இந்து சாஸ்திரங்களில் பால் கொடுக்கும் பசுவிற்கு இணையான ஒரு தெய்வமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பசு இருக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு 'கோமாதா' என்ற சிறப்பான பெயரும் உண்டு. 'கோ' என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும். கோமாதா என்று அழைக்கப்படும் பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், 33 கோடித் தேவர்களும், 48,000 ரிஷிகளும் வீற்றிருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபொழுது நந்தா, சுசீலை, பத்திரை, சுரபி, சுமனை என்னும் ஐந்து பசுக்கள் தோன்றின. இவற்றின் சந்ததிகளே இன்றளவும் கோமாதாவாக நமக்குச் சகல செல்வங்களையும் அளித்து வருகின்றன.
கோமாதாவைச் சிரத்தையுடன் வணங்கினால் சாப - பாவ தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறது விஷ்ணு புராணம்.கோமாதாவைச் சிரத்தையுடன் வணங்கிடப் பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.
பசுவாகப் பிறப்பதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன. பசுவைப் போற்றியவர்கள், அடைந்த நன்மைகளுக்கு நம் புராணங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. இதனால் தான் நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் பசுக்களை தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர்.
குலம் காக்கும் கோமாதாவை வழிபடுவதன் மூலம் அனைத்து தெய்வங்களையும் பூஜித்த பலன் கிடைக்கும். கோமாதாவைப் பூஜிப்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணியலோகத்தை அடைவார்கள்.
பசுவின் உடலில் வீற்றிருக்கும் தெய்வங்கள் :
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.
பசுவின் தலை – சிவபெருமான்
நெற்றி – சிவசக்தி
வலது கொம்பு – கங்கை
இடது கொம்பு – யமுனை
கொம்பின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகளும்,
கொம்பின் அடியில் – பிரம்மா
மூக்கின் நுனி – முருகன்
மூக்கின் உள்ளே – வித்யாதர்கள்
இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
இரு கண்கள் – சூரியன், சந்திரன்
வாய் – சர்பசுரர்கள் (சந்திர பகவான் என்றும் கூறுவார்கள்)
பற்கள் – வாயுதேவன்
நாக்கு – வருணதேவன்
நெஞ்சு மத்திய பாகம் – கலை மகள்
கழுத்து – இந்திரன்
மனித்தலம் – இயமனும், இயக்கங்களும்
உதடு – உதயாத்தமன சந்தி தேவதைகள்
முரிப்பு (கொண்டை) – பன்னிரு ஆதித்தியர்கள் (சூரியர்கள்) மற்றும் ருத்ரன்
மார்பு – சாத்திய தேவர்கள்
வயிறு – பூமி தேவி
கால்கள் – அனிலன் என்னும் வாயு தேவன்
முழந்தாள் – மருத்து தேவர்
குளம்பு – தேவர்கள்
குளம்பின் நுனி – நாகர்கள்
குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
குளம்பின் மேல்பகுதி – அரம்பையர்
முதுகு – உருத்திரர்
யோனி – சப்த மாதர்(ஏழு மாதர்)
குதம் – இலட்சுமி
முன் கால் – பிரம்மா
பின் கால் – உருத்திரன், தன் பரிவாரங்களுடன்
பால் மடி (முலை) – ஏழு சமுத்திரங்கள் (சரஸ்வதி என்றும் கூறுவர்)
சந்திகள் தோறும் – அஷ்டவசுக்கள்
அரைப் பரப்பில் – பிதிர் தேவதை
வால் முடி – ஆத்திகன்
உரோமம் – மகா முனிவர்கள்
எல்லா அங்கங்கள் – கற்புடைய மங்கையர்
மூத்திரம் – ஆகாய கங்கை (லட்சுமி என்றும் கூறுவார்கள்)
சாணம் – யமுனை
சடதாக்கினி – காருக பத்தியம்
இதயம் – ஆகவணியம் (எமன் என்றும் கூறுவார்கள்)
முகம் – தட்சரைக்கினியம்
எலும்பு, சுக்கிலம் – யாகத்தொழில் முழுவதும்
எல்லா துவாரங்கள் – வாயு
கால்கள் – சப்த மருத்துக்கன்
வயிறு -அக்னி
மலத்தில்-கீர்த்தியும், கங்கையும்
மல ஜலம் கழிக்கும் இடம் – லட்சுமி
வால் – தர்ம தேவதை
பூட்டுக்கள் – சித்தர்கள்
பசுவின் அசைவில்- காரிய சித்தியும், தவமும், சக்தியும்
இப்படி, பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர். பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதியை நோக்கி பசுவின் பிருஷ்டபாகம் இருக்கும் படி செய்து பகவானும் மகாலக்ஷ்மியை பார்த்துக் கொள்வது போலச் செய்கிறார்கள்.
“கோ பிராமனேப்ய சுபமஸ்து நித்யம்
லோகா சமஸ்தா சுக்னோ பவந்து”
என்ற ஸ்லோகத்தின் படி பசுவை அதி காலையில் பார்ப்பதும் வணங்குவதும் புண்ணியமாகும்.
பசுவுக்குத் தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்குப் பூஜை செய்வதற்குச் சமமாகும்.
கோமாதா பூஜை:
கோமாதா பூஜையின்போது, கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புது வஸ்திரம் சாத்தி, கழுத்தில் மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அகத்திக்கீரை, அறுகம்புல், சர்க்கரைப்பொங்கல் மற்றும் காய்கனிகளைக் கொடுக்கவேண்டும்.
நெய் விளக்கில் ஆரத்தி எடுத்து, பசுவின் காலில் விழுந்து வணங்க வேண்டும். பின்னர் மூன்று முறை கோமாதாவை வலம் வந்து வணங்க வேண்டும். பூஜையின்போது கன்றுடன் சேர்த்துத்தான் பூஜிக்க வேண்டும். வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள், பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளுக்குச் சென்று வழிபடலாம். மேலும் கோயில்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கோபூஜையில் கலந்துகொள்ளலாம்.
கோமாதா வழிபாட்டுப் பலன்கள்:
கோபூஜை செய்யும் பொழுது அனைத்து தெய்வங்களின் பரிபூரணமான அருள் நமக்குக் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன. மேலும்
பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் அனைத்தும் விலகும்.
கோமாதாவைத் தெய்வமாக நினைத்து விரதமிருந்தால், கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும். முன்னோருக்குச் செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி, கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்திக் கீரை கட்டை பசுகளுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் விலகிவிடும். பசுவிற்கு உண்பதற்குப் புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), அதன் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) நம்மைப் பிடித்த தீராத பாவங்கள் விலகும். பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு பலன்களை அள்ளித் தரும். கோமாதாவின் பிருஷ்டபாகத்தை வழிபட்டால் முன் ஜன்ம பாவங்கள் நீங்கும். காலையில் கண்விழித்ததும் தொழுவத்தில் பசுவைக் காண்பது சுபசகுனமாகக் கருதப்படும்.பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.
கோமாதா என்றுமே நம் குலமாதா!
அதனால் பசுவினை வணங்குவோம்!!
கோபூஜை செய்து புண்ணியங்களைப் பெறுவோம்!!!
Leave a comment
Upload