தொடர்கள்
தொடர்கள்
பத்திரிகையாளர் சுப்புசாமி...! 12. *புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன்.

20250431002812341.jpeg


அடே, பச்சோந்தி. என் ரெண்டு கண்ணுல ஒரு கண்ணா உன்னை நினைச்சேன். நீ அப்படி நினைக்கலையே...?

கிழவி தந்த பிட்சாத் காசுல எத்தனை தடவை பங்கு கொடுத்திருக்கேன்? நீ ஜகா வாங்கிட்டியே?

என்னோட குறும்பு வாழ்க்கையில, உனக்கு கரும்பா பல திருட்டு சான்ஸ்களை நான் அறியாமலேயே ஏற்படுத்திக் கொடுத்து இருக்கேனே, அதையெல்லாம் மறந்துட்டியேடா துரோகி...?

கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பிராஞ்ச காசுல உனக்கும் ஒரு மசால் தோசை பங்கு கொடுத்திருக்கேனே, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டியே, நியாயமாடா?

கருணா, குண்டு, ராவ் நீங்கலெல்லாம் திரிசூலம். ஆனா, ஒரு சூலம் என் நெஞ்சைப் பிளந்துடுச்சே...?

ஒரு சோமாரியா இருக்கிறவனை என்னோட சரிக்கு சமமா தோஸ்த்தாக்கி ஒசத்தி வச்சேனே, நீ செஞ்சது ரைட்டாடா?

- போன்ற கேள்விகளை முன் வைத்து 'கேள்வி பிறந்தது இங்கே...' என்று பாடத் தொடங்கி இருப்பார் சுப்புசாமி. ஆனால், அதற்கு முன் ஹாஃப் பிளேடு கேட்ட கேள்வி அவர் நெஞ்சை மிகவும் காயப்படுத்தி விட்டது.

"உங்களாண்டை பதில் எங்கேய்யா இருக்கப் போகுது? அட, நான்தான் ஸ்கூலுக்குப் போகாத பாவி. எனக்குத் தெரிஞ்சது அவ்ளோதான். நீங்க நாலு எழுத்து படிச்சவர்தானே? இதோ, நம்ம அம்மா இல்லை? எவ்ளோ படிச்சு அழவா இங்கிலீஷ் எல்லாம் பேசறாங்க? இவுங்க என்னை மன்சனா ஆக்க பாடுபடறாங்களே. என் இஷ்ட தெய்வம்! நா...நான் இத்தனை வருஷமா உன்கூட பிரண்ட்ஷிப் வெச்சிக்கினதுக்கு மன்னிச்சுக்கோ வாத்தியாரே. இனிமே என் ரூட்டு தனி...!"

தாத்தா, கூட்டத்தில் தவிடு பொடியாகிப் போனார்.

' ஆல் தோ ஹி ஈஸ் ஏ ரவுடி, ஆஸ்கிங் கொசின்ஸ் தட் மிஸ்டர் சுப்புசாமி ஈஸ் நாட் ஆன்சரிங். ஏனெனில் அவரிடம் பதிலே இல்லையே! ஆனாலும், என் கணவர் ஒரு கல்பிரிட்தான்... குற்றவாளிக் கூண்டில் நிற்கத் தகுதியானவர். ஆனாலும், அதை தனிமனித தாக்குதல்போல பொதுவெளியில் நிகழ்த்துவது என்பது இட் ஈஸ் எம்பிராசிங் டூ மீ...!" - என்று நினைத்த கோமு சட்டென்று வி.ஐ.பி. தோளை நாசூக்காகப்பற்றி, "ஹிஸ் எக்சலன்சி பிலீஸ் கூல் டவுன்...!" என்றபடி கருணாவை அழைத்துச் சென்று அமர வைத்தாள்.

பின்னர் மைக்கில், "பட் அப்கோர்ஸ் என் வெற்றிக்கெல்லாம் காரணம் என் கணவர்தான் காரணம். வாங்க, இப்படி உட்காருங்கள்...!" சுப்புசாமியை கைத்தாங்களாக அழைத்துச் சென்று, மேடையில் அமர வைத்தாள்.

