ஓட்டலில் தோசையை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தபோது கவனித்த மகன் முத்து, அப்பா... அங்க கல்லாவின் அருகே நிற்பது நம் வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த ரவி சார்தானே என்று கேட்டான்.
ஆமாம்பா, அவர்தான் என்றதற்கு, அவரைப்பார்த்தே ரொம்பநாள் ஆயிட்டுப்பா என்றான் முத்து. வேறு பகுதியில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு குடியேறிவிட்டார் என்றார் சரவணன்.
அவரது மகன் அபிஷேக்கும் நானும் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தோம் என்றவன், பக்கத்திலிருப்பது அவனுடைய தம்பி என்று சொல்லும் போது டேபிளுக்குத் தோசை வந்திருந்தது.
நீ சாப்பிடு என்று முத்துவிடம் சொல்லிவிட்டு,
ரவிசாரை அவரின் மகனிடமிருந்து தனியே அழைத்து தனக்குத் தரவேண்டியத் தொகை எண்பதாயிரத்தைக் கேட்டார் சரவணன்.
என்கிட்ட பணமில்லை, வரும்போது கொடுப்பேன் என்றார் ரவி
எப்போதுதான் வரும் நீங்க எப்போது கொடுப்பீங்க, எந்த நிலைமையிலே உதவி பண்ணினேன் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்றதும்,
அதற்கு நான் என்ன செய்வேன். வீடு கட்டியது, என் பையன் காலேஜ் பீஸ், பெண் காலேஜ் பீஸ்னு பணம் செலவாகிட்டே இருக்கு, வரும்போது வரும்யா என அலட்சியமாக சொன்னது சரவணன் மனத்தில் காயத்தை ஏற்படுத்தியது.
அப்போது அங்கே வந்த ரவியின் இளைய மகன், வாப்பா! போகலாம் என்றதும் சரவணன் சிரித்தபடி அமைதியானார்.
சும்மா..சும்மா நிறுத்தி பணம் கேட்கிற வேலையெல்லாம் வேண்டாம், பணம் வரும்போது நானே கொடுப்பேன் என மேலும் சொல்லி விட்டுச்சென்றது சரவணனுக்கு படபடப்பை மேலும் கூட்டியது. நாமதான் கோபப்படணும், ஆனால் நாம என்னமோ இவர்கிட்டே பணம் வாங்கின மாதிரி பேசிட்டுப்போகிறார் என நினைத்து மகனிருந்த டேபிளுக்கு திரும்பினார்.
என்னப்பா முகம் ஒரு மாதிரி வாடியிருக்கு என கேட்ட மகனிடம் ஒன்றுமில்லை என பொய் சொல்ல வேண்டியதாக இருந்தது சரவணனுக்கு.
அப்பா ஞாபகமிருக்கா, ரவிசாருக்கு உடல் நலமில்லாமல் இருந்த போது தீபாவளி பண்டிகை வந்தது. அவருக்காக வெடிகளைக் கூட நீங்கள் அந்த சமயத்தில் எங்களை வெடிக்க விடலை என்று முத்து சொன்னபோது குழந்தைகளின் ஞாபக சக்தியையும், கவனிக்கும் விதத்தையும் நினைத்து ஆச்சரியமடைந்தார் சரவணன்.
வீட்டிற்குப் போனதும் முத்து, அம்மாவிடம் ரவிசாரையும் அபிஷேக்கின் தம்பியையும் ஓட்டலில் பார்த்ததைச் சொல்ல, அவரு தரவேண்டிய பணம் வந்ததா ஏதாவது சொன்னாரா ? என சரவணனிடம் மனைவி ஆர்வமாய்க் கேட்க, தனது இயலாமையை நினைத்து நொந்துக் கொண்ட சரவணன்,
நீ சொல்லித்தானே பணம் கொடுத்தேன். நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன், அவருக்கு உடல்நிலை சரியில்லை தஞ்சாவூர்லே சேர்த்திருக்காங்க, எதிர் வீட்டுக்காரரு, போகலைனா நன்றாக இருக்காது போய் பார்த்துவிட்டு வாங்கன்னு சொன்னாய், நானும் போனேன். செலவிற்கு பணத் தேவையெனக் கேட்டதும் உடனே கொடுத்தோம், இன்று அதற்கு நான் அனுபவிக்கிறேன் என்றார் சரவணன்.
இரக்கப்பட்டால் இழப்பு நமக்குத்தான் என பேசியதை கவனித்த முத்து, என்னப்பா அவர் என்ன சொன்னாரு ? ஓட்டலில் உங்கள் முகம் அவரைப் பார்த்ததும் ஏன் மாறியிருந்தது எனகேட்டதும்,
ஒன்றுமில்ல முத்து, நாளைக்கு வந்து தொகையினைத் தருவதாகச் சொன்னாரு, நீ ஒன்றும் நினைக்காதே வந்து கொடுத்திடுவார் என்று ஆறுதல் சொன்னார்
முத்து இப்போதுதான் தனது கல்லூரிப்படிப்பை முடித்து வேலைக்குச் சென்றுள்ளான். வெளி உலகம் இன்னும் அவனுக்கு பழக்கப்படவில்லை, அவன் பார்க்கும் நபர்கள், சந்திப்பவர்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் ஏதும் மனதிற்குள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் சரவணன்.
சார்..சார்.. என்று அழைத்தபடி மறுநாள் காலை வேளையில் ரவியின் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்தார் சரவணன்.
என்ன நேற்றுதானே சொன்னேன், சண்டை போடனும்னே வந்திருக்கீங்க போல என சண்டைக்கு வந்தார் ரவி.
பொறுமை...பொறுமை. சார் நான் சொல்றதைக் கேளுங்க.. என்றபோது அவர்களது மகனும் மனைவியும் வாசலுக்கு வந்துவிட இருவரையும் உள்ளே போகச்சொன்ன சரவணன்,
சார் இதிலே எண்பதாயிரம் ரூபாய் இருக்கு, இதை எங்கள் வீட்டிற்கு வந்து என் மகன் மற்றும் மனைவியின் முன்னே நீங்கள் திரும்பக் கொடுத்து விடுங்கள், நான் வாங்கிக் கொள்கிறேன் என்றார் சரவணன்.
என்னை அசிங்கப்படுத்தனும்னு நினைக்கிறீங்களா ? என்னால் தர முடியாதுன்னு நினைத்து உங்க காசுத்திமிரை என்னிடம் காட்டுறீங்களா என சண்டைப் போட ஆரம்பித்தார் ரவி.
அதெல்லாம் இல்லீங்க.. என் மகனுக்கு இந்த சமூகத்தைப்பற்றியும்,மனிதம், நேர்மைப் பற்றியெல்லாம் நிறைய சொல்லி வளர்த்திருக்கேன், அவனும் நான் சொன்னதை நம்பி அறத்தோட கூடிய வாழ்வுதான் சிறந்த வாழ்வு என இரக்க குணத்தோடும், நேர்மறையான சிந்தனையோடும் வளர்ந்து வருகிறான்.
பள்ளிக்காலத் தோழனின் அப்பாவான உங்கள் மீதும் அவன் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறான். அதனால்தான் சொல்கிறேன் எவர் மீதும் அவனுக்கு தவறான கண்ணோட்டம் வந்துவிடக்கூடாது, வேறு ஒன்றுமில்லை என்றதும் பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே வந்த ரவியை அவரது இளைய மகனும், மனைவியும் பார்த்த பார்வை ரவிக்கு தக்கப்பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தது.
Leave a comment
Upload