நம் நாட்டில் பண்டிகை நாட்களில் ரயிலில் முன்பதிவு வசதி குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. இதனாலே பலரின் விமானப் பயணங்கள் அதிகரித்து வருகிறது.
ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விமானத்தில் வேகமாகச் செல்ல முடியும் என்பதால், குறிப்பிட்ட பிரிவினர் அதிக விலை கொடுத்து விமான பயணங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களில் பலரும் விமான டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் விமான சேவையைப் பயன்படுத்தவே யோசிக்கின்றனர். இதில், வெறும் ₹500க்கும் குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட் கிடைத்தால் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள்.
சூப்பரா இருக்கும்தானே!
இத்தாலியைச் சேர்ந்த ‘ஏவியோ இன்டீரியர்ஸ்’ என்ற விமான நிறுவனம், அடுத்த ஆண்டு (2026) முதல் விமானத்தில் நின்றபடி பயணம் செய்யும் வகையில், ‘ஸ்கை ரைடர் 2.0’ எனும் புது வகை சீட் ஒன்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இதன்மூலம் நம்மால் விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியும். இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இதில், நீங்கள் சீட்டில் நின்றபடியே பறக்க வேண்டியிருக்கும்.
முதல்கட்டமாக, ஐரோப்பாவில் இயங்கும் சில மினிமம் கட்டண ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த புதுவகை சீட்களை அறிமுகப்படுத்துகிறது. அங்கு இவை வெற்றி அடைந்ததும் விரைவிலேயே இந்தியா உட்பட இதர ஆசிய நாடுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இத்தாலியைச் சேர்ந்த ஏவியோ இன்டீரியர்ஸ் என்ற விமான நிறுவனம் இந்த புதுவகை சீட்களை வடிவமைத்துள்ளது.
இந்த புதுவகை சீட்டில் சுமார் 45 டிகிரி கோணத்தில் பயணிகள் நிற்பார்கள். பெரும்பாலும், அவர்களின் கால் தசைகளே உடல் வெயிட்டை தாங்கி பிடிக்கும். பயணியின் பாதுகாப்புக்கு ஒரு வினோத சீட் பெல்ட்டையும் கொண்டுள்ளது.
பல ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்போது ஏதாவது நடந்தால் சமாளிக்க முடியுமா என்ற கேள்விகள் வரலாம். இந்த வினோத பெல்ட்டில் தேவையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இருப்பதாகவும், அவை பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி இருப்பதாகவும் ஏவியோ இன்டீரியர்ஸ் நிறுவனம் உறுதி தெரிவித்துள்ளது.
இந்த புதுவகை சீட்களை விமானத்தில் பொருத்தினால், வழக்கமான எகானாமி சீட்களை காட்டிலும் 20 சதவிகித சீட்களை கூடுதலாக வைக்கலாம். அதாவது, 100 எகானாமி சீட் இருக்கும் இடத்தில் இதை 120 சீட்டுகளாக வைக்கலாம். அதிக பயணிகளை ஏற்ற முடியும். இது வழக்கமான சீட்களை காட்டிலும் பாதி எடை மட்டுமே! இதனால் விமானத்தின் எரிபொருள் செலவு கணிசமாக குறையும். இதுதவிர கிளீனிங், மெயின்டெனன்ஸ் என அனைத்துமே சீக்கிரமாகவே முடித்துவிட முடியும்.
இதனால் விமானத்தை அதிக நேரம் பயன்படுத்த முடியும். ஒட்டுமொத்த விமான டிக்கெட் கட்டணமும் கணிசமான அளவில் குறைந்துவிடும். இதையெல்லாம் படித்துவிட்டு, ‘பேருந்து மற்றும் ரயில்களின் படிக்கட்டுகளில் புட்போர்டு பயணம் செய்வதைப் போல், விமானத்திலும் புட்போர்டு பயணம் செல்லமுடியுமா!’ எனக் கேட்பது காதில் விழுகிறது. அப்புறம்… எல்லாருக்குமே ‘சங்கு’தான்!
Leave a comment
Upload