நகுஷனின் மகனும் பரத குலத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தியுமான யயாதி (கசனை மணக்க முடியாமல் போன பிறகு) அரசகுமாரி சர்மிஷ்டையால் கிணற்றில் தள்ளப்பட்ட அசுர குரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியை கிணற்றிலிருந்து மீட்டான்; அவளை மணந்தான். பின்னர் தேவயானியால் வேலைக்காரி ஆக்கப்பட்ட சர்மிஷ்டையை அவளுக்கு தெரியாமல் மணந்து, சுக்ராச்சாரியாரின் சாபம் பெற்று உடனே மூப்பும் அடைந்தான்.
இயற்கைக்கு மாறாக கிழத்தன்மை அடைந்த யயாதி தன் 5 அழகிய புத்திரர்களிடம் (அரசகுமாரர்கள்) தன் மூப்பை பெற்றுக்கொண்டு இளமைப் பருவத்தை கொடுக்க வேண்டினான். அதற்கு கடைசி குமாரன் புரு ஒத்துக்கொண்டான். புரு ராஜபரிபாலனம் செய்து கீர்த்தியும் பெற்றான்.
புருவை தீண்டி மூப்பை கொடுத்து இளமை அடைந்த யயாதி தன் இரு பத்தினியுடன் காம சுகம் அனுபவித்து திருப்தி அடையாததாலும், உண்மையை உணர்ந்ததாலும், மகனிடம் மூப்பை திரும்பப் பெற்றுக்கொண்டான்; பின் வனம் சென்று தவம் செய்து, சொர்க்கம் அடைந்தான்.
குறிப்பு: சாத்யகி யயாதி வழி வந்தவன்.
குறளும் பொருளும்
நினைத்தாலே பெரு மகிழ்ச்சியை தருவதால், கள்ளை விட காமம் இனிமையானது.
உள்ளக்களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு 1281
நினைத்தாலே இனிக்கும்,
பார்த்தாலே பரவசம்,
கள் உண்டாக்காது; காமம் உண்டாக்கும்.
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது 1201
ஆதலால் காமம், கோபம், மயக்கம், இவை மூன்றையும் பெயரில்லாமல் செய்தால் துன்பம் தீரும்.
காமம் வெகுளி மயக்கம் இவைம்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய் 360
ஆசை என்பது எல்லா உயிர்களுக்கும் எப்போதும் தவறாது பிறப்பு தரும் விதை.
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப் பிறப்பீனும் வித்து 361
அத்தகைய ஆசைக்கு அஞ்சி வாழ வேண்டும்; காரணம் ஒருவரை வஞ்சிப்பதெல்லாம் ஆசைதான்.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பதோரும் அவா 366
என்னதான் படித்தவராக இருந்தாலும், உலகத்தோடு ஒட்டி வாழ்வதை கற்கவில்லை எனில் அவர்கள் மூடர்கள்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார் 140
கருணையில் வரும் நிலையான இன்பத்தை விரும்புவோர் பிறருக்குரிய பொருளை கவர்வதால் பெறும் சிறிய இன்பத்திற்கு ஆசைப்பட்டு அறம் அல்லாத செயல்களை செய்ய மாட்டார்.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டுபவர் 173
ஒரு பொழுது கூட வாழ்வது நிச்சயம் இல்லை; ஆனால் வாழப் போவதாக எண்ணிக் கொண்டிருப்பதோ பல கோடி.
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல 337
நிலைத்து நில்லாதவை எல்லாம் நிலையானது என்று நினைப்பதுதான் அறியாமை (அறிவில்லாதனம்/ அல்ப தனம்).
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை 331
தன்னைத் தானே விரும்புகிறவன் கொஞ்சம் கூட தீமை செய்ய மாட்டான்.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால் 209
தனக்கு தீமை வேண்டாம் என்றால் பிறருக்கு தீமை செய்யக்கூடாது.
தீப்பால தான் பிறர்கண் செய்யற்க நோய்ப் பால
தன்னை அடல் வேண்டாதான் 206
தனது உயிருக்கு துன்பம் தருவது இது எனத் தெரிந்தவன் பிற உயிர்களுக்கு எப்படித்தான் அதை செய்ய முடியும்?
தன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல் 318
எந்த கொடிய பகையில் இருந்தும் தப்பிக்கலாம்; கெடுதல் செய்த பகையில் இருந்து தப்பிக்க முடியாது.
எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின் சென்றடும் 207
எல்லா உயிர்களையும் கருணை (ஜீவகாருண்யம்)யுடன் போற்றுபவர்களுக்கு தன் உயிரைப் பற்றிய அச்சம் இல்லை.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை 244
இளமையும் நிலையற்றது (செல்வம் மட்டுமன்று). நாள் என்பது ஒன்றைப் போலவே அடுத்தடுத்து பல நாட்களாக வந்து சிறுகச் சிறுக உயிரை அறுத்து விடுகிற ரம்பம் என்பதை நாம் உணர வேண்டும்.
நாள்என ஒன்று போல் காட்டி உயிரீரும்
வாள் அது உணர்வார் பெறின் 334
ஒருவனுக்கு விதிப்படி வாய்த்ததை விட கோடி கோடியாக சேர்த்தாலும் அனுபவிக்க முடியாது.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது 377
ஆதலால் பேச முடியாமல், விக்கல் எடுத்து சாவதற்குள் நல்ல காரியங்களை செய்ய வேண்டும்.
நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும் 335
Leave a comment
Upload