ஒரு தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்த முழுப்பக்க விளம்பரம் ஆங்கிலப் பத்திரிகை செய்தியாகுமா? ஆக்கினான் அவன். டெலிபிரிண்டர் வழியாக வந்த அவனது செய்தியை படித்த சென்னையிலிருந்த தலைமை நிருபர் கேட்டார், ‘‘என்னப்பா இது? இன்னொரு பத்திரிகை விளம்பரத்தை நமக்கு செய்தியாக்குகிறாயே?’’
அவன் சொன்னான், ‘‘இந்த ரிப்போர்ட்டின் இரண்டாவது பகுதியை இன்று மாலை அனுப்புகிறேன். அப்போது உங்களுக்குப் புரியும்’’ என்றான். மறுநாள் அது காலை முதல் பக்கச் செய்தியாக வெளிவந்தது. அன்று மட்டுமா? அவன் தொடர்கதை போல் பல நாட்களுக்கு அந்த விளம்பரத்தின் பின்விளைவுகளை எழுதி வந்தான். என்ன விளம்பரம் அது?
தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி விளம்பரத்துறை ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் முழுபக்க விளம்பரமாக வெளியிட்டது. அதில் மின்சாரக் கட்டணத்தை பாக்கி வைத்துள்ள, தென்னாற்காடு மாவட்டத்தின் பெரிய பெரிய விவசாயிகளின் பெயர்களும், நிலுவைத் தொகைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அத்துடன் விளம்பரத்தில் சற்றே அவதூறாக இவர்கள் ஏனோதானோக்களா? மிட்டாக்கள், மிராசுகள்! என்றபடி வாசகங்கள் இருந்தன. அவனுக்கு அந்த விளம்பரம் மட்டரகமானதாகப்பட்டது. அவன் அதனால் பாதிக்கப்படவில்லை என்றாலும்கூட அந்த விளம்பரம் கொடுத்த தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தித்துறையை சாடி தன் கட்டுரையை எழுதினான். அது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம். மின்சாரத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன். மாவட்ட கலெக்டர் சந்திரலேகா, மாவட்ட பி.ஆர்.ஓ. ம.நடராஜன் (அவர் சசிகலாவின் கணவர்). அந்த நிருபருடன் படித்தவர், உற்ற நண்பர்.
தன் ரிப்போர்ட்டை எழுதுவதற்கு முன்பு அவன் நடராஜனை சந்தித்து, ‘‘உங்கள் துறை இப்படியெல்லாம் விளம்பரம் தரலாமா?’’ என்று கேட்டான். மழுப்பலான பதிலே கிடைத்தது.
அன்று மதியம் சிதம்பரத்திற்கு வந்திருந்த விவசாய அமைச்சர் குழந்தைவேலுவிடம் இது பற்றிக் கேட்டபோது, ‘‘அவர்கள் மட்டும் மின்சாரக் கட்டணம் பாக்கி வைக்கலாமா?’’ என்று எதிர்க்கேள்வி கேட்டார்.
அவன் தன் இரண்டாவது பகுதி ரிப்போர்ட்டில், மந்திரி சொன்னதையும் எழுதினான். அத்துடன் ‘‘தனி நபர்களை பொதுவெளியில் அவமானப்படுத்துவது ஒரு அரசாங்கம் செய்யும் வேலையா?’’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தான்.
மறுநாள் இந்த செய்தி முதல் பக்கத்தில் பிரதானமாக வெளிவந்தது. இதைப் படித்ததும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விவசாயிகள் சொன்னார்கள், ‘‘சார், நேற்று வந்த விளம்பரத்தைப் படித்து நொந்து போனோம், ஆனால் இன்று எங்கள் சார்பான உங்கள் கட்டுரை ஆறுதலாக இருக்கிறது. நாங்கள் சொல்லாமலேயே எங்கள் தரப்பை எழுதியிருக்கிறீர்கள்’’ என்றார்கள்.
‘‘நாங்கள் நேரடியாக அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் சும்மா இருந்துவிட்டோம்; ஹிண்டு செய்தியைப் படித்த மாவட்ட கலெக்டரும், பி.ஆர்.ஓ. நடராஜனும் கொதித்துப் போனார்கள். அவனிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். அவன் சொன்னான், ‘‘விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவர்களை எனக்குத் தெரியாது. அவர்களை நான் தொடர்பு கொள்ளவும் இல்லை. அவதூறான விளம்பரம் என்னை அப்படி எழுதத் தூண்டியது.’’
ஆனால் விவகாரம் அந்த விளம்பரத்தோடும் மற்றும் ஹிண்டு கட்டுரையோடும் நின்றுவிடவில்லை. மறுநாள் கலெக்டர், ரெவின்யூ அதிகாரிகள், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் புடைசூழ கிராமங்களுக்குச் சென்று, விவசாய மின்கட்டணத்தை உடனே செலுத்துங்கள். கையில் பணம் இல்லையென்றால், வந்துள்ள வங்கி அதிகாரியிடம் நகைகளைக் கொடுங்கள். அவர்கள் கடன் தருவார்கள்’’ என்று ஈட்டிக்காரரைவிட மோசமாக நிலுவைத் தொகையை வசூலித்தார்கள்.
