தொடர்கள்
தொடர்கள்
பயணிகள் – கே. ரங்கநாதன்

20250430183056309.jpeg

அதிகாலை 4.30 மணிக்கு அந்த பஸ் கும்பகோணம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. குடவாசல் ஸ்டாப்பில் ஒரு தம்பதி இறங்க வண்டி நின்றது. அங்கே கிராமத்துக் கிழவி தன் பத்து வயதுப் பேரனுடன் சுறுசுறுவென்று ஏறினாள்.

“இந்தா அப்பனே… கும்மோணத்துக்கு ரெண்டு சீட்டு” கசங்கிய நோட்டை நடத்துநரிடம் நீட்டினாள்.

“சில்லறையாக் குடும்மா”

“இல்லையே… மிச்சத்தை அப்புறம்தான் கொடேன். எங்க போகப்போறே?”

“செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தா… என்கிட்ட பணம் அதிகமா இருக்குன்னு மெமோ வாங்கணும்…”

நடத்துநர் சில்லறைக்காக விவாதிக்கவே ஆரம்பித்துவிட்டார்.

கிழவியும் மூன்று விதமாகப் பேசிப் பார்த்தாள். முதலில் குரல் உயர்த்தி, அடுத்து கெஞ்சி, பின் அழுது. அவர் மசியவில்லை.

“இறங்கி பொடி நடையாப் போங்க ரெண்டு பேரும். வீட்லேர்ந்து சில்லறை மூட்டையா கொண்டாறேன்?”

மனித மனம் இயந்திரங்களுடன் இயங்கும் நேரம் கூடிவிட்டதால், அடுத்தவரைப் பற்றி ஈரமாக யோசிக்க அவகாசம் இல்லை. அவருக்கு என்ன ஓய்வின்மையோ!

எதற்கும் பதில் சொல்லாமல், தூங்கி வழிந்த பேரனை அணைத்தபடியே ஜன்னலோரம் சாய்ந்திருந்தாள் கிழவி. நடத்துநர் கோபத்தில் விசில் அடிக்க முனையும்போது மூன்றாவது வரிசையில் இருந்த ஜெயராமன் எழுந்து வந்தார்.

“கண்டக்டர், இந்தாங்க அவங்க டிக்கெட் பணம். பாவம். கும்பகோணம் இன்னும் இருபது கிலோமீட்டர். இறக்கிவிட்டா எப்படிப் போவாங்க?”

கிழவி நிம்மதியடைந்தாள். வாய் திறந்து கொஞ்சம் சத்தமாகவே வாழ்த்தினாள்.

“மவராசனா இருப்பா. கும்மோணம் போயி சில்லறை மாத்தித் தாரேன்.”

“வேணாம் பாட்டி. இறங்கினதும் பேரனுக்கு டிஃபன் வாங்கிக்கொடுங்க.”

பேருந்தின் ஓட்டத்தோடு சாலையின் இருபுற மரங்களும் பச்சை பச்சையாய் ஓடிக்கொண்டிருந்தன. ஜெயராமனுக்கு பள்ளி விடுமுறையில் தன் பாட்டியுடன் கிராமத்தில் இருந்த நாட்கள் நினைவில் ஓடின.

*** *** ***

ஒணான் வாலில் கயிறு கட்டி, தலைக்கு மேல் சுழற்றும்போது பாட்டி திட்டுவாள்.

“அடுத்த சென்மத்துல நீ ஓணானாப் பொறக்கப் போற பாரு. அது உன்னை இதே மாதிரி செய்யும். தூக்கிப்போட்டிட்டு உள்ளே வந்து படு.”

“பாட்டி… நான் ஏன் இப்படி ஓணானச் சுத்தறேன் தெரியுமா? போன ஜென்மத்துல அது என்னை இப்படிப் பண்ணுச்சு…” என்று ஜெயராமன் கேலியாகச் சிரித்தும் பாட்டி விடவில்லை.

“எதையும் இம்சிக்காதே ஜெயம்… அவ்ளோதான்… கோபத்தை அடக்க பத்து தடவை தலகாணியைக் குத்தினாக் கூட, எங்கேயாவது படுக்கப் போகும்போது உனக்கு மட்டும் தலகாணி கிடைக்காமப் போயிரும்.”

பாட்டியின் அந்த வார்த்தைகள்… காரணமிருந்தால்கூட யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்க, காரணமில்லாமல் கூட யாருக்கும் எழுந்து உதவ, உதவியது.

*** *** ***

சற்று வேகமாகிவிட்டது பிரயாணம். ஜன்னலிடம் நெருங்கி குளிர்ந்த காற்றை வாங்கப்போகும்போது…

டமார்…

முன் புறம். இடது ஓரம். சாலையில் தார் பேரல்களுடன் லாரியை ஓரமாக நிறுத்தித் தூங்கிக் கொண்டிருந்தார் லாரி ஓட்டுநர். பேருந்து ஓட்டுநரும் கண் அயர்ந்துவிட்டாரோ… ஒரே நொடி.

பேருந்தின் முதல் மூன்று வரிசைகள் அவரைப் பந்தல்போல நொறுங்கியிருக்க…எல்லோரும் சரிந்து விழுந்து கிடந்தார்கள். கூச்சல். பயம். அலறல்.

மேலே மாட்டியிருந்த திருக்குறள் பலகை முதல் வரிசை இருக்கையின் கீழும், படிக்கட்டின் அருகிலும் இரண்டு துண்டாக விழுந்து கிடந்தது.

நல்லோர் ஒருவர் … எல்லோர்க்கும் பெய்யு...

அதிகாலையில் பேருந்து கிளம்பும்போது யாரோ யாரோவாக இருந்தவர்கள், விபத்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் ஒருவருக்கொருவர் கை தூக்கி, உடைமைகளைச் சரிபார்த்து, நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

நடத்துநரின் வீங்கிய நெற்றியைத் தேய்த்துவிட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தாள் கிழவி, “ஒண்ணும்ல்ல ஒண்ணும்ல்ல அப்பனே… சரியாயிடுச்சு!”

*