
“அடுத்த ஒரு சென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா பூமியில இடமிருக்கும்,, போய் வாடி அன்னக்கிளி”, இந்த வரிகள் எவ்வளவு வலி உடையதோ அதே வலியைத்தான் தமிழ்த் திரையுலகமும், தமிழ் மக்களாகிய நாமும் அனுபவித்துக்கொண்டிருகிறோம், இயக்குனர் இமயம் நம் பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களை இழந்து. அவர் இயக்குனர் இமயம் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர்.
வெள்ளித் திரையில் கிராமத்து வாழ்கையை அப்படியே பிரதிபலித்தவர்கள் மிகக்குறைவு. அதில் முதல் இடம் வகிப்பவர் பாரதிராஜா என்றால் அது மிகையாகாது. அதற்காக அவர் அந்த ஒரு இடத்திலேயே நின்றுவிடவில்லை நகரத்து நாகரகத்தையும் படம்பிடித்தவர்.
அவர் பல விதமான படங்களை இயக்கியிருந்தாலும் அவரின் படைப்புகளில் ஒன்றான, மூன்று தேசிய விருதுகளை வாங்கிய “கருத்தம்மா” என்ற திரைப்படம், மக்களின் மனதில் நெகிழ்ச்சியையும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதைவிட மேலாக மனம் பதைக்ககூடிய பெண் சிசுக் கொலை பற்றியும் பகிரங்கமாக பேசிய படம் கருத்தம்மா. இப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது.
என் சுதந்திரம், என் உரிமை என்று சுய விருப்புகளுக்காக மட்டும் “பெண்ணியம்” பேசும் பெண்கள் கட்டாயம் இப்படத்தை பார்க்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக பெரியார், பாரதியார் என்று பேசியவர்கள் பலர், ஆனால் அந்த பெண்கள் சிசுவிலேயே கொல்லப்படுவதை பற்றி உரக்க பேசிய படம்தான் கருத்தம்மா.
இந்த தடவையும் “பொட்ட” தான், இந்த தடவையும் மாடு ஆண் கன்றுதான் ஈன்றுள்ளது இதை விற்றுவிடுவதுதானே எனும்போது மாட்டை விற்கலாம் பொண்டாடியை (பெண் குழந்தைகளைப் பெறும் தாயை) விற்கமுடியுமா என்ற வசனங்களையும், காட்சிகளையும் பொருத்திய விதத்தை பாராட்டுவதா?, லாபக் கணக்கில் மட்டும் உயிர்கள் பார்க்கப்படுவதை நினைத்து வருதப்படுவதா? அல்லது இயக்குனரின் அமைதியான சமூகப் புரட்சியை நினைத்து வியப்பதா? என்று திணறடிக்கக் கூடிய காட்சியமைப்பு நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
“உங்கள மாதிரி ஆம்பளைங்க பொம்பளைகளக் கட்டிக்க காசு பணம் கேக்றதாலதான், எங்கள மாதிரி பொம்பளைங்கள நாயை விட கேவலமா மதிக்கறாங்க” இந்த வரிகள் நம் நாட்டில் பிறந்த ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் ரணமாக இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரே படத்தில் கல்வியறிவே இல்லாமல் பகுத்தறிவு பேசும் பாமரன்(பெரியார்தாசன்),
இது ஒரு சனியன் “பொட்டை” என்று வேண்டா வெறுப்பாக வளர்த்த பெண் “கருத்தம்மா” தன் குடும்பத்தையே தாங்கியது, இன்னொரு பெண் திருமணமாகி வரதட்சணையில் கொலை செய்யபட்டது, கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவிடு என்று கொடுத்த பெண் குழந்தை ஒரு மருத்துவராகி வந்து அந்த தந்தையே காப்பற்றியது, இப்படி அந்த சமயத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த அத்தனை கொடுமைகளையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது சிறப்பு.

படிக்காத பாமரனாகினும் அவனுக்கும் பகுத்தறிவு உண்டு என்று கூறிய அதே சமயத்தில் ஒரு பெண் படித்தால் ஒரு சமுதாயம் எப்படி வளரும் என்பதும், ஆண்கள் வரதட்சணை கேட்பதை நிறுத்தினால், பெண் சிசுக் கொலைகள் நடக்காது என்று காட்சிகளையும் வசனங்களையும் சீராக தொடுத்த பெருமை அவரையேச் சேரும்.
இவையெல்லாம் என்றோ, எப்போதோ நடந்து விடவில்லை சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நடந்தவை ஏன் இன்றும் நடந்துகொண்டிருப்பவை. பெண்கள் சாதாரணமாக இன்றிருக்கும் நிலையை எட்டி விடவில்லை பாரதிராஜா போன்ற சான்றோர்களின் பங்கு இதில் பெரிதாக அடங்கியுள்ளது.
இன்னும் பெண்கள் எட்ட வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஆனால் இயக்குனர் இமயம்தான் நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரின் படைப்புகள், இளம் தலைமுறையினருக்கு ஒரு புதையலாகவும், கற்றுக்கொள்ளும் கல்விக் கூடமாகவும் என்றென்றும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
பாரதிக்கு ஒரு “செல்லம்மா” இந்த பாரதிராஜாவிற்கு ஒரு கருத்தம்மா”.......
“அடுத்த ஒரு சென்மம் வந்து யாராக (பெண்/ஆண்) நீ பொறந்தா(லும்) பூமியில இடமிருக்கும், போய்வாடி அன்னக்கிளி......
(விகடகவியின் அறிமுக எழுத்தாளர் "இலதி"" இவர் ஜியாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் சென்னையில் உள்ள AMET பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராக சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளார் .பாலிமர், கேப்டன் டிவி, மக்கள் தொலைக்காட்சி, சன் டி,வியில் பகுதி நேர செய்தி வாசிப்பாளர். தற்பொழுது ஆங்கில செய்தி வாசிப்பாளராக WPMD. என்ற வானொலியில் தன்னார்வலராக வாசித்து வருகிறார். Kadhaikalam என்ற யூடியூப் சேனலை ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்)


Leave a comment
Upload