தொடர்கள்
அரசியல்
பேரறிவாளன் விடுதலை சட்ட போராட்டம் - பாகி

20220421171029174.jpeg

1991ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி….இரவு சுமார் 10 மணி,பெரியார் திடலில் விடுதலை பத்திரிகை அலுவலகத்தில் கணிணி பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த 19 வயது இளைஞரை அங்கே வந்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) போலீசார் ஒரு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

மறுநாள் செய்தித் தாளில்ராஜீவ் படுகொலை சம்பவம் தொடர்பாக பேரறிவாளன் என்ற இளைஞன் கைதுஎன்ற செய்தியைப் படித்த அவரது தாயார் அற்புதம்மாள் அதிர்ந்து போனார்.

1991ம் ஆண்டு மே 21 இரவு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தார். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து புலன் விசாரணை தொடங்கியது. ராஜீவ் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது .இதில் பேரறிவாளனும் ராஜீவ் கொலையில் உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ போலீசாரும் தண்டனை பெற்றவர்களும் தனித்தனியே மேல்முறையீடு செய்தனர். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

அதையடுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவிக்குக் கருணை மனு அனுப்பினர். அது நிராகரிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என அந்த நால்வரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி தான் ஆளுநர் முடிவெடுக்க இயலும் என்று தெளிவுபடுத்தியது.

மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதன் முதல் தொடக்கப் புள்ளி இதுதான். 2000ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அமைச்சரவை கூடி நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் எனத் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், மற்ற மூவரது நிலை குறித்து எதையும் கூறவில்லை.

இந்நிலையில் தங்கள் மீதான மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அப்போதைய குடியரசுத் தலைவர்கள் யாரும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அடுத்து வந்த பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவரான பின் அந்த கருணை மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை மத்திய அரசு 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சியைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம் பெண் தீக்குளித்து இறந்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

11 ஆண்டுகளாக எங்களது தலைவிதி என்ன என்றே தெரியாமல் மன உளைச்சலுடன் சிறைகளில் இருக்கிறோம்என்று குறிப்பிட்டனர். மரண தண்டனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

2014ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு எந்த வித காரணமும் இல்லாமல் கருணைமனுக்கள் நிலுவையில் இருந்ததைச் சுட்டிக் காட்டி மூவரின் மரண தண்டனையையும் ரத்து செய்தது.

அப்போது தான் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மூச்சே வந்தது. இத்தீர்ப்பு வெளியான மறுநாள் பிப்ரவரி 19ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

ஆனால், இதை எதிர்த்த மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்ததால், இந்த விடுதலைக்குத் தடை பெற்றது.

மத்திய அரசு புலனாய்வு செய்ததால் மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்ய இயலாது என்று கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யலாம் எனச் சுட்டிக் காட்டியது.

பின்னர் தமிழகத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை எழு பேரையும் விடுதலை செய்வதாக 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.

இதன் விளைவாக, 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற மு.. ஸ்டாலின் அரசு காலதாமதத்தைச் சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்தது.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் மூவர் கொண்ட அமர்வு பேரறிவாளனை 161வது பிரிவின் கீழ் ஏற்கெனவே இருந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்தது.

ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளியான சிவராசன்,பேரறிவாளனிடம் 9 வோல்ட் பேட்டரி இரண்டு வாங்கித் தரும்படி பணித்துள்ளான்.

ராஜீவ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ பேரறிவாளன் பேட்டரி வாங்கிக் கொடுத்ததை அறிந்தனர். அதனால், அவருக்கும் கொலைச் சதிக்கும் சம்பந்தம் இருந்திருக்கும் என்ற வழக்கமான போலீஸ் சந்தேகத்தில் திராவிடர் கழகத்தின் விடுதலை இதழ் அலுவலகத்தில் பணியில் இருந்த பேரறிவாளனைக் கைது செய்து, அடையாறில் மல்லிகை இல்லத்தில் இயங்கி வந்த சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (Special Investigation Team) அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை தொடங்கினர்.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு செயல்படுவதற்கான சக்திவாய்ந்த பேட்டரிகளை வாங்கித் தந்து சதியில் ஈடுபட்டார் என பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்த தீர்ப்பு வழங்கிய முதல் கட்டத்தில் புகைப்படம் எடுத்த சுபா சுந்தரம் உள்பட 29 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி பேரில் 7 பேர் இறுதிக் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றனர். அவர்களில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சட்டப் போராட்டங்களை அடுத்து நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.பின்னர் கருணை மனு உள்பட பல்வேறு சட்டப் போராட்டங்களை அடுத்து அந்த மூவருக்கும் மரண தண்டனை குறைக்கப்பட்டது.

வை.கோ. முயற்சியால் ராம் ஜேத்மலானி உதவியுடன் சட்டப் போராட்டம் தொடர்ந்தது. இதில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அப்போதைய பிரதமரிடம் மன்றாடிக் கேட்பதாகக் கடிதமே எழுதினார்.பேரறிவாளன் தாயார் பல தடவை தில்லிக்கு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து தனது மகனின் விடுதலைக்கு போராட தொடங்கினார்.

இதனிடையில் மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் 2006ம் ஆண்டு கைதான சஞ்சய் தத் 2013 மே மாதம் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர், 2016, பிப்ரவரி 12ம் தேதி விடுதலை பெற்றார்.

இந்த வழக்கில் சஞ்சய் தத் விடுதலை பெற்றதன் பின்னணி குறித்து அறிய விரும்புவதாக பேரறிவாளன் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதன் அடிப்படையில் தனக்கு விடுதலை கோரி நீதிமன்றத்தில் முறையிட வழி கிடைக்கும் என்ற அடிப்படையில் மனு செய்திருந்ததார். மும்பை உயர் நீதிமன்றம் அது குறித்த தகவல்களைப் பேரறிவாளனுக்குத் தெரிவுக்கும்படி தகவல் உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அந்த வழக்கு விவரங்களும் பேரறிவாளனின் விடுதலைக்குச் சாதகமாக அமைந்தன. சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக சிறையில் தண்டனைக் காலத் தள்ளுபடி பெற்றது பேரறிவாளனின் கோரிக்கையில் இடம்பெற்றது.

முடிவு எடுக்காத நிலையில் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்களே விடுவிக்க இயலும்என்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், போபண்ணா, கவாய் ஆகியோர் கடந்த வாரம் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த போது சிறைத் துறையின் மூலம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயப் படிப்பையும் கணினிப் பயன்பாட்டு பட்டமேற்படிப்பையும் (MCA) சிறப்பிடம் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இதனிடையில் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும்என்று முதல் முறையாக சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார் இந்த அம்மா.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2017ம் ஆண்டு பேரறிவாளனை பரோலில் விடுவித்தது. இத்தகைய முயற்சிகளை முன்னே நகர்த்தியது மு.. ஸ்டாலின் அரசு.

காலம் கடந்த கொண்டிருந்த நிலையில், ஒரு பெண்மணி மனம் தளராமல் 31 ஆண்டுகள் சட்டத்தை மட்டுமே நம்பி போராடி கடைசியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நீதி கேட்டு நெடிய பயணம் செய்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனதைரியம் மட்டுமே ஜெயித்தது என்பது தான் இங்கே ஹைலைட்.