தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை -26 -மரியா சிவானந்தம்

20250429222454882.jpg

பிரிந்துச் சென்ற காதலனின் நினைவு அக்காதலியை வாட்டுகிறது .

அவனை நினைத்து, நினைத்து மருகிக் கொண்டு இருக்கிறாள் அவள் .

மலைத்தேசம் சென்றவன் என்று திரும்பி வருவான் என்ற ஏக்கம் அவள் நெஞ்சில் பெருகிக் கொண்டே இருக்கிறது .

மனதின் துயரம் அவள் உடலில் வெளிப்படுகிறது .

பசலைப் பூத்து வெளிறிய உடல் , காமத்தால் தகிக்கிறது.

நாட்கள் செல்ல அவள் உடல் நலம் கெடுகிறது.

காதலியின் தாய் இவள் நிலைமையைக் கண்டும் காணாதவள் போல 'இரக்கமற்றவள்' போல இருக்கிறாள்

இத்துன்ப காலத்தில் காதலியின் ஒரே ஆதரவு அவளது தோழி மட்டுமே ,

அவளிடம் காதலி ,'எனக்கு மூச்சு முட்டுவது போல இருக்கிறது . அவன் இருக்கும் மலைநாட்டில் இருந்து வீசும் காற்று என் மேல் பட வேண்டும் " என்னை வெளிமுற்றத்தில் விட்டு விடு " என்று கேட்கிறாள்.

தன்னைக் கனிவுடன் தேற்றும் தோழியிடம் மனம் திறக்கிறாள் :

" தோழி , என்னை வருத்தும் காமநோய் அதிகமாகி விட்டது. என் உடல் அதனால் தீயில் எரிவதைப் போல தகிக்கிறது. என் உயிர் உடலில் தங்கி இருப்பது அரிய செயலாக இருக்கிறது.

எனக்கு மூச்சு முட்டுவது போல இருக்கிறது.என் மேல் வெளிக்காற்று பட வேண்டும் . நான் "ஒய் " என்று ஒலி எழுப்பி ,இலகுவாக மூச்சு விட வேண்டும் .

நீ ஒன்று செய் !

'என் அன்னையிடம் சென்று பேசு'

"என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் இப்போது இருக்கும் மலையின் உயர்ந்த சிகரத்தில் பரவி, அங்குள்ள பாறைகளில் அலைந்திருக்கும் குளிர் காற்று . அக்குளிர் காற்று , பசலையால் வாடி இருக்கும் என் உடல் மேல் சிறிதேனும் பட வேண்டும்.

" இவளை முற்றத்தில் படுக்க வைத்தால் , இவள் உடல் நலம் பெறும், இவள் வாழ்வாள் " என்று என் மேல் சிறிதும் இரக்கம் இன்றி காவல் காக்கும் , நரகம் போன்ற மனம் கொண்ட என் அன்னையிடம் போய் சொல் ." என்று தன் நிலையை எடுத்துக் கூறுகிறாள்.

நம்பி குட்டுவனார் என்னும் புலவர் எழுதி அளித்த நற்றிணைப் பாடலின் சாரம் இது.

மலைக்காற்றில் கலந்திருக்கும் காதலனின் மூச்சுக்காற்று தன் மேல் பட்டால் உயிர் வாழ முடியும் நம்பும் பேதைப் பெண்ணின் கவி மனதை நம்மால் உணர முடிகிறது.

நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு

உரை, இனி- வாழி, தோழி!- புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.
(நற்றிணை 236)

மேலும் ஒரு அழகான பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்

தொடரும்