தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு கேள்வி பதில் 4 - பரணீதரன்

இன்று உங்களுக்கு மூன்று கேள்விகளை வைத்துள்ளேன் என்று கூறியவுடன், கேள்விகளை ஒன்றொன்றாக கேளுங்கள்.. முடிந்த வரை பதில் அளிக்கிறேன் என்றார்.

20250422235504752.png

முதல் கேள்வி - மொழியைச்சார்ந்த பக்தி உண்டா? அல்லது பக்தியைச் சார்ந்த மொழி உண்டா?

எல்லா மொழிகளிலுமே பக்தி சார்ந்த விஷயங்கள் உண்டு. ஆனால் பக்தி செய்வதற்கு மொழி தேவையில்லை. வார்த்தைகளே இல்லாமல் மௌனமாக கூட பக்தி செய்ய முடியும். அதற்கு மோன தவம் என்று பெயர். பல சித்தர்களும் ஞானிகளும் இதை கடைபிடித்து இருக்கிறார்கள். இன்றும் கூட மௌன விரதம் என்ற பெயரில் நாம் இதை சிறிது பின்பற்றுகிறோம். ஆதிகாலம் முதலே மனிதர்கள், இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்களை ஒலி ரூபமாகவும், அரூபமாகவும் கேட்டும் கண்டும் அதற்குரிய எழுத்தையும் உருவத்தையும் உருவாக்கி அந்த மொழிக்கு ஒரு பெயரையும் வைத்தார்கள். இதற்கு உதாரணமாக எகிப்திய நாகரீகம், சீன நாகரீகம், ஜப்பானிய நாகரீகம், கொரிய நாகரிகம், வைக்கிங்கள், ஆங்கிலோ சாக்சன்கள் இங்கு அனைவரும் தங்களுடைய மொழிகளில் அதிகமாக உருவங்களையே பயன்படுத்தினார்கள். நம்முடைய பாரத நாட்டில் உருவான மொழிகளில் இப்படிப்பட்ட உருவங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. நம் நாட்டில் உள்ள மொழிகளில் உச்சரிப்பு மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள என்ன அலைகளும் ஒலி அலைகளும் ஒன்று சேரும்பொழுது அங்கு ஒரு தெய்வீக சக்தி உருவாகிறது. அதைத்தான் நாம் பக்தி என்று கூறுகிறோம். அந்த பக்தி உருவாக்குவதற்காக நம்முடைய முன்னோர்கள் சிலவிதமான எழுத்துக்களையும் சொற்களையும் உருவாக்கி, அதை மந்திரங்கள் என்ற பெயரில் நம்மிடம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால் பக்தி மொழியை சார்ந்திருப்பது போல, மொழியும் பக்தியை சார்ந்து இருக்கிறது.

20250422235520516.png

அடுத்த கேள்வி - சநாதன தர்மத்திற்கு அதாவது ஹிந்து சமய பக்திக்கு தமிழ் சமஸ்கிருதம் தவிர வேறெந்த மொழிகளிலாவது பிரதான இடமிருந்திருக்கிறதா?