அவருக்கும் அப்பாடா என்றிருந்தது. பக்கவாட்டிலிருந்த ஏர் கூலரிலிருந்து பனி காற்று. மூடியிருந்த கண்ணாடி தம்ளரில் இருந்த தண்ணீரைப் பருகினார்.

"அன்பானவர்களே, என் கணவர் என் எண்ணங்களுக்கும் போக்குகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இடம் கொடுத்ததால்தான் நான் இந்த நிலைக்கு வர முடிந்தது என்பதை யாராலும் மறுத்துக் கூற முடியாது.

"எங்கள் இருவருக்கும் ஓர் ஒற்றுமை. நாங்கள் எப்பொழுதும் எங்களது வயோதிகத்தைப் பொருட்படுத்துவதே கிடையாது. சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஐ மே பி ஆன் கரெக்ட் பாத். ஹி.. என் கணவர் என்னைத் தொடரவோ அல்லது முந்தவோ முயற்சி செய்வார். மோஸ்ட்லி ஆன் ராங் பாத். அது அவரது அறியாமை. நண்பர்களின் தவறான வழிகாட்டுதல். ஆனால், அவரது உள்ளம் கள்ளம் கபடு அறியாதது!

"என்னைப் போலவே தானும் ஓர் பத்திரிகை ஆசிரியராக வேண்டுமென்று ஆசை அவருக்கு. பதவியும் புகழும் நம் கடின உழைப்பு சார்ந்தது. அவரது ஆசையை தவறான வழியில் கொண்டு சென்றவர் எங்கள் குடும்ப நண்பர் குண்டு ராஜா. ஆசைக்கு நிதி திரட்ட, லூட்... திருட உதவியவரும் எங்கள் குடும்ப நண்பர் கருணா...அவர் இவரே! நம் ஸ்பெஷல் விருந்தாளியாய் வீற்றிருக்கிறார்...!

நீண்ட பிரசங்கம் பாட்டிக்கு தொண்டை வரளச் செய்ததை உணர்ந்த பொன்னம்மாள் டேவிட், பன்னீர் கிரஷ் ஒன்றை உடைத்து, தலைவியிடம் பவ்யமாய் நீட்டினாள்.

"தேங்க் யூ டியர். ஹ... ஹ...நம் செக்ரட்டரியும் என் குடும்ப நண்பர்தான்...!" என்றாள் கோமு கிரஷ்சை வாங்கியபடியே.

சபை அவளது நகைச்சுவைக்கு சிரிப்பை கோரசாக அளித்தது.

"நான் தொடரலாமா? என் கணவர், ஏன் உங்கள் பார்ட்னர்ஸ் கேட்பது ஓர் அங்கீகாரம் வேண்டுமென்பதுதான்!. மே பி அவர்களுக்கான விடுதலை. ஒரு தடவையாவது அவர்கள் அதை எதிர்பார்ப்பது தவறல்ல. என் கணவருக்கு அதை வழங்க ஆசைப்படுகிறேன். நான் தொடக்கமாக இருக்கிறேன். அடுத்த வாரம் என் செலவில் ஒரு குடும்ப விழா, நம் கழகத்தில் ஒரு தடபுடல் விருந்தோடு நடக்கும். விழா நாயகர் மை பெட்டர் ஹாஃப் மிஸ்டர் சுப்புசாமி...! அந்த விழாவில் அவருக்கு ஒரு பெரிய பதவி காத்திருக்கிறது...!"

சுப்புசாமி, பொன்னம்மாள் உட்பட அரங்கமே ஸ்தம்பித்து பார்க்க,

"பதவிப் பிரமாணம் செய்பவர்கள் யார் தெரியுமா? தி லெஜன்ட் யுனிவர்சல் ஆக்டர் கமல் ஹாசன் மற