
மகாராஷ்டிரா, அகமத்நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சனி சிங்கனாப்பூர், கதவுகளே இல்லாத வீடுகள் உள்ள சனி பகவான் வீற்றிருக்கும் ஒரு புகழ் பெற்ற ஸ்தலம். இங்குள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் கிடையாது. ஆனால் நிலை வாசல் மட்டும் உண்டு. பல நூற்றாண்டுகளாக இங்குள்ள மக்கள், சனி பகவான் தங்கள் வீடுகளைப் பாதுகாப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
கதவுகள் இல்லாத வீடுகள்:

சனி சிங்கனாப்பூரில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் பனாஸ்னாலா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, ஒரு பெரிய கருப்பு கல் கரை ஒதுங்கியது. அப்பொழுது மக்கள் அதனை குச்சியால் தொட்டபோது ரத்தம் கசிந்ததாகவும், அன்றிரவே சனி பகவான், கிராமத் தலைவரின் கனவில் தோன்றி, அந்தக் கல்லைக் கூரையற்ற திறந்தவெளியில் அமைக்க உத்தரவிட்டதாகவும், மேலும் கிராம மக்கள் கதவில்லாத வீடுகளில் வாழவும், தானே அவர்களைப் பாதுகாப்பதாகவும் சனி பகவான் கனவில் சொன்னதாகக் கூறினார். அதனால் அந்த ஊர் மக்கள் அந்தக் கல்லைச் சனீஸ்வர பகவானாகவே நினைத்து வெட்டவெளியில் கூரையில்லாமல் ஒரு மேடை மட்டும் அமைத்து அதில் பிரதிஷ்டை செய்தனர்.

அன்று முதல் இந்த ஊரில் திருட்டு, கொள்ளை போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இங்கு இரவிலும்கூட வீடுகள் திறந்தே இருக்கிறது. இந்த ஊரில் ஒரு விலை மதிப்பு மிக்க பொருளை எங்கு வைத்துவிட்டுச் சென்றாலும் கூட நாம் திரும்பி வரும்வரை அதை யாருமே தொடுவதுமில்லை. இதை மீறி யாராவது திருட முயற்ச்சித்தால் அவர்கள் பார்வையிழந்தோ மனநலம் பாதிக்கப்பட்டோ அலைவார்கள். இது மட்டுமின்றி, இங்கு வசிக்கும் மக்களை எப்படிப்பட்ட விஷப் பாம்புகள் தீண்டினாலும் அவர்களுக்கு விஷம் உடலில் ஏறாது என அப்பகுதியில் உள்ள மக்கள் சொல்கின்றனர். இன்று வரை பல ஆண்டுகளாக அந்த ஊரில் ஒரு திருட்டு சம்பவம் கூட நடக்கவில்லை. இங்குள்ள வீடுகள், அலுவலகம், கோயில், மண்டபம், ஏன் வங்கிகளுக்கு கூட கதவுகள் கிடையாது.

இங்குள்ள கடைகளில் எவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள் இருந்தாலும், இரவில் திரைச் சீலை அல்லது கித்தான் துணி போட்டுத்தான் மூடுகிறார்கள். அதே போல் வீடுகளிலும் துணித் திரை போட்டே வாசல்கள் மூடப்பட்டிருக்கும்.
சனி சிங்கனாப்பூர் சனி பகவான் கோயில்:

சனி சிங்கனாப்பூரில் மற்ற கோயில்களில் இருப்பது போல கோபுரம், கூரை மற்றும் சுவர்கள் கிடையாது. சனி பகவான் வெட்டவெளியில், வானமே கூரையாகக் கொண்டு காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவரான சனி பகவான் உருவம் இல்லாத தட்டையான ஒரு கருப்பு நிறக் கல்லாக விளங்குகிறார். சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். ஒண்ணரை அடி அகலம் கொண்டு இங்கு அருள்புரிகின்றார்.. சனி பகவானின் சிலைக்கு அருகில் ஒரு திரிசூலமும், தெற்கே நந்தி சிலையும், முன்புறம் சிவனும் அனுமனும் சிறிய வடிவில் வீற்றுள்ளனர். சனி பகவான் தலைக்கு மேலே தொங்கவிடப்பட்டுள்ள ஒரு செப்புப் பாத்திரத்தில் இருந்து எண்ணெய் சொட்டுச் சொட்டாக சனி பகவான் மீது விழுந்துகொண்டே இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமைகளிலும், சனிதோஷ காலங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தங்களின் துயரங்கள் நீங்க சனி பகவானுக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், பூ மற்றும் கருப்பு உளுந்து படைத்து வழிபாடு செய்கின்றனர்.
சனி பகவானுக்குரிய சனிக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்படுகின்றன, சனி ஜெயந்தி மற்றும் பிற குறிப்பிடத்தக்க பண்டிகைகளில் ஏராளமான மக்கள் பங்கேற்கின்றனர். சனிக் கிழமையும், அமாவாசை திதியும் சேர்ந்து வருவது மிக சிறப்பு, அன்று லட்சக் கணக்கில் பக்தர்கள் சனி பகவானின் ஆசி பெற வருகிறார்கள். இந்த கோயில் வருடம் முழுவதும் பக்தர்களுக்காக திறந்திருக்கும்.

சனி சிங்கனாப்பூர் செல்லும் வழி:
ஷீரடி நகரிலிருந்து 60 கி. மீ., தொலைவிலும், அகமத் நகரிலிருந்து 35 கி. மீட்டர் தொலைவிலும், ஔரங்காபாத்திலிருந்து 84 கி. மீ., தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி. மீ., தொலைவிலும், மும்பை நகரிலிருந்து 265 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம். ஔரங்கபாத் விமான நிலையம் 90 கி. மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீராம்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

சனி சிங்கனாப்பூர் நம்பிக்கை, பக்தி மற்றும் சனீஸ்வரரின் பாதுகாப்பை உலகுக்கு பறைசாற்றும் ஒரு தனித்துவமான இடமாகும். இக்கோயிலை ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டும்!!

Leave a comment
Upload