தொடர்கள்
ஆன்மீகம்
பொன் மழை பொழிய வைத்த மகான்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

The saints who made it rain gold!!

நம் நாட்டில் மகாலட்சுமியைப் பிரார்த்தித்துத் தங்க மழையையே பொழிய வைத்த மகான்கள் வாழ்ந்துள்ளனர். ஆதி சங்கரர் ஒரு ஏழைப் பெண்ணுக்குப் பொன் மழை பொழிய வைத்த “கனக தாரா ஸ்தோத்திரம்” பாடியது போல் வேதாந்த தேசிகனிடம் கல்யாணத்திற்குப் பொன் வேண்டி யாசித்த ஏழைப் பிரம்மச்சாரிக்காக மகாலட்சுமியை மனமுருகி, “ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரம்'' பாடி பொன் மழை பொழிய வைத்தார்.

ஆதி சங்கரர் பொழிய வைத்த பொன் மழை:

The saints who made it rain gold!!

கேரளா மாநிலம் காலடி என்னும் ஊரில் சிவகுரு- ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்குப் பிறந்தவர் ஆதிசங்கரர். இவர் சிறு வயதிலேயே குருகுலத்தில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். அந்த காலத்தில் குருகுல வழக்கப்படி நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிக்ஷை ஏற்கப் புறப்படுவார். பிக்ஷை பெற்றதை உண்டு மீண்டும் தம் இறைப்பணியைத் தொடருவார். அதே போன்று ஆதிசங்கரர் ஒரு நாள் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிக்ஷாம் தேஹி" என மும்முறை உச்சரித்தார். அப்போது அவரது வீட்டில் அவருடைய மனைவி தருவசீலை மட்டும் இருந்தாள்.
அவள் வாசலில் வந்து பிக்ஷை கேட்ட பாலக சங்கரனைக் கண்டபோது, சாட்சாத் சிவபெருமானே பாலகன் வடிவில் வந்து பிக்ஷை கேட்பது போல் தோன்றியது. வீடு தேடி வந்த பிள்ளைக்கு பிக்ஷையிட எதுவும் இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டாள். ஒரு உலர்ந்த நெல்லிக்கனி மட்டுமே வீட்டில் இருந்தது. இதனைச் சங்கரருக்கு எப்படி அளிப்பது எனத் தயங்கியவாறே பிக்ஷையிட்டாள். அதைப் பெற்றுக்கொண்ட ஆதிசங்கரர், 'ஏழ்மை நிலையிலும் கூட, தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தானமாகத் தந்துவிட்ட அந்தப் பெண்ணின் குணத்தை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பெண்ணின் ஏழ்மையைப் போக்க எண்ணிய ஆதிசங்கரர், அந்த வீட்டின் முன்பு நின்றபடி மகாலட்சுமியைப் பிரார்த்தித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். அவர் பாட்டுக்கு மனம் இரங்கிய மகாலட்சுமி அவருக்குத் தரிசனம் கொடுத்தார். அப்போது தமக்கு பிக்ஷையிட்ட பெண்மணியின் வறுமை நீங்க வேண்டும் என்று வேண்டினார். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள், பொன் மழையாகப் பொழிந்தன.
ஆதிசங்கரர் அருளிய இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கிப் படித்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

The saints who made it rain gold!!

கனகதாரா ஸ்தோத்திரத்தின் பலன்கள்:
வறுமை நீங்கி செல்வம் பெருகும், நீங்காத புகழ் கிடைக்கும், குறைவற்ற ஆரோக்கியம் கிடைக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும், நிலையான புத்தி கிடைக்கும், பெருகிக் கொண்டே செல்லும் நவநிதிகள் கிடைக்கும், பூரண வாழ்வு கிடைக்கும்.

வேதாந்த தேசிகர் பொழிய வைத்த பொன் மழை:

The saints who made it rain gold!!

