ரிஷப வாகனத்தில் மயூரநாதர் பஞ்ச மூர்த்திகளோடு ஆலயத்திலிருந்து எழுந்தருளி காவிரியாற்றினை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே வாசிக்கின்ற மல்லாரி உருப்படி காதில் விழுந்தது. காவிரிக் கரையோரம் பெருங்கூட்டம் ஆரவாரத்துடன் சாமி காவிரி கரைக்குவந்து தீர்த்தம் தரும் தரிசனத்திற்கு காத்திருந்தார்கள். ஆற்றிலே இறங்கிய சிறுவர்களும்,
நடுத்தர வயதுக்காரர்களும் காவிரியாற்றின் நடுவில் அமைந்துள்ள நந்தி மண்டபத்திலிருந்து தலைகீழாக குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
தீயணைப்புப் படை வீரர்கள் அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக இருந்தாலும், அதிசயமாக இந்த வருடம் காவிரியில் நீர் ஓடுவதால்,அவர்களது மகிழ்ச்சியைத் தடை செய்ய நினையாமல் அவர்களுக்கு துணையாகவே அவர்கள் அங்கிருந்தனர்.
சிவ வாத்தியங்கள் வேகமாக கேட்க, நிகழ்வின் வருனனையாளர்கள்
"கரவின்றி நன்மாமலர் "எனும் தேவாரப் பாடல்களைப் பாடி விளக்கமளித்தனர்.
கண்ணில் படும் இடங்களிலெல்லாம் அன்னதானங்கள் வழங்குவதாக பேசிக்கொள்ளும் பக்தர்கள்,இதோ வருகிறார் மயூரநாதர், அதோ அக்கறையில் தருமையாதீனகர்த்தர் வதான்யபரமேசுவர சுவாமியோடு காத்துக்கொண்டிருக்கிறார் மயூரநாதரின் வருகைக்காக.
திருவாவடுதுறை ஆதீனக்கர்த்தரின் வருகையைத் தொடர்ந்து மேலும் ழுக்குத் துறை பரபரப்பானது. நடுவாற்றில் கைகோர்த்துக்
கொண்டு அந்த ஒரு நிமிட நிகழ்விற்காக வருடம் முழுவதும் காத்திருக்கும் எண்ணற்ற உள்ளூர் பக்தர்களில் நானும் ஒருத்தியாக என் கணவரோடு நிற்கின்றேன். இன்று காவிரி கரைக்கு வர முடியாதவர்கள் நாளைய தினம் முடவன் முழுக்கு அன்று வந்து இங்கு மூழ்கி நீராடினாலும் பாவங்களைப் போக்குவதாக ஐதீகம்.
அபிசேகம் முடிந்து அஸ்திரதேவரை எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கியதும்
அதிர்வேட்டுகள் முழங்க, நாலாப் புறங்களிலும் நீர் வாரி இறைத்த பக்தர்கள்
ஹோய்...ஹோய்...
சிவசிவா.. சிவாயநம என்ற சப்தம் விண்ணைப் பிளக்க என் கணவரோடு நீரில் மூழ்கி எழுகிறேன்.. மீண்டும்.. மீண்டும் எழுகிறேன் கணவரைக் காணவில்லை. தனிமையாய் ஈசி சேரில் அமர்ந்தபடி கண்களில் நீர் கோர்த்திருக்க...கடந்த வருட மயிலாடுதுறை கடைமுகத் தீர்த்தவாரி நினைவுகளிலிருந்து விடுப்பட்டாள் கோமதி.
என்னம்மா ? ஏன் அழுகை கேட்டாள் மருமகள்.
நாளைக்கு மாயவரத்திலே கடை முழுக்கு. எனக்கு பழைய ஞாபகம் வந்தது. டீவியிலே வேற போடறான்,
ஜலம் இந்த வருடமும் நன்னாப் போறதாம் எனறு கோமதி சொல்லும்போதே மகிழ்ச்சியோடு,
தன் ஆசையை வெளிப்படுத்துயது அவளது கண்கள்.
அம்மா.. அவர்தான் சொல்லிட்டாரே இந்த முறை போக வாய்ப்பில்லைனு, விடுங்கோ தொடர்ந்து அப்பா இருந்தவரை எத்தனை வருடம் ஸ்நானம் பண்ணியாச்சு,
எத்தனை வருசம் இருக்கும் ? என மருமகள் கேட்டதற்கு
ஐம்பது வருசத்துக்கும் மேல என்றாள் பரிதாபமாக.
