தொடர்கள்
ஆன்மீகம்
ஏரி காத்த ராமரைக் கண்ட கர்னல் லயனல் பிளேஸ்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1795 முதல் 1799 வரை செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் கர்னல் லயனல் பிளேஸ் (Colonel Lionel Place). அவர்களின் பெயர் தமிழக வரலாற்றில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில்.

"கலெக்டர் பிளேஸ் கொடுத்த வாக்குறுதி"
மதுராந்தகம் ஏரி தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. பருவமழைக் காலங்களில் இந்த ஏரியின் கரை உடைந்து, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்தது.

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

1798 ஆம் ஆண்டு பெய்த பெருமழையின் போது, லயனல் பிளேஸ், மதுராந்தகம் ஏரி உடைந்து பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்க அங்கு முகாமிட்டிருந்தார். அப்போது தற்செயலாக ஸ்ரீ கோதண்டராமர் கோயிலுக்குச் சென்ற அவர்
கோயில் பட்டாசாரியர்களிடமிருந்து கோயிலின் வரலாறு மற்றும் புராணக் கதைகளைக் கேட்டறிந்தார். அதன்பின், கோயிலைச் சுற்றிப் பார்க்கும்போது, அதன் ஒரு மூலையில் பெரிய தூண்களும் கல் பலகைகளும் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அவற்றின் நோக்கம் குறித்து விசாரித்தார். ஸ்ரீ ஜனகவல்லி தாயாரின் சந்நிதி, நிதிப் பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டதாக பட்டாசாரியர்கள் விளக்கினர்.
அப்போது கலெக்டர் பிளேஸ் ஒரு நிபந்தனையுடன் கூடிய சவாலை அவர்கள் முன்வைத்தார். "ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த மதுராந்தகம் ஏரியின் கரை உடைந்து, வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் கடுமையான மழை பெய்து வருகிறது.
இங்குள்ள கடவுள் சக்தி வாய்ந்தவர் என்றால், இந்த முறை ஏரிக்கரை உடையாமல் காக்கட்டும். அப்படி நடந்தால், நானே என்னுடைய சொந்தச் செலவில் நீங்கள் குறிப்பிடும் ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சன்னிதியைக் கட்டித் தருகிறேன்" என்று கூறிவிட்டு, மற்ற தெய்வங்களைத் தரிசிக்காமலேயே அவசரமாகத் திரும்பிச் சென்றார்.

"ஏரி காத்த ராமர்"

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

கர்னல் பிளேஸ் தன்னிடமிருந்த உபகரணங்களைக் கொண்டு ஏரிக்கரையை வலுப்படுத்த முயன்றார், ஆனால் அதன் வலிமை குறித்து அவருக்கு நம்பிக்கையில்லை. கிராமத்தில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் புயல்கள் உருவாகத் தொடங்கின. மழை நிற்கும் அறிகுறியே இல்லாமல் பல நாட்கள் தொடர்ந்து பெய்து, ஏரியில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது, ஒரு நாள் அது கரையின் மட்டத்தை எட்டியது. இதனால் பேரழிவு நிகழும் என்று பிளேஸ் எதிர்பார்த்தார். மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காக அவர், தனது வேலையாட்களில் ஒருவரைக் குடையுடன் அழைத்துக்கொண்டு ஏரியின் நீர்மட்டத்தைப் பார்க்க ஏரிக்கு அருகில் சென்றார். தண்ணீர் நிறைந்த ஏரியைக் கண்டதும், எந்த நேரத்திலும் நிகழக்கூடிய பேரழிவைச் சமாளிப்பது குறித்து அவர் கவலையுடன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் வெளிச்சத்தில் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியபடி இரு இளைஞர்கள் ஏரிக்கரையில் ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.
பிளேஸ் ஏற்கனவே மழையில் நனைந்துவிட்டதால் தன் இடத்திற்குத் திரும்பி, அந்த இரண்டு விசித்திரமான இளைஞர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை பிளேஸ் ஏரியின் நிலையைப் பற்றிக் கவலையுடன் வெளியே வந்து பார்த்தபோது வெள்ளம் வடிந்திருந்தது. சூரிய ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. முந்தைய இரவு மழையில், ஏரிக்கரை எந்த உடைப்பும் ஏற்படவில்லை. இந்த அதிசய நிகழ்வுக்குப் பின், பிளேஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்து, அந்தச் செய்தியை பட்டாசாரியர்களிடம் பகிர்ந்துகொள்ளக் கோயிலுக்கு விரைந்து சென்றார்.

