என்றேனும் ஒருநாள்
தடையைத் தாண்டிடுவாயா
என தான் பார்த்திருக்கிறேன்.
பிடித்திருக்கிறாயே…
அது தடையா?
பிடிமானமா?
உடற்பயிற்சி சாதனமா?
உருகி உறைந்தபோது
உத்தேசித்தது இந்நிலையா?
வார்த்தபின் இறுகி முடிகையில்,
சற்றே பின்தங்கி விட்டாயா?
காலாற் நிற்க மறந்து
கையூன்றி நிற்பதும்
அன்பால் வாழவொட்டாது
அந்தரத்தில் ஆடுவதும்
படைப்பின் தவறா?
இறைவன் படைப்பிலேயே
கோணல் மாந்தர் உண்டெனில்
மனிதன் வடித்த உன்னுரு
குழப்படியாதல் சாத்தியம் தான்.
இழுக்குடைய பாட்டிற்கே
இசை நன்றாதல் போல்
பழகிப்போன கண்ணுக்கே
யாவும் கலையென்றாகுமோ !
Leave a comment
Upload