பிறந்த ஊரு, வாக்கப்பட்டதும்
அதே ஊரு. இதுநாள் வரை மூழ்கினது போதும்னு நினைங்கோ.மேலும் உங்களுக்கும் வயசாகிட்டு. அவருக்கோ,எனக்கோ இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்று கோமதியை அடக்கிவிட்டாள் மருமகள்.
மருமகளே சொல்லிட்டா..இனி
அவன் நிச்சயம் ஊருக்கு கிளம்பி வரமாட்டான் என நினைத்த கோமதி
"நம்மவர்னு ஒருத்தர் இருக்கிறவரைக்கும்தான், நாம் நினைத்தபடியே
நல்லபடியாக நடந்தது.
இருந்த வாடகை வீட்டையும் காலி பண்ணிகிட்டு வந்தாச்சு.பிறந்து, வாழ்ந்த ஊரிலே ஒரு அடையாளம் கூட இல்லாமல் போறதென்பது எத்தனை வலி.
இவாளுக்குப் புரியுமா இதெல்லாம்!?
தனக்குனு வரும்போது கண்டிப்பாகப் புரியும்.
ம்..ம். அவர் காலமானதும் இவாளை நம்பித்தானே இருக்க வேண்டியிருக்கு என தன் விருப்பத்தை மறந்து மனதை தேற்றிக்கொண்டாள் கோமதி.
அலுவலகத்திலிருந்துஅபிசேக் வீட்டிற்கு வந்ததும்,
வாம்மா..சென்னைக்
கண்காட்சி இன்று கடைசி நாள். போய் பார்த்துவிட்டு வரலாம் என மனைவி குழந்தையோடு கிளம்பத் தயாரானான். விருப்பமில்லை என்றாலும் போய்தான் ஆகவேண்டிய கட்டாயத்தால் கிளம்பினாள் கோமதி.
அம்மா..நீங்க குழம்பு வைப்பேளே, அந்த கற்சட்டி இங்கே கிடைத்தால் பார்த்து வாங்கி கொடுங்க என்ற மருமகளிடம் சரிம்மா இருந்தால் பார்த்து வாங்கிடலாம்,ஆனால் எங்க மாயவரத்துக் கடைகளில் கிடைப்பது மாதிரி இங்கே கிடைக்காது என்றாள்.
அம்மாவிற்கு எப்போதும் மாயவரம் நினைப்புதான்.. எல்லா ஊரும் ஒன்னுதான்மா இவர்கள்தான் அங்கேயும் கடை போடுவார்கள் என்றான்.
இவர்கள் போன நேரம்
கடைசி நாளென்பதால் பாதி கடைகளே இருந்தன.மீதக் கடைகள் தங்களது கடைகளை மூடிக்கொண்டு அடுத்த இடத்திற்கு புறப்படத் தயாராகி கொண்டிருந்தனர்.
அபிசேக்,மருமகள், குழந்தை ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, தனக்கு எதுவும் வேண்டாம் என்ற கோமதி ஓட்டல் வாசலில் அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள்.
"டீசல் 500/- ரூபாய்க்கு போட்டியா? பாண்டியிலே பாக்கி 500/- போட்டுக்கிடு, வியாபாரம் பண்ணனும்னா விடியறதுக்குள்ளே மாயவரம் போயிடனும் என சொல்லியபடி TATA Ace வாகனம் ஒன்று மேல்பகுதி மூடப்பட்டு விற்பனை பொருட்களுடன் புறப்படத் தயாராக இருந்தது.அவர்கள் பேசியதும் கோமதியின் காதில் விழுந்தது.
மாயவரம் என்ற சொல் காதில் விழுந்ததும் அவளிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இது ஒரு வாய்ப்போ! நமக்காகவே இறைவன் அனுப்பிய வாகனமோ இது, எனத் தோன்றியது கோமதிக்கு.
எதையும்,யாரையும் பற்றி யோசிக்காமல் வண்டியில் பின் பக்கத்தில் ஏறிவிட்டாள். ஏறி
அமர்ந்தபின்தான் யோசித்தாள்,எப்படி ஏறினோம்? எது நம்மை ஏற்றியது?! அபிஷேக் என்ன நினைப்பான்? எங்கு தேடுவான் ? பாவம் என்ற நினைப்பு வந்தாலும், நாம் நினைத்ததை செய்ய ஒரு வாய்ப்பு தானாக வந்ததாகவே நினைத்தது கோமதியின் மனம்.
நம்மைப்பற்றி கவலைக்கொள்ளாத
வர்களைப் பற்றி நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும் என தேற்றிக் கொண்டாள்.
