தொடர்கள்
வரலாறு
கிராமத்து சுதந்திர தாகம்-இந்துமதி கணேஷ்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிற கி. ராஜநாராயணன் தன்னுடைய படைப்புக்காக இந்தியாவின் உயரிய விருதான சாகித்ய அகாடெமி விருது வென்றவர்.

இந்தியா சுதந்திரம் வாங்கிய நாட்களில் கிராமங்கள் எப்படி இருந்தன என்பதை கண்டு எழுதிய ஒரு மகத்தான எழுத்தாளன்.

கரிசல் நில மக்களின் பாடுகளை பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார். அவர் எழுதிய "கோபல்லபுரத்து மக்கள்" என்ற புதினத்தில் கிராமங்களில் வாழும் மக்களிடத்தில் சுதந்திர போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை குறித்து விரிவாக எழுதுகிறார்.

கோபல்லபுரத்தில் வெள்ளையர் ஆட்சி காலத்தில் வந்து சேர்ந்த பொருட்களையும் அதனால் ஊரில் ஏற்பட்ட மாற்றங்களையும் சுவைபட எழுதுகிறார் கி. ரா.

முதலில் மக்கள் தன் ஊரில் உள்ள ஏட்டு பள்ளிக்கூடங்களை விட்டு வெளியூருக்கு போய் படிக்கத் தொடங்குகிறார்கள், அப்படி படிக்க போன இளைஞர்கள் தன் குடுமியை வெட்டிக்கொண்டு கிராப்பு அல்லது சேக்கு வைத்து கொண்டார்கள் என்பதே ஊரில் உள்ள பாட்டிமார்களுக்கு மிக பெரிய வருத்தம்.

பின்பு அவர்கள் மூலம் கடிகாரம், பூட்டு, டார்ச் லைட் என்று பல விஷயங்கள் ஊருக்குள் வருகின்றன. எனக்கு அந்த ஊர் மடத்தை தான் மிகவும் பிடித்திருந்தது.

அந்த நாட்களில் அவரவருக்கு தனியாக வீடு இருந்தாலும், ஆண்கள் மடத்தில் வந்து வம்பு பேசி கதையடித்தபடியே தான் உறங்கி இருக்கிறார்கள். அந்த ஒற்றுமையை இப்போதுள்ள மக்களிடம் எதிர்பார்க்கவே முடியாது எப்போதாவது கூடும் போதே எவ்வளவு பஞ்சாயத்துகள்! முக்கியமாக அந்த நாட்களில் பெரியவர்களுக்கு மரியாதை தரும் விஷயங்களில் சமரசங்களே இல்லை என்று தோன்றுகிறது.

ஊர் மடத்தில் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பை பற்றியும் பெருசுகளின் பிரமிப்பும் கிண்டலும் வாசிப்பதற்கு அலாதி தான். முதல் முதலில் ரயிலை பார்த்து ஊரில் பாதி பேர் சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டதை மன்னார் நாயக்கர் வாய்வழி வாசித்து சிரித்து தீரவில்லை.

அந்த நாட்களில் டார்ச் லைட் இல்லாததால் கிளம்பிய பல கற்பனை கதைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்த இந்த கண்டுபிடிப்ப்புகளை சபிப்பதா அல்லது அதன் உபயோகங்களை எண்ணி வியப்பதா என்று திகைக்கிறது மனம்.

தேச தந்தை காந்தியின் தாக்கத்தில் ஊருக்குள் இருக்கும் இளைஞர்கள் பலர் மது ஒழிப்புக்காக போராடுகிறார்கள். ஆனால் கிராமத்தில் மதுகுடம் எடுக்கும் வைபவம் நடக்கிறது, கொண்டாட்ட நாட்களில் அருந்தும் உற்சாக பாணமாகவே மது பார்க்கப்பட்டிருக்கிறது, மது ஒழிப்பிற்கு பிறகு தான் மக்களுக்கு மதுவின் பேரில் அதிக பிரியம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயமெல்லாம் எனக்கு ஏற்பட்டது. எனினும் இந்த மது ஒழிப்பு கொள்கையினால் ஊருக்குள் பல சண்டை சச்சரவுகள் நடக்கின்றது.

வெள்ளையர் ஆட்சி காலத்தில் பட்டாளத்திற்கு ஆள் பிடிக்க வருகிறார்கள் என்று சற்றே உயரமானவர்கள் எல்லாம் ஓடி ஒளிவதை போலவே குள்ளமாக இருப்பவர்கள் எல்லாம் உருகுத்தி கொள்ள பயந்து ஒளிகிறார்கள். நாயகர்கள் மட்டுமின்றி தேவர்கள், நாடார்கள் என்று பல ஜாதி மக்களும் அந்த கிராமத்திற்கு வந்து சேர்க்கிறார்கள்.

வடக்கு தேசத்து ஆட்கள் கிராமத்துக்கு வருவது அவர்களால் ஊருக்குள் ஏற்படும் கலாட்டாக்கள் என்று ஸ்வாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லமால் பயணிக்கிறது நாவல். பங்காரு பட்சி என்று களை கூத்தாடி பெண்ணை குறிப்பிடுகிறார்கள், எனது சிறிய வயதில் நான் களை கூத்தாடிகளை எல்லாம் பார்த்திருக்கிறேன் இப்போது உள்ள சூழலில் அவர்களைப் பழைய சினிமாக்களிலும் கூகுளிலும் தான் நம் குழந்தைகளுக்கு காட்ட வேண்டி இருக்கிறது.

