
செங்கோட்டை நகரில் வாழ்ந்தவர் புலவர் பண்டாரத்தையா.
இவர் திருக்குற்றாலம் சென்று திருக்குற்றால நாதரை தரிசனம் செய்தார்.
குழல்வாய் மொழி அம்மையுடன் காட்சி தந்த குற்றால நாதனைப் பற்றி பின்வரும் பாடலையும் இயற்றினார்.
அருவித் திரிக்கூடத் தயா! உனைநான்
மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்- ஒருவி மலைக்கு
ஆதியிலே பாதி தந்தாய் அத்தகை வேண் டாமெனுக்குப்
பாதியில் பாதிதந்து பார்
குற்றால அருவிக் கரையிலருளும் திரி கூடத்தையனே!
இப்போது உன்னை நான் சேர்ந்த பின்னர், பிரிந்திருக்க இயலாதவன் ஆனேன்.
அந்நாளில், (ஒரு விமலைக்கு) உமையாளுக்கு உன்னில் சரிபாதியை தந்து மாதொருபாகன் ஆகினாய்.
உன்னிடம் நான் அந்த அளவு பாதியை கேட்க மாட்டேன்.
அந்தப் பாதியில் பாதியைத் தந்தால் போதும்.
புலவர் பாதியில் பாதியை கேட்கிறாரே! பாதியில் பாதி ‘ கால்’ அல்லவா?
புரிகிறது! புலவர் திருக்குற்றாலநாதரின் திருவடியை கேட்கிறார்!
அவன் திருவடி அருளிருந்தால் வேற என்ன வேண்டும்?!
வேறொரு பாடலுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

Leave a comment
Upload