இவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை
கவிஞர் அ.வெண்ணிலா - கவிஞர் மு .முருகேஷ் தம்பதியர்..
தமிழ் இலக்கிய உலகில் கால் பதித்து முப்பது ஆண்டுகளாக எழுத்து, பேச்சு,சமூகப்பணி என்று சுழன்று சுழன்று செயலாற்றும் இணையர்கள்.
வந்தவாசி நகரின் அடையாளமாக இருந்து வரும் கவிஞர் வெண்ணிலா நீரதிகாரம் ,கங்காபுரம் உள்ளிட்ட நாவல்களும் கட்டுரைத் தொகுப்புகள் , சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத்தொகுப்புகள் என்று எழுதி குவித்துள்ளார்.
அவரது காதற்கணவர் மு.முருகேஷ் முதன்மை குழந்தை எழுத்தாளர் .சிறுகதை நூலுக்காக பால புரஸ்கார் விருது பெற்றவர்.தமிழ் ஹைக்கூ கவிதைகளை ஒருங்கிணைப்பவர் . அறிவியல் இயக்கத்தில் இருந்து பள்ளி மாணவர்களுக்காக செயல்படும் ஆர்வலர் .
தமிழ் இலக்கியம் மட்டுமல்ல ,பள்ளிக் கல்வி பாடத் திட்ட வரைவிலும் இவர்கள் இருவரது பங்களிப்பு மகத்தானது .
சமீபத்தில் இந்த இலக்கிய ஆளுமைகளின் மகள்கள் குடிமைத்தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை அனைவரையும் பெருமை கொள்ள வைத்துள்ளது .
இவர்களுக்கு மூன்று மகள்கள் மு.வெ .கவின்மொழி , மு.வெ .நிலா பாரதி ,மு.வெ. அன்புபாரதி.இவர்களில் கவின்மொழி ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை அதிகாரி ஆகிறார் , நிலா பாரதி ஐஎப்எஸ் தேர்வில் தமிழகத்தில் முதல் இடத்திலும் அகில இந்திய ரேங்கில் 24 ஆம் இடத்தையும் பிடித்து வனத்துறை அதிகாரி ஆகிறார்.ஒரே வீட்டில் இருந்து இரு பெண்கள் குடிமைத் தேர்வுகளில் வென்று தம் பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மூன்று பெண்களுமே படிப்பில் சுட்டிகள் . 'பேப்பரில் பேர்' வரும் அளவுக்குப் படிப்பவர்கள் .அரசுப்பள்ளியில் படித்து ,ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள். பள்ளி படிப்புக்குப் பின் மாணவர் பெருமளவில் தேர்வு செய்யும் .மருத்துவம் ,பொறியியல் படிப்புகளைத் தவிர்த்து மூவரும் இளங்கலை (வேளாண்மை ) தேர்ந்தெடுத்து படித்து அகில் தங்கப்பதக்கம் வாங்கி தேர்ச்சி பெற்றுள்ளனர் .
ஐஏஎஸ் தேர்வு என்னும் பெற்றோரின் தங்கள் கனவாக மாற்றிக் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர் . இப்போது இவர்கள் இருவரும் பெற்ற வெற்றி அனைவரையும் மகிழ்ச்சி பெருமிதத்தில் ஆழ்த்தி உள்ளது.
"இவர் தந்தை என் நோற்றான் கொல் ?" என்னும் குறளுக்கு பொருத்தமான மனநிலையில் இருக்கும் இச்சாதனையாளர்களின் தந்தை கவிஞர் முருகேஷ் அவர்களை விகடகவிக்காக நேர்காணல் செய்தோம் .
" வாழ்த்துக்கள் , நீங்கள் இருவருமே இலக்கியம், சமூகப்பணி என் தொடர்ந்து செயல்படுபவர்கள் . உங்கள் மகள்கள் இப்போது புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறார்கள். இதற்கான வீட்டுச் சூழலை எப்படி உருவாக்கி இருக்கிறீர்கள் ?