கிராம போன் பெட்டியை பற்றி தெரியாத குழந்தைகள் அதில் குட்டியாக மனிதன் தான் அமர்ந்து பேசுகிறான் என்று கற்பனை செய்வது அழகு.

இப்படி அழிந்து போன எத்தனையோ விஷயங்களை நினைவு கூர்ந்தபடியே இருப்பதால் தான் எனக்கு இந்த புத்தகத்தின் மேல் அதிக நாட்டம் வந்திருக்கும் போல.20260714124606661.jpeg

வெள்ளையர் ஆட்சி காலத்தில் சாமான்ய மக்களிடையே விடுதலை போராட்ட உணர்வுகள் எப்படி இருந்தது என்பதை பற்றி நான் கல்கியின் அலையோசை நூலின் மூலம் தான் முதலில் அறிந்துகொண்டேன், அதில் அரசியல் அதிகம் பேசப்பட்டிருக்காது கோபல்ல புரத்து மக்களில்,

இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் போராட்டங்களை கேள்விப்படும் போது எவ்வளவு கொந்தளித்து போகிறார்கள் அவர்களுக்குள் இந்தியத் தலைவர்கள் மீது எப்படி அவநம்பிக்கை ஏற்படுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் கி ரா.

மெல்ல மெல்ல மக்களுக்குள் வந்தே மாதரம் என்கிற வார்த்தையும் சுதந்திர வேட்கையும் புரட்சிக்கான விதையாக வேர்விடுகிறது. கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மூன்று விதமாக இருக்கிறார்கள்,

ஒரு சாரர் காங்கிரெஸ்ஸை ஆதரிப்போர், இன்னொரு சாரர் பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்பு கொண்டோர், மற்றொரு சாரர் கம்யூனிஸ்ட்கள். அனைவருமே வெள்ளைக்காரனுக்கு எதிராகத்தான் இருந்தார்கள் என்றபோதும் கொள்கைகளில் வேறுபாடு இருந்தது. பகத் சிங்கை தெரிந்த எனக்கு அவருடனேயே சிறைக்கு சென்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட பட்டுகேஸ்வர்தத் பற்றி ஒன்றுமே தெரியாது.

2026071412543328.jpeg

பெஷாவரில் இந்தியர்களை சுடமறுத்த கூர்க்கா சிப்பாய்கள் அந்தமான் சிறையில் அடைக்கப் படுகின்றனர், அவர்களின் விடுதலைக்காய் காந்தி பேசாததும் அதையொட்டி அவர் அளித்த பேட்டியும் மக்களை அவர் பால் மிகுந்த ஆத்திரம் அடைய வைத்திருக்கிறது என்பது எனக்கு புது தகவல்.

அந்த நாட்களில் காந்தியை அனைவரும் ஆதரித்தனர் என்றே நான் பல நாட்கள் நம்பி வந்தேன். சிறு வயதிலிருந்தே என்னை அதிகம் ஈர்த்த சுபாஷ் சந்திர போஸைப்பற்றிய தகவல்கள் நிறைய இருந்தது.

இரண்டாம் உலக யுத்தம் பற்றிய செய்திகளையும் இந்தியாவில் அதையொட்டி நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் மக்கள் எப்படி எடுத்து கொண்டார்கள் என்பதை மிக துல்லியமாய் எழுதி இருக்கிறார் கி ரா.

தல்வார் என்கிற இடத்தில் கப்பல்படையில் தொடங்கிய புரட்சி எப்படி படிப்படியாய் வளர்ந்தது மக்களின் கொந்தளிப்பு நிலை என்ன என்பதை எல்லாம் வாசிக்கும் போது மனம் அந்த நாட்களுக்கே பயண பட்டு போய் வந்தது.

இறுதியில் சுதந்திரம் கிடைத்த பிறகு காந்தியிடம் “நீங்க சுதந்திரம் கிடைத்ததை பற்றி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்ட போது, “ஒண்ணுமில்லை” என்று அவர் சொல்வதோடு கதை முடிகிறது.

வாசித்து முடித்து சில மணி நேரம் நானும் தேசிய கொடியுடன் ‘வந்தே மாதரம்’ என்கிற கோஷத்துடனும் அங்குமிங்கும் திரிந்தது போலவும் சுதந்திரம் கிடைத்தவுடன் அப்பாடா என்று பெருமூச்சுடன் அமர்ந்தது போலவும் மனது ஆசுவாசப்பட்டது.

இதை வெறும் புத்தகமாக மட்டுமே பார்க்க முடியவில்லை, கரிசல் மண்ணின் வாழ்வியலை அங்கேயே வாழ்ந்தவர்கள் வாய்வழியே கேட்பதை போல கண் முன்னே காட்சிகள் விரியும் விதத்தில் நுணுக்கமாய் எழுதப் பட்டிருக்கும் அற்புத படைப்பு இது.

கி ரா என்பவர் வெறும் எழுத்தாளர் அல்லர் நூறாண்டு காலம் கரிசல் மண்ணில் போராடும் சம்சாரிகளுக்குள் ஒளிந்திருக்கும் இசையை அகழ்ந்தெடுத்து நமக்கு அழகாக பாடிக்காட்டும் அற்புத கலைஞர்.

20260715101952282.jpeg