வேலை நிமித்தமாக சிலர் வெளிநாடு வர நேரிடும் போது, அவர்களுடைய அசாத்திய திறமைகள் வெளியுலகுக்கு தெரியாது போகக் கூடும். இது போன்ற நிலை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு.
ஒரு வேளை இந்தியாவில் இருந்திருந்தால் சுந்தர்ராஜன் சாபுசிரிலுக்கும், தோட்டா தரணிக்கும் கடும் போட்டியாக இருந்திருப்பார்.
ஹாங்காங்கில் கோவிலில் தேர் செய்ய வேண்டுமா அல்லது ஐயப்பன் பூஜைக்கு ஐயப்பன் கோவில் செட் போட வேண்டுமா என்றால் சுந்தருக்குத் தான் அழைப்பு விடுக்கப்படும்.
எழுத்தில் மட்டுமே உலகமெங்கும் உள்ள திருஏழுகூற்றிருக்கை தேரை, ஹாங்காங்கில் வடிவமைத்து, அதை கோவிலில் பக்தர்களை வைத்து இழுக்க வைத்ததும் சுந்தர் மற்றும் அவர் நண்பர்களின் முயற்சி தான்.
திருஏழுகூற்றிருக்கை தேருடன்.
ஹாங்காங்கில் ஐயப்பன் கோவில் செட்டப்.
இது ஒருபுறம் இருக்க... வருடந்தோறும் விநாயகருக்காக ஸ்பெஷலாக சிரத்தை எடுத்து, சிறப்பு அலங்காரத்தோடு விநாயகர் செய்வதில் சுந்தருக்கு அலாதி பிரியம்.
இந்த விநாயகர் முயற்சி ஒவ்வொரு வருடமும், வெவ்வேறு முயற்சி எடுத்து அவர் செய்வது தனிச் சிறப்பு.
ஒவ்வொரு முறையும் செல்லூர் ராஜுவை கைவிட்ட வஸ்து, சுந்தருக்கு கை கொடுக்கும்.
சென்ற முறை தேங்காயில் விநாயகர் அமர்ந்திருப்பது போல செய்திருந்தார் சுந்தர்.
இந்த வருடம் ஒரு வனத்தில் மலையருவியில் அமர்ந்திருக்கிறார் விநாயகர்.
பிரமிக்க வைக்கும் விநாயகரைச் செய்யும் சுந்தருக்கு வருடந்தோறும் அவரின் கற்பனா சக்தியை தூண்டும், சவாலான பிள்ளையாரை செய்வதில் தான் அலாதி பிரியமாம்.
சுந்தரின் கலைத் திறனை புகழ்ந்தால், என்னிடம் என்ன இருக்கிறது எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்கிறார்.
விநாயகர் அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்றதும்... சுந்தர் சொன்னது இது தான்.
ஒவ்வொரு வருடமும் விநாயகரை விதவிதமாக செய்தாலும், அது என்னுடைய பாஸ் வீட்டில் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட அளவு மக்களைத் தான் சென்றடைகிறது.
நான் செய்யும் அலங்காரத்துடன் இருக்கும் விநாயகரை, அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டும் என்பது தான் எனது ஒரே ஆசை.
அது போலவே ஹாங்காங்கில் ஒவ்வொரு ஷாப்பிங் மால் வாயிலிலும் பிரம்மாண்டமாக வைத்திருக்கும் சிலைகளைப் போலவே, நமது விநாயகரையும் வைத்து வழிபட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய கனவு. கணபதி நினைத்தால் நடக்கும்.
Leave a comment
Upload