச்சேரி ஆல்இண்டியா ரேடியோ டைரக்டரை உலுக்கு உலுக்கு என்று உலுக்கினார். ‘‘என்ன நிர்வாகம் உங்களுடையது?’’ அந்தச் சேர்மனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் யார் பொறுப்பு? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதனால் மறுநாள் மதியம் நெய்வேலிக்கு வந்த அப்போதைய புதுச்சேரி ஆல்இண்டியா ரேடியோ டைரக்டர் திருமதி. அகிலா சிவராமன் நெய்வேலி, விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தபடி அந்த ஹிண்டு நிருபரை போனில் கூப்பிட்டார். ‘‘உங்களை விசாரிக்க வேண்டும், விருந்தினர் இல்லத்திற்கு வாருங்கள்’’ என்றார்.
அவன், ‘‘நான் ஏன் வரவேண்டும்? என்னை விசாரிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நான் உங்களுடன் வேலை செய்யும் ஊழியன் இல்லை. நீங்கள் அரசுத்துறை நிர்வாகி. நான் தனியார்துறை செய்தியாளர். உங்கள் கட்டுப்பாட்டில் நான் இல்லை.’’
இதைக்கேட்ட அந்தப் பெண்மணி ‘‘நான் உங்கள் வீட்டிற்கு வந்து விசாரிக்கட்டுமா” என்று கேட்டார். அவன் சொன்னான், ‘‘எங்கள் வீட்டிற்கு வரலாம்? காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம், அவ்வளவுதான்” என்றான்.
‘நீங்கள் பொதுவாக எழுதியிருக்கலாமே? ஆல் இண்டியா ரேடியோவின் மைக் என்று குறிப்பிட்டிருக்க வேண்டாமே’ என்றார். அவன் சொன்னான், ‘‘அது உங்களைக் காப்பாற்றி இருக்கும், ஆனால் உண்மையை காப்பாற்றியிருக்காது. உண்மையை மறைத்து நான் எதையும் எழுதுவதில்லை. ஆனால் நீங்கள் என்னை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விசாரிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். என் ரிப்போர்ட் மீது குறை கண்டால் எங்கள் ஆசிரியருக்குப் புகார் செய்யுங்கள்.’’
இதைக்கேட்ட அந்த பெண் டைரக்டர் புதுச்சேரிக்கு திரும்பினார். நீளமான புகார் கடிதத்தை ஹிண்டுவுக்கு அனுப்பினார். ஹிண்டு ஆசிரியர் எப்போதும் மெமோ கொடுப்பது போல் கேள்விகள் கேட்க மாட்டார். விசாரணை இருக்காது. ‘‘இந்தக் கடிதத்தை அனுப்பி இருக்கிறோம், உங்கள் தரப்பைத் தெரிவியுங்கள்’’ அதுதான் வாசகம்.
ஹிண்டு செய்தி ஆசிரியர், அந்தக் கடிதத்தின் நகலை அனுப்பி For Comment என்று எழுதியிருந்தார் அவ்வளவுதான். இதற்கிடையே என்.எல்.சி. நிர்வாகம் தங்கள் தலைமை மின்சாரப் பொறியாளரைக் கொண்டு மேடை ஷாக் தொடர்பாக விசாரணை செய்தது, அவர் கொடுத்த அறிக்கையில், “பழுதாகி பாதுகாப்பில்லாமல் இருந்தது, ஆல் இண்டியா ரேடியோ மைக்தான் என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருந்தது.’’
அவன் தன் பதிலாக அந்த அறிக்கையின் நகலை செய்தி ஆசிரியருக்கு அனுப்பி வைத்தான். அத்தோடு விஷயம் முடிந்தது.
அதே சமயத்தில், ‘சண்டே’ ஆங்கில வாரப் பத்திரிகை தன் இதழில் நயமான ஆங்கில மொழிநடைக்கு இந்தச் செய்தி ஒரு உதாரணம் என்று குறிப்பிட்டு, செய்தியை அப்படியே வெளியிட்டது. இது அவனுக்கு வேறு பத்திரிகையில் கிடைத்த ஒரு அங்கீகாரம்.
Leave a comment
Upload