" எங்கள் வீட்டுச் சூழலே பிள்ளைகள் தங்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் . எங்களைப் போலவே அவர்களும் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் . புத்தகத் திருவிழாக்களில் கலந்துக் கொண்டு அவரவருக்கு தேவையான நூல்களை வாங்கிக் கொள்வார்கள் . வீட்டில் உள்ள ஆறு அறைகளில் ஏழாயிரம் நூல்கள் உள்ளன. இந்நூல்களின் நடுவில்தான் நானும், மனைவியும் மகள்களும் வசிக்கிறோம் .
கவிஞர் வெண்ணிலாவின் ஆசை 'ஒரு கலெக்டர் ஆக வேண்டும் . அந்த ஆசையை மகள்களுக்கும் சிறு வயதில் இருந்து விதைத்து வந்துள்ளோம் . படிப்பைத் தவிர மகள்களுக்கு கலைகளில் ஆர்வம் உண்டு. சிலம்பாட்ட ம் கற்றுக் கொண்டார்கள். அது உடலுக்கும் , மனதுக்கும் வலிமையைத் தரக் கூடியது. கல்வியின் முக்கியத்துவம் அறிந்த குழந்தைகளாகவே அவர்கள் வளர்ந்தார்கள் .
" நீங்கள் இருவரும் பெண் கல்வி, பெண்களுக்கு சம வாய்ப்பு, ஆண் பெண் சமத்துவம் பற்றி பேசவும், எழுதவும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உழைப்பவர்கள். இவை பற்றி உங்கள் மகள்களிடம் விவாதித்து இருக்கிறீர்களா? "
"நிச்சயமாக ., பெண்ணிய கருத்துக்களுடனே தான் அவர்கள் வளர்ந்தார்கள். உறவு வட்டங்களில் , '"மூன்று பேரும் பெண் குழந்தைகளா ? " என்று எதிர்மறையாக் பேசிய போது , " ஆண் என்ன , பெண் என்ன ?' கல்வி வாய்ப்பு எல்லோருக்கும் பொது என்று அவர்களை சிறப்பாக படிக்க வைத்தோம் . சுதந்திரமாக சிந்திக்க கற்றுத் தந்துள்ளோம் .
இன்னும் நாம் சமூகத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய, எங்களின் சமூகக் கனாக்களை நிறைவேற்ற அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாக ஆவது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
எங்களைச் சுற்றியுள்ள நல்ல உள்ளங்களின் வழிகாட்டுதல்களும் , ஆலோசனைகளும் அவர்களுக்கு உதவியாக இருந்தன . என் மனைவி அவர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தார்.அவர்களுடனே , அவரும் சேர்ந்துப் படித்தார் என்றே சொல்ல வேண்டும் கவின் மொழி, நிலா பாரதி இருவரின் தொடர் முயற்சி, உழைப்பு எல்லாமே இந்த வெற்றியைச் சாத்தியமாக்கின" என்று முடித்துக் கொண்டார்
பெண்கல்வி முக்கியத்துவம் பெற்று, பெண் குழந்தைகள் சுயம்புகளைப் போல உருவெடுத்து, நிர்வாகப் பொறுப்புகளில் அமரும் காட்சி கண்ணுக்கும் , மனதுக்கும் குளிர்வாக இருக்கிறது . இளையச் சமூகம் சரியான பாதையில் செலுத்தப்படுவது நிறைவாக இருக்கிறது
ஊக்கமும் , சூழலும் அமைந்தால் கவின்மொழிகளும் , நிலா பாரதிகளும் வந்தவாசியில் மட்டுமல்ல , தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர்களிலும் எழுவார்கள் என்பதில் ஐயமில்லை .
சாதனைப் பெண்களுக்குப் பாராட்டுக்கள்
Leave a comment
Upload