வேதாந்த தேசிகர் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். பொ.ஊ.1268 ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் நட்சத்திரத்தில், புதன்கிழமை அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாகக் காஞ்சிபுரத்தில் தூப்புல் எனும் இடத்தில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட நாதன். பின்னாளில் இவர் 'சுவாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபய வேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர சுதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார். இவர் ராமானுஜரின் சம்பிரதாயங்களைப் பின்பற்றி, தமிழ், சமஸ்கிருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாள மொழிகளில் 124 நூல்கள் எழுதி வைணவ நெறியைப் பரப்பினார். 20 வது வயதிலேயே இவர் வேதாந்த ரகசியங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தார். தேசிகர் நாவன்மை மிக்கவர். இது அவரை சிறந்த பேச்சாளராக்கியது. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்தக் கூடியவர்.
வேதங்களின் முடிவான உபநிடதங்களில் கரை கடந்தவர் என்பதான பொருளில் “ நிகமாந்த மஹா தேசிகன்" என்று ஸ்ரீ வேதாந்த தேசிகரைச் சொல்வார்கள். இவர் தமக்கென்று பொருள் எதையும் வைத்துக் கொள்ளாமல், பிக்ஷை எடுத்துத்தான் வாழ்ந்து வந்தார்.
வேதாந்த தேசிகருக்கு “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்" என்ற சிறப்புப் பட்டம் உண்டு. (“ஸர்வதந்திர ஸ்வதந்திரர்" என்றால் வெளி சகாயம் எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக் கூடியவர் என்று பொருள்) இந்த புகழினை பொறுக்க முடியாத சிலர் "ஸர்வதந்திர ஸ்வதந்திரப்பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி, மானபங்கப் படுத்த வேண்டும்” என்று சூழ்ச்சி செய்தனர்.

The saints who made it rain gold!!

பரம ஏழையான பிரம்மச்சாரி கல்யாணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். இந்த ஏழை பிரம்மச்சாரியைக் கொண்டு, அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று சூழ்ச்சி காரர்கள் திட்டமிட்டனர். “இந்தப் பிரம்மச்சாரி அவரிடம் சென்று தனக்குச் செல்வம் வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணட்டும்.
வேதாந்த தேசிகரிடமோ இப்போது பொன், பொருள் எதுவும் இல்லை. ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர' என்றால், அவராகவே எப்படியோ இவனுக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும். ஆனால் அவரால் இப்போது செய்ய முடியாது. இந்த பெரிய பட்டத்தை எப்படி வைத்துக் கொள்ளலாம்?' என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும்" என்று திட்டம் போட்டார்கள். அதன்படியே ஏழை பிரம்மச்சாரியை அவர்கள் ஏவினார்கள். அவனும் தேசிகனிடம் போய்த் தன் கல்யாணத்துக்காக யாசித்தான். வேதாந்த தேசிகருக்கு இது சூழ்ச்சி காரர்களின் சதி என்று தெரிந்து விட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார். அவனுக்காக மகாலட்சுமியை மனமுருக வேண்டி, ஒரு ‘ஸ்துதி’ செய்தார். அதுவே, உத்தமமான “ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரம்''. உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்குக் கொடுத்தார். இதனால் தேசிகருக்கும் மேலும் பெருமை உண்டாயிற்று.
ஸ்ரீஸ்துதி இப்போதும் திருமலையில் ஒலிக்கிறது. வேதாந்த தேசிகருக்குப் பூஜையும் நடக்கிறது. இந்த ஸ்ரீஸ்துதியானது 25 ஸ்தோத்திரங்களைக் கொண்டது. இவற்றில் முதல் 24 ஸ்தோத்திரங்கள் மந்தாகிராந்தா விருத்தம் என்ற முறையிலும், 25 வது ஸ்தோத்திரம் மாலினி விருத்தம் என்ற முறையிலும் பாடப்பட்டுள்ளது. ஸ்தோத்திரம் என்பது இருப்பதை அப்படியே சொல்வது. இந்த ஸ்ரீ ஸ்துதியில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் பற்றியும் வேதாந்த தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஸ்ரீஸ்துதியின் மகிமையாலேயே திருமலை திருப்பதி உண்டியலில் காணிக்கை கோடிக்கணக்கில் குவிந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால் மகாலட்சுமி மற்றும் பெருமாளின் மனதை உருகச் செய்யவும், வற்றாத செல்வ வளம் பெருகவும் ஸ்ரீஸ்துதியைப் பாராயணம் செய்வது உத்தமம்.

The saints who made it rain gold!!

“பொன் மழை பொழிய வைத்த மகான்களும் நம் தேசத்தில் வாழ்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.!!”