வாகனத்தில் கிடந்த பிளாஸ்டிக் பொம்மைகளில் கருங்குரங்கு பொம்மை ஒன்று தனக்கு போட்டியாக வந்த கோமதியைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
விடிவதற்கு முன்னேயே
வாகனம் காவிரிக் கரையில் தரைக் கடைகள் போடுமிடமான லாகடம் எனும் பகுதியை வந்தடைந்திருந்தது.
பழக்கப்பட்ட இடமாகையால்,
அழைத்து வந்து இறக்கி விட்டவர்களுக்கு நன்றியை சொல்லிவிட்டு காவிரியின் தென்கரையை அடைந்தாள் கோமதி.
வாடகைக்கு குடியிருந்த தெருவிற்குச் சென்ற கோமதிக்கு அடையாளமே தெரியாமல் மாறி இருந்தது அவர்கள் வாழ்ந்த இடம்.
இரண்டு வருடத்தில் இத்தனை மாற்றங்களா?
மரபுகளை உருவாக்குவதுதான் கடினம்,மாற்றுவது சுலபம்.
அம்மாவைக் கானாத அபஷேக், கண்காட்சி பகுதியில் தேடி முடித்து,மனைவி,
குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு திரும்பவும் வந்து அந்த இடத்திலேயே காத்திருந்தான்.
அம்மாவிற்கு இடம் பற்றி ஒன்றுமே தெரியாதே,போன் கூட கிடையாது. அப்பா இருந்தவரை நாமும் அம்மாவிடம் பாசமாக இருக்கவில்லை
ஊருக்குப்போவதும் வருவதுமாக இருந்தோம்,வீட்டை காலி செய்யச் சொன்னதினாலே
தான் அம்மாவிற்கு சென்னை வர வேண்டியிருந்தது.
எங்கள் கூட இருப்பது பிடிக்கலையா? வேற என்னவாகியிருக்கும் என்ற யோசனையில் பித்துப்பிடித்தவன் போலிருந்தான் அபிஷேக்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தினை வெளியிலேயிருந்தே தரிசித்த கோமதி முழுக்குத் துறைக்கு வந்தாள். அந்த விடியற்காலை நேரத்திலும் கூட்டமாக மக்கள் நீராடிக் கொண்டிருந்தனர்.
காவிரியில் நீர் சீராக ஓடிக் கொண்டியிருந்தது. மெதுவாக கால்பதித்து இறங்கியவள் சில்லென்ற நீரின் ஸ்பரிசத்தில் பாதத்திலிருந்து உயிர் நகர்ந்து உச்சந்தலைக்கு ஏறியது போலிருந்தது.
மூழ்கினாள்,பிறந்து, வளர்ந்து,மணமாகி, கடந்த வருடம் கணவரை இழந்து, வாழ்வதற்கு ஏதேனும் பாக்கியில்லாமல் ஆழ்ந்து மூழ்கியவள் மனசோடு உடலும் லேசானது மாதிரி இருந்தது. சந்தோஷமாக எழுந்து மீண்டும் மூழ்கினாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் பாலம் தாண்டியுள்ள படித்துறையில் பரபரப்புக் கூடியது.
மிதந்தபடி வந்த ஒரு பெண்ணின் பிணத்தை அங்கே நீராடிய ஒருவர் இழுத்து கரையில் போட்டார்.
மாயவரத்து மாமிதான் இவங்க.. பேர் தெரியலை.. அச்சச்சோ! நாளும் கிழமையுமா இப்படியாயிடுத்தே,
நல்ல சாக்காடுதான் என வருத்தப்பட்டு மீண்டும் மூழ்கி வீடு திரும்பினாள் ஒரு மாமி.
போலீஸ் வந்து பிணத்தை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றது.
இவை பற்றிய எந்தச் சுவடுகளும் இல்லாமல் காவிரி ஓடியதில்,கடைமுக தீர்த்தவாரி மதியம் மூன்று மணிக்கு நடந்து முடிந்தது.
அம்மாவின் சடலத்தை டிவியில் செய்தியாகப் பார்த்த அபிஷேக் மாயூரத்திற்கு வந்து சேர்ந்தபோது மாலை நேரமாகிருந்தது.
காலையில்தான் சடலத்தை பெறமுடியும் என்றதினால் இரவு தங்கிய அபிஷேக் மறுநாள் காலை உடலைப் பெற்று வைதீக முறைப்படி எரித்து காவிரியில் மூழ்கி பூர்த்தி செய்தான்.
தனது எல்லா அடையாளங்களையும் இழந்த கோமதிமாமி தனது இலக்கான கடைமுக முழுக்கை முடித்து,முடவன் முழுக்கன்று அஸ்தியாகி காவிரியில் கலந்து சமுத்திரத்தை நோக்கிப் பயணம் செய்தாள்.
தொடர்கள்
கதை
Leave a comment
Upload