அவன் மறுநாளும் அதுபற்றி செய்தி எழுதினான். மறுபடியும் கலெக்டருடனும், அதிகாரிகரிகளுடனும் சண்டை. அரசாங்க தரப்பும் கெடுபிடி வசூலை ஓரிரு நாட்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அதிகாரிகள் படை தினம் ஓர் ஊர் என்று சென்று, நிலுவைத் தொகையை பெற கட்டாய வசூலில் இறங்கியது. ஒருநாள் அவன் கலெக்டர் சந்திரலேகாவைக் கேட்டான், ‘‘எங்கே போகிறீர்கள் சொல்லுங்கள், நானும் வருகிறேன்’’. அவர் சொன்னார், ‘‘அது உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் விவசாயிகளை எச்சரித்து விடுவீர்கள். முடிந்தால் எங்கள் வாகனங்களை பின்தொடர்ந்து வாருங்கள்.’’
அடுத்த நாள் அவன் அதிகாலை 4 மணிக்கே நெய்வேலியிலிருந்து புறப்பட்டு கடலூருக்கு ஸ்கூட்டரில் வந்தான். கலெக்டர் பங்களாவில் ஜீப்கள் நின்றுகொண்டிருந்தன. எங்கு செல்லப் போகிறார்கள் என்பதை அங்கிருந்தவர்கள் சொல்லவில்லை. எனினும் சற்று நேரமாகும் என்று தெரிந்ததால் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஓட்டல் சிவா என்ற உணவகத்திற்கு காலை காப்பி, சிற்றுண்டிக்காக சென்றான். அப்போது அந்த ஹோட்டல் வாசலில் இருந்த அரசாங்க ஜீப்பில் 50 டிபன் பொட்டலங்கள் ஏற்றப்பட்டன. ஜீப் டிரைவரைப் பார்த்து, ‘‘என்னப்பா அதிகாலையில் அரசாங்கம் இத்தனை பொட்டலங்களை வாங்குகிறது, என்ன விசேஷம்?’’
டிரைவர் சொன்னார், ‘‘ஐயா, குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு ஊரின் பெயரைச் சொல்லி அங்கே கலெக்டரும் அதிகாரிகளும் போகிறார்கள்’’ என்றான். அவனுக்கு துப்பு கிடைத்துவிட்டது. அவன், கலெக்டரின் வாகன வரிசை செல்வதற்கு முன்னதாகவே அந்த கிராமத்திற்குச் சென்றான். ஒரு மரத்தடியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, கலெக்டருடன் யார் யார் வருகிறார்கள்?- என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நோட்டமிட்டான். நிருபர் அங்கே தான் இருக்கிறார் என்பதை கலெக்டர் தெரிந்து கொண்டார். யார் அவருக்கு தகவல் கொடுத்தார்’ என்று வெடித்தார் கலெக்டர்.
அந்த கிராமத்தில் கலெக்டர் குழு யார் யாரை சந்தித்தது, எவ்வளவு பணம் திரட்டியது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு தன் செய்தியை எழுதிவிட்டான். மறுநாள் அந்தச் செய்தி வெளிவந்தவுடன், கலெக்டருக்கு கோபமோ கோபம். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார்:
‘‘கவர்னர் இப்போது புது உத்தரவு போட்டிருக்கிறார், விவசாயிகளைத் தூண்டிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று. உங்களையும் உள்ளே தள்ள முடியும்.’’ அவன் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான், ‘‘அம்மா, உள்ளே போய் வெளியே வந்தால் நான் மந்திரி’’. அங்கு அத்துடன் அந்தப் பேச்சு நின்றது. மறுநாள் காலையிலும் கலெக்டரின் வாகன வரிசையை பின்தொடர்ந்தான்.
இவர்கள் வடலூர் சாலையில் தான் சென்றார்கள் என்று வழியில் கேட்டு தெரிந்து கொண்டு கெடுபிடி வசூல் கிராமத்திற்குச் சென்றான். தகவலைத் திரட்டிக் கொண்டு கடலூர் திரும்பினான். தபால் அலுவலகத்தில் இருந்து நீண்ட செய்திக் கட்டுரையை தந்தியில் அனுப்பினான்.
அதாவது இந்தக் குழு எத்தனை வாகனங்களுடன், எத்தனை அதிகாரிகளுடன் எந்த கிராமத்தில் ரெய்டு நடத்தியது என்று விரிவாக எழுதினான். மறுநாள் காலை ஹிண்டுவின் முதல் பக்கத்தில் ‘‘Convoy Arrives. Operation On’’ என்ற தலைப்பில் ஐந்து கால செய்தி வெளிவந்தது. அது ஈரான் ஈராக் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம். அவனே அந்தத் தலைப்பைப் பார்த்துவிட்டு போர்முனைச் செய்தியோ என்று நினைத்துவிட்டான்.
வாசகர்களிடம் அந்தச் செய்தி ஒரு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது. திடீர் ரெய்டு வசூல் நிறுத்தப்பட்டது. அந்த விவகாரத்தில் அவன் ஒரு ஒற்றைப் போராளி.
Leave a comment
Upload