தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஏழைகளின் புன்'நகை' பறிக்கும் அரசு - ஜாசன்

20250430175639239.jpeg

தங்க நகை கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நகை கடனில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கமும் சொல்லி இருக்கிறது.

ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டும் ஒழுங்கற்ற நடைமுறைகள் இதுதான்.

கடன் பெற அடமானம் வைக்கப்படும் நகைகளை மதிப்பிடுவதில் குறைபாடு, நகைக்கடன் வழங்குவதில் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாதது, கடன் பெற்றவர் பணத்தை திருப்பி செலுத்த தவறினால் நகைகள் ஏலம் விடுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை போன்றவை தான் இந்த புதிய விதிமுறைக்கு காரணம் என்கிறது ரிசர்வ் வங்கி.

ரிசர்வ்வங்கி சொல்லி இருக்கும் விதிமுறைகள் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம். .

1. நகைகள் மீதான கடன் நகையின் மொத்த மதிப்பு சதவீதத்தில் 75 சதவீதம் தான் வழங்க வேண்டும். தற்சமயம் நகையின் மதிப்பீட்டில் 90% வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டு இருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்த விதியை அமல்படுத்தினால் வாடிக்கையாளருக்கு கடன் தொகை கணிசமாக குறையும். இதற்கு ரிசர்வ் வங்கி சொல்லும் விளக்கம் தங்கத்தின் விலை எப்போது ஏறும் எப்போது குறையும் என்ற தெளிவான நிலை இல்லாத போது இது போன்ற வரம்பு கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதாகும். அதாவது உதாரணமாக ஒருவர் நகைக்கடன் வாங்கி திருப்பி செலுத்தும் போது கடன் அசல் மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து மதிப்பிடும் போது அப்போதைய தங்கத்தின் சந்தை விலை குறைவாக இருந்தால் நகையை மீட்பதற்கு பதில் புதிதாக நகையை வாடிக்கையாளர் வாங்கிக் கொள்வார் நகையை மீட்காமல் போவார் இதனால் வங்கிக்கு இழப்பு என்கிறது ரிசர்வ் வங்கி. இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.

2. தகுதியான தங்க நகைகள் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிடுவது 22 கேரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுடன் அச்சிடப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் மட்டுமே கடன் பெற தகுதி உடையவை என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது 22 கேரட் நகை மட்டுமே நகை கடன் வழங்க தகுதியானவை என்கிறது ரிசர்வ் வங்கி. பெரும்பாலும் கடைகளில் வாங்கும் நகைகளின் கேரட் என்பது உத்திரவாதம் ஆனது என்று சொல்ல முடியாது நாங்கள் நம்பிக்கை நாணயம் என்று விளம்பரம் செய்யும் மிகப்பெரிய நகை நிறுவனங்களில் கூட வாங்கும் நகைகளில் கூட இந்த பிரச்சனை இருக்கிறது. 22 கேரட் என்ற நிர்ணயம் நகை கடன் வாங்குவதற்கு நிச்சயம் தடையாகத்தான் இருக்கும்.

3. அடமானம் வைக்கும் நகைகளுக்கு தூய்மை சான்றித கட்டாயம் என்கிறது ரிசர்வ் வங்கி .அந்த சான்றிதழோடு நகையின் படத்தையும் அதில் இணைக்க வேண்டும் என்கிறது. இந்த நகைக்கான தூய்மை சான்றிதழ் வழங்குவது யார்? இந்த சான்றிதழில் கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவர் இருவரும் கையெழுத்து போட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதாவது வங்கி முழு நேர நகை மதிப்பீட்டாளர் ஒரு நகைக்கடைக்கு தேவையான அனைத்து வகை சாதனங்களும் வைத்துக்கொண்டு நகையை பரிசோதித்துப் பார்த்து அதன் பிறகு தான் கடன் வழங்க வேண்டும் என்கிறது ரிசர்வ் வங்கி. இது வாடிக்கையாளருக்கு தேவையற்ற காலதாமதம் மன உளைச்சல் வாங்கிய நகையின் நம்பகத்தன்மை குறைபாடு என்றால் மன கஷ்டம் இப்படி பல சாதக பாதகங்கள் இதில் இருக்கிறது.