பாரதத்தில் உருவான அத்தனை மொழிகளிலும் நம்முடைய இந்து சமயத்திற்கு பிரதான இடம் இருக்கிறது. நம்முடைய அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு குருக்களும், முனிவர்களும், ஞானிகளும் பிறந்து, வாழ்ந்து, அவர்களை சார்ந்த மக்களை கடவுளை நோக்கி மடை மாற்றி உள்ளார்கள். இதைத் தவிர நாத பிரம்மம் என்று அழைக்கப்படுகின்ற ஒலி ரூபமான இறைவனை பாடல்கள் மூலமாகவும் ஆராதித்துள்ளார்கள். உதாரணமாக கேரள தேசத்தில் - மகாராஜா சுவாதித் திருநாள், நாராயண குரு, நாராயண பட்டத்திரி, பூந்தானம், கன்னட தேசத்தில் - புரந்தர தாசர், கனகதாசர், அக்கம்மா, பசவண்ணா, வித்யாரண்ய தீர்த்தர் தெலுங்கு தேசத்தில் அன்னமாச்சாரியார், பத்ராசலம் ராமதாசர், மராட்டியத்தில் - நாமதேவர், துக்காராம், சமர்த்த ராமதாசர் குஜராத்தில் - நரசிங் மேத்தா, ராஜஸ்தானில் - மீராபாய், வட இந்தியாவில் - கபிர்தாசர், சூர்தாசர், காஷ்மீரத்தில் லல்லேஸ்வரி, வங்காளத்தில் - கிருஷ்ண சைதன்ய மகாபிரபு, ராமகிருஷ்ண பரமஹம்சர், ஒடிசாவில் - ஜயதேவர், பனமாலி தாசர், மத்திய பிரதேசத்தில் - பத்ருஹரி, காளிதாசர். தமிழ் மொழியைப் பற்றியும், தமிழில் பக்தி செய்தோர் பற்றியும் முன்பே நாம் பார்த்து விட்டதால் இங்கு மற்ற மொழிகளைப் பற்றி மட்டுமே பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர் கடவுளை நேராகக் கண்டவர்கள், சிலர் கடவுளை மற்றவர்களுக்கும் காட்டியுள்ளார்கள். உதாரணமாக இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சத்ரபதி சிவாஜி உடைய குரு, சமர்த்த ராமதாசர் ஆவார். இதே போல விஜயநகர பேரரசு என்கிற இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஹரிஹர, புக்கர்களை உருவாக்கியவர் வித்யாரண்ய தீர்த்தரே.

20250422235537117.png

கடைசி கேள்வி - அதே சமயம் தமிழ் மொழியினால் ஆதி சங்கரரின் ஷண்மதங்களைத்தவிர வேறெந்த சமயங்கள் வளர்ந்திருக்கின்றன?

தமிழ் மொழியில் ஷண்மதங்களான - கணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் ஆகிய சமயங்கள் மட்டுமல்லாமல், பௌத்தம், சமணம் போன்ற சமயங்களும் நன்றாகவே வளர்ந்தன. பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்களும் - புத்த விகாரங்களையும், சமணப் படுகைகளையும் உருவாக்கிக் கொடுத்தார்கள். தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி வளையாபதி மற்றும் குண்டலகேசி ஆகிய ஐந்து பௌத்த மற்றும் சமண காவியங்களே. அதேபோல ஐஞ்சிறு காப்பியங்களான உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவையும் பௌத்த மற்றும் சமண காவியங்களே. திருநாவுக்கரசர் கூட சில காலம் சமணராகவே வாழ்ந்தார். அதேபோல மகேந்திர வர்ம பல்லவன் என்கிற பல்லவ மன்னரும் சமண மதத்தை சார்ந்து இருந்தார். சைவ சமயத்தில் இருந்த திருநாவுக்கரசர், சமணத்திற்கு மாறிய பிறகு திருநாவுக்கரசரின் சூலை நோயை சிவபெருமான் திருவதிகை வீரட்டானத்தில் சரி செய்த பிறகு மீண்டும் சைவ சமயத்தை பின்பற்றுகிறார். அது பொறுக்காத சமணர்கள், மகேந்திர வர்ம பல்லவனிடம் முறையிட்டு, பல்வேறு வகையான தண்டனைகளை திருநாவுக்கரசர் வாங்கி கொடுக்கிறார்கள். அந்த தண்டனைகள் எதுவுமே திருநாவுக்கரசரை பாதிக்கவில்லை. அதை கண்ட மன்னனும் சைவ சமயத்திற்கு மாறுகிறார். பிறகு சமணர்கள் பல்லவ நாட்டை விட்டு பாண்டிய நாட்டிற்கு செல்கிறார்கள். கூன் பாண்டியனை சமணத்திற்கு மாற்றுகிறார்கள். கூன் பாண்டியனுக்கு வந்த சூலை நோயை, திருஞானசம்பந்தர் திருநீற்று பதிகம் பாடி சரி செய்கிறார். அதன் பிறகு சமணர்களை அனல்வாதத்திலும், புனல்வாதத்திலும் வெல்கிறார். இருந்தாலும் அவர்களின் நூல்கள் இன்றளவும் தமிழிலக்கியத்தில் மாணிக்கமாகவே இருந்து வருகிறது. இப்படி அனைத்து விதமான சமயங்களும் தமிழ் மொழியால் வளர்ந்துள்ளன என்று கூறி விடை பெற்றுக்கொண்டார் பரணிதரன்.