
1. இந்து மத திருமண சடங்கில் ஒன்றான சப்தபதி மந்திரத்தில் "மூர்தானம் பத்யு: ஆரோஹ" என்று கூற அதன் அர்த்தமே 'கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்' எனவாக,இன்றைய நிலைக்கு நன்கு பொருந்துகிறதா?

ஸாரி,எனக்கு மந்திரங்கள் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. கல்யாணமான உடனேயே தலையில் ஏறி உட்காருவது தான் நடக்கிறது. கணவன் சொல்லை மனைவி கேட்பது சாந்தி முகூர்த்தத்தின் போது மட்டும் தான். அத்தோடு அவன் பேச்சு நிறைவு பெறுகிறது!
2. பண்டைய ஆலய வழிபாட்டை விட இன்றைய ஆலய வழிபாடு மாறுபடும் விதம்??

இப்போது ஜீன்ஸும், டி-ஷர்ட்டும் அணிந்து கொண்டு அலை மோதுகிறார்கள். அந்தக் காலத்தில் சட்டை இல்லாமல் பிரதக்ஷணம் செய்தார்கள்!
3. பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணுக்கும், இன்றைய நிலை புதுமைப் பெண்ணுக்கும் ஏதேனும் ஒற்றுமை உண்டா?

பாரதி கண்ட புதுமைப்பெண் மயக்கமில்லாதவர். இன்று சற்று மயக்க நிலையில் பெண் புதுமைப் பெண்ணாக இருக்கிறாள்!
4. ஒரு ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ வை பாதிக்கும் விஷயம் எதுவாக இருக்கும்?

அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் டாக்டர் நிறைய 'டெஸ்ட்டு'கள் எழுதி தரும் போது!
5. துணிவு மனத்தின் உச்சகட்டம் எப்படி முடியும்?

எப்போதுமே துணிவின் முடிவு- வெற்றி அல்லது வீர மரணம் தான். பகத்சிங் ஒரு உதாரணம்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com

Leave a comment
Upload