4. புதிய விதிமுறைப்படி எந்தெந்த நகைகளுக்கு எந்தெந்த ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்களுக்கு கடன் கொடுக்கலாம் என்று வகைப்படுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி. இதன்படி பார்த்தால் நகைக் கடைகளில் சேமிப்பாக வாங்கி வைத்த தங்க நாணயங்களுக்கு மற்றும் பிரபலமான சில கோயில்களில் வாங்கும் தங்க நாணயங்களுக்கும் கடன் கேள்விக்குறியாகிவிட்டது. ஆரம்பத்தில் வங்கிகள் தங்க நாணயங்கள் விற்கும் என்று சொல்லப்பட்டது ஆனால் அதைப் பெரிய அளவு வங்கிகள் செயல்படுத்தவில்லை.

5. தங்கத்தை அடமானம் வைக்கும் போது அடமானம் வைப்பவர் தான் உரிமையாளர் என்பதற்கான ரசீது கட்டாயம் என்கிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. திருமணத்தின் போது பெண்களுக்கு சீதனமாக நகைகள் தருவது வழக்கம். அதற்கான ரசீதை கணவன்மார்களுக்கு தருவதில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவுப்படி இப்போது அந்த ரசீது கட்டாயம் என்று ஆகிவிட்டது

6. ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள இன்னொரு நெறிமுறை உண்மையில் நகைப்புக்குரியது. வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்திய 7 நாட்களுக்குள் வங்கிகள் நகையை திருப்பி தர வேண்டும் என்கிறது. அப்படி இல்லை என்றால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 5000 ரூபாய் அபராதம் என்கிறது. இது தேவையே இல்லாத ஒரு நெறிமுறை. கடனை திருப்பி செலுத்தியவர் உடனே நகையை வங்கியில் இருந்து வாங்கிக் கொள்கிறார். எல்லா வங்கிகளும் கடனை திருப்பி செலுத்திய உடனே நகைகளை வாடிக்கையாளர்களிடம் தந்து விடுகிறது. அப்படி இருக்கும் போது இது தேவையா என்ற கேள்வி எழுகிறது

சொந்த வீடு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சம் தங்கம் நடுத்தர குடும்பத்தினர் நிச்சயம் வைத்திருப்பார்கள். தங்களது பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக அவர்கள் நம்புவது அவர்கள் கழுத்தில் போட்டிருக்கும் பீரோவில் பத்திரப்படுத்தி இருக்கும் தங்க நகைகள் தான். அவசரத் தேவை என்றால் அவர்கள் உடனே நகைகளை வைத்து தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் பாமர மக்கள் வட்டிக்கடைகளில் நகையை அடமானம் வைத்து அதிக வட்டி செலுத்த வேண்டியிருந்தது. இதை தடுக்க தான் வங்கிகள் நகைக் கடனை அறிமுகப்படுத்தியது. குறைந்த வட்டி பாதுகாப்பு இப்படி ஏகப்பட்ட நம்பிக்கையுடன் பொதுமக்கள் வங்கிகளை நகை கடனுக்காக அணுகினார்கள். இப்போது அதற்கும் பிரச்சனை என்று ஆகிவிட்டது.

இந்த நெறிமுறைகளை இன்னும் ரிசர்வ் வங்கி அமுல்படுத்தவில்லை. ஆனால் இது கட்டாயம் என்று சுற்றறிக்கையில் அது வலியுறுத்துகிறது.

தங்கள் பண சிக்கலை வங்கிக்கு போனால் அதுவே புதிய சிக்கலை ஏற்படுத்துகிறது என்றால் அப்பாவி பொதுமக்கள் என்னதான் செய்வார்கள். யோசியுங்கள்.

தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும் என்று எழுதினார் கண்ணதாசன், இன்று இருந்திருந்தால் தங்க அடகு வைப்பதிலும் குறை என்று பாடியிருப்பார் பாவம்.

டெயில் பீஸ்:

ரூபாய் 2 லட்சத்திற்கும் குறைவான நகை கடன் பெறுதற்கான கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் உடனடியாக புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டாம் என்று புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ஆர் பி ஐக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.