இருவீட்டார் தரவில்லை சம்மதம்...
தெருக்கோவில் தந்தது திருமணம்..!
விடுபட்டு உறவுகளின் சம்பந்தம்...
அறுபட்டு நின்றது மறுகணம்...!
எதிர்த்து திருமணம் முடித்தோர்...
தவித்துத் தான் வாழ்வாரோ...?
துணைக்கு யாரென்ற நிலையில்,
துணைவியோ தாய்மை நிலையில் !
காதல் கொண்டு கைகோர்த்து,
கண்ணின் இமைபோல் காத்து,
தாயெனும் தவம் பெற்றவளாய்,
மகப்பேறு மனையில் மனைவி...!
தொலைத்து விட்டு வந்த உறவு...
தொலைதூரம் வந்த நினைவு...!
தனியாய் தவித்த உள்ளுணர்வு ...
தாயை அழைத்திடச் சொன்னது...!
வருடமாய் பேசாத அன்னையிடம்,
தொலைபேசி குறைத்தது தூரம்...!
வார்த்தைகள் வராத நிலையில்..
வாழ்வின் நிலை சொல்கின்றான்..!
வயிற்றுப் பிள்ளையுடன் மனைவி,
போராட்டமோ மருத்துவமனையில்...
ஆறுதல் சொல்வார் யாருமின்றி,
அநாதை போல் நிற்பதையும் .....
பெற்றவள் பற்று மேலோங்க...
பற்றிய கைபேசியை கீழே விழ...!
பெற்ற தந்தைக்கு புரியவில்லை...
யார் அழைப்பில் என்கின்றார்...?
பிள்ளையின் நிலைமை சொல்ல,
தந்தை பாசம் தடுக்கவில்லை..!
தன் பிள்ளை செய்து தவறுக்கு...
பெண்பிள்ளை என்ன செய்யும்...?
"மகனைப் போய் பார்த்து வா நீ...
என் உயிர் உடல்பிரியும் வரை
என் விழிகள் காணாது மகனை..!
தந்தை உரைத்தார் சூளுரை...!
தாய் நிறைத்தார் கண்ணீரை...!
பதறி ஓடியது தாயின் பாதம்...
அலறி துடித்தது கைபேசி சத்தம்..
தந்தையின் காதில் மகனின் குரல்...
ஆண் குழந்தை பிறந்தான் அம்மா...
அப்பாவை போல் உள்ளதம்மா...!
சேதியில் செவிகள் குளிர்ந்தன..
வீதியில் கால்கள் விரைந்தன...!
விழிகள் நனைந்தது கண்ணீரில்...!
மனதும் நிறைந்தது மகிழ்ச்சியில்..!
ஏங்கி நின்ற கண்களுக்கோ,
தாயைக் கண்டு ஆனந்தம்...!
தாங்கி நின்ற தாயினுக்கோ,
பேரனைக் கண்டு ஆனந்தம்...!
வாயிலில் நின்ற தந்தையை
வாயில் வார்த்தைகள் இன்றி,
கைகள் பற்றி அழைக்கிறான்...
காணுங்கள் பேரனை என்று...!
பிள்ளையால் பிரிந்த பெற்றோர்
பேரப்பிள்ளையால் இணைந்தனர்..!
பெற்றோர் ஒதுக்குவது இல்லை...!
பிள்ளையால் ஒதுக்கப்படும் நேரம்,
பெற்றோர்கள் ஒதுங்க நேரும்...!
பெற்றோர் ஏமாற்றுவது இல்லை...
ஏமாந்த பெற்றோர்தான் உண்டு..!
பாலா கோவை
Leave a comment
Upload