தொடர்கள்
தொடர்கள்
மகளதிகாரம் - 18 - கவிஞர் தனபாண்டியன்

20220631160318499.jpg

# மகளதிகாரம் - 18 #

"என்னம்மா ...
மாப்ள இன்னும் சாப்பிட வரலையா?...." என்கிற
அப்பாவின் ஒற்றைக் கேள்விக்கு

"அவருக்கென்ன....
வேலைய கட்டிக்கிட்டே அழுறாரு....
அவருக்குனு ஆஃபீஸிலேயே ஒரு ரூமு குடுத்திருக்கலாம் போல..." என
மூச்சுவிடாமல்
கணவனின் மீதான
கலிங்கத்துப்பரணி வாசிக்கும் மகளை
மடைமாற்றும் பொருட்டு எடுத்த
அத்தனை முயற்சிகளும் தோல்வியுற

உதவிக்கு மனைவியை அழைக்கிறார்

"ஏம்மா... இன்னும் மாப்ள சாப்பிட வரலையா?" என
அம்மா எழுப்பும் கேள்விக்கு

"இல்லம்மா... அவருக்கு ஏதோ ஆபீஸ்ல வேலை இருக்குதாம்..." எனச் ஒற்றைவரியில்
முடிகிறது பதில்

இத்தனையையும் கவனித்த அப்பாவிற்கு
இனம்புரியா மகிழ்வெண்ணங்கள் குவிகின்றன
மகளின் மீது..!