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

அமைதியான மனநிலையில் இருந்த பிளேஸ், நிதானமாகக் கோயிலுக்குள் நுழைந்து, கோயில் பட்டாசாரியர்களிடமிருந்து மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில், தெய்வங்களுக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்ததால் கருவறை மூடப்பட்டிருந்தது. கருவறையின் கதவுகள் திறந்ததும்,
முந்தைய இரவு ஏரிக்கரையில் வில்லும் அம்பும் ஏந்தி அலைந்து திரிந்த உருவங்களை அவர்கள் கருவறையில் காணும்போது வியப்பில் ஆழ்ந்தார். (கருவறையில் ராமபிரான் எட்டு அடி உயரத் திருமேனியுடன், சீதை மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுடன் காட்சி தருகிறார்) அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், முந்தைய நாள் இரவு தான் கண்ட காட்சியை பட்டாசாரியர்களிடம் விளக்கினார். அதைக் கேட்ட பட்டாசாரியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பிளேஸ் கண்ட அந்த இரண்டு இளைஞர்கள் ஸ்ரீ ராமரும் ஸ்ரீ லட்சுமணரும்தான் என்பதையும், அநேகமாக அவர்கள்தான் இந்த கிராமத்தை ஏரிக்கரை உடைப்பிலிருந்து காப்பாற்றியிருக்க வேண்டும் என்பதையும் அனைவரும் உணர்ந்தனர். அன்றிலிருந்து, மக்கள் இங்குள்ள கோதண்ட ராமரை 'ஏரி காத்த ராமர்' என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினர்.

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

லயனல் பிளேஸ் தன் தவற்றை உணர்ந்து வாக்குறுதியளித்தபடியே, இந்து மதக் கடவுளின் மீதான நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு 1798-ல் ஜனகவல்லி தாயார் (சீதை) சன்னிதியைத் தனது சொந்த செலவிலேயே கட்டிக் கொடுத்தது பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.

கோயிலில் உள்ள கல்வெட்டு சான்று:
மதுராந்தகம் கோதண்டராமர் கோயிலின் வளாகத்தில் ஜனகவல்லி தாயார் சந்நிதிக்குள் நுழையும் போது, மண்டப தூண்களின் மேல் தாங்கும் கல் உத்திரங்களை உற்று நோக்கினால், தமிழ் மற்றும் தெலுங்கு எழுத்து வடிவில் லயோனல் பிளேஸ் தொடர்பான கல்வெட்டு இன்றும் உள்ளது.
இக்கல்வெட்டுகளில், ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஜாகிர்தாரான (கலெக்டர்) கர்னல் லயனல் பிளேஸ் (Colonel Lionel Place) தன் சொந்தப் பொறுப்பில் ஜனகவல்லி தாயார் சந்நிதியைக் கட்டிக் கொடுத்தார் என்ற விபரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

கல்வெட்டு வாசகம்: இந்த சந்நிதிப் பகுதியில் "இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனல் பிளேஸ் துரை அவர்களது" என்ற வாசகம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
அரசு தொல்லியல் துறை பதிவேடுகளில் இது A.R.E. No. 392 of 1922 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

​20260519202015380.jpegClick and drag to move​

கர்னல் லயோனல் பிளேஸ் வழங்கிய பிற கோயில் கொடைகள்:
கர்னல் லயோனல் பிளேஸ் மேலும் வரதராஜப் பெருமாளுக்கு விலைமதிப்பற்ற தங்க ஆபரணங்களையும் வைர மாலைகளையும் உபயமாக வழங்கியுள்ளார். குறிப்பாக, அவர் வழங்கிய தங்க நகைகள் இன்றும் அக்கோயிலின் ஆவணங்களில் அவரது பெயரிலேயே ("பிளேஸ் நகைகள்") குறிப்பிடப்படுகின்றன. காஞ்சிபுரம் பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கருட சேவை உற்சவத்தை அவர் மிகவும் போற்றி வழிபடக்கூடியவராக இருந்துள்ளார். இதற்காகக் கோயிலின் உள்கட்டமைப்பு மற்றும் திருவிழாச் செலவுகளுக்கு கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் நிதியிலிருந்து உதவிகளைச் செய்துள்ளார். இதைத்தவிரக் கோயில் குளங்களைச் சீரமைப்பது, நந்தவனங்களைப் பராமரிப்பது போன்ற கோயில் நிர்வாக மேம்பாடுகளிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அன்னிய நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர், இந்து மதக் கோட்பாடுகளையும் வழிபாட்டு முறைகளையும் போற்றிப் பாதுகாத்தது மத நல்லிணக்கத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டின் ஈர்ப்புத் தன்மைக்கும் ஒரு மிகச்சிறந்த வரலாற்றுச் சான்று.

"சிறந்த நிர்வாகி"
கர்னல் லயனல் பிளேஸ் ஆரம்பத்தில் கடுமையானவராகப் பார்க்கப்பட்டாலும், இந்த ஆன்மிக மற்றும் வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு, உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து அவர்களின் அன்பைப் பெற்றார். இதைத்தவிர இப்பகுதி ஏரிகள், பாசனக் கால்வாய்கள் மற்றும் விவசாய நிலங்களைச் சீரமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
தனது நிர்வாக எல்லையின் கீழ் இருந்த (செங்கல்பட்டு ஜகீர்) பல சிதிலமடைந்த கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், அவற்றின் தினசரி வழிபாடுகள் தடையின்றி நடக்கவும் உள்ளூர் பஞ்சாயத்துகளுக்கு சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
மார்கழி மாதம் மற்றும் முக்கியத் திருவிழா நாட்களான ராம நவமி, பிரம்மோற்சவம் போன்றவற்றின் போது நேரங்கள் மாறுபடலாம்

Colonel Lionel Place, who saw Rama guarding the lake..!!

எப்படிச் செல்வது:
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (GST Road) செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் மதுராந்தகம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. இரயில் மற்றும் பேருந்து வசதிகள் நிறைந்துள்ளன.