தொடர்கள்
கற்பனை
குற்றப் பரம்பரை - மோகன் ஜி (சித்திரம் -தேவா)

20250513103600442.jpg

இராம கவிராயர் என்றொரு புலவர் இருந்தார். காமெடிக் கவிதையில் கலக்கியவர்.

இவர் ஒருமுறை திஷ்ணாப்பள்ளிக்கு (அப்படித்தான் திருச்சியை எங்க தாத்தா சொல்வாரு) உச்சிப்பிள்ளையாரை சேவிக்கப் போனாராம்.

'நல்லப் புத்தியை எல்லாருக்கும் குடு புள்ளையாரப்பா'ன்னு வேண்டிகிட்டு கீழே இறங்க ஆரம்பிச்சாரு. சிலுசிலுன்னு காவேரிக் காத்து ஆளைத் தள்ளுது.

'ஆஹா! சொகம்டா'ன்னு ஒரு பக்கமா உட்கார்ந்து காவிரியை வேடிக்கைப் பார்த்தாரு. கவிஞராச்சே? பிள்ளையார் மேல பாட்டுப் பாடலாமான்னு ஒரு யோசனை.

தன் இடுப்பைத் தடவிப் பார்த்துகிட்டாரு. மேல் அங்கவஸ்த்திரத்துல பணத்தை முடிபோட்டு பத்திரமாக இடுப்புலேல்ல கட்டியிருந்தாரு ?

பணம் பத்திரமாத்தான் இருக்கு! காத்து தாலாட்ட, கண் அசந்துட்டாரு நம்ம இராமகவி. எழுந்திருச்சிப் பார்த்தா சந்தியாகாலம் ஆகிடுச்சு.

‘நல்லா தூங்கினேன் போ’ன்னு எழுந்து இடுப்பைத் தொட்டு பார்த்துகிட்டாரு. பணமாச்சே!

அடடா ! அங்க அங்கவஸ்தத்திரத்துல முடிச்சுபோட்டு வச்சிருந்த காசை யாரோ களவாணிப்பய அவிழ்த்துகிட்டில்லே போயிருக்கான்?!

புலவருக்கு கோபமான கோபம். சுத்துமுத்தும் பார்த்தா ஒருத்தரும் இல்லே. அங்கே பிள்ளயார் தான் தேமேன்னு உட்கார்ந்திருக்காரு.

இவர்தான் முடிச்சை அவிழ்த்து காசை அடிச்சுட்டாரோன்னு பிள்ளையார் மேலேயே சந்தேகம்வந்துடுச்சி!

சட்டுனு பாடிட்டாரு பாருங்க:-

தம்பியோ பெண் திருடி தாயார் உடன்பிறந்த

வம்பனோ நெய்திருடி மாயனாம்-அம்புவியில்

மூத்தபிள்ளை யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே

கோத்திரத்துக் குள்ள குணம்.

புள்ளையாரே! உன் தம்பி முருகனோ வள்ளியம்மை மேல ஆசைவச்சு அவளை களவாண்டுகிட்டுப் போய் கண்ணாலம் கட்டினவன் ;

உன் அம்மா பார்வதிக்கு கூடப்பிறந்த உன் மாமனோ வெண்ணை நெய்ன்னு திருடறதே வேலையா இருந்தவன்;

அந்தக் குடும்பத்துல பொறந்த மூத்தப் பிள்ளையான நீ மட்டும் யோக்கியனாவா இருப்பே?!

நான் முடிச்சுப்போட்டு வச்ச பணத்தை நீதானே அவிழ்த்து அடிச்சுகிட்டு போயிட்டே?

உன்னைச் சொல்லி என்ன செய்ய? உன் கோத்திரமே களவாணிப் பய பரம்பரை தானே!

என்ன அழகிய கவிநயம்?

இராமக் கவிராயர் தொண்டை மண்டலத்து ஆளு. எங்க கடலூர் ஆசாமியா கூட இருந்திருக்கலாம். எங்க பெண்ணையாற்று தண்ணியைக் குடிச்சிருந்தா தான் இப்படில்லாம் கற்பனை ஓடும்.

அவங்கவுங்க பணத்தை பத்திரமா இறுக்கமா முடிஞ்சு வச்சுக்குங்க.

புள்ளையாரை நம்பி பூஜை ரூமுல தூங்கிடாதீங்க!