தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 15 : “மிரட்சி” – மோகன் ஜி

20260227163605958.jpg

இன்று காலை நண்பர் சுந்தர்ஜியுடன் அலைபேசியில் உரையாடிய போது, சங்க இலக்கியம் குறித்துப் பேச்சு வந்தது. குறுந்தொகையில் ஏதும் எழுதுங்களேன் எனக் கேட்டார். அப்போது சொன்ன பாடல் இது;

தன் மனதைக் கொள்ளைகொண்ட ஆரணங்கு தன்னை நிலையிழக்க வைக்கும் செய்தியை, தலைவன் தன் தோழர்களுக்கு விவரிக்கும் அழகை இப்பாடல் சொல்கிறது.

குறிஞ்சித்திணையில் சத்தியநாதனார் இயற்றிய 119ஆம் பாடல்

.

சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கியாஅங்கு

இளையள் முளைவாள் எயிற்றள்

வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.

பொருள்:-

உடலில் அழகிய வரிகளுடைய வெண்ணிறப் பாம்பின் சிறிய குட்டி எதிர்ப்படும்போது, காட்டுயானை மிரட்சி கொள்வது போலே, முளைவிட்டதே போலும் ஒளிவீசும் பல்வரிசையுடன், கைகளில் வளைகளை அணிந்திருக்கும் அந்தக்கன்னி என்னை மருட்டி வதைக்கிறாள்.

பதவுரை:-

வெள்ளரவு - வெண்ணிற நாகம்

அவ்வரிக் குருளை- அழகிய வரிகள் கொண்ட குட்டி

கான யானை - காட்டுயானை

அணங்கியாஅங்கு- மருட்டுவதே போல

இளையள் - இளம் கன்னி

முளைவாள் எயிற்றள்- முளைவிட்டது போலும் ஒளிவீசும் பற்களுடையவள்

வளையுடைக் கையள் - கைகளில் வளையல்கள் அணிந்தவள்

எம் அணங்கியோளே- என்னை நிலைதடுமாறவிட்டு வதைக்கிறாளே

இதில் சிறிய இளம்கன்னியாகிய தலைவிக்கு பாம்பின் சிறிய குட்டி உவமையாகவும்;

தலைவியின் கைகவளையல்களுக்கு பாம்புக்குட்டியின் உடல்வரிகள் உவமையாகவும்;

பலங்கொண்ட வீரனான தலைவனுக்கு காட்டுயானை உவமையாகவும் கொள்ளலாம்.

20260227163748369.jpg

அந்தக் காலத்திலிருந்தே நிலைதடுமாறி மிரள்வது ஆண்களுக்கு தலையெழுத்தாய்ப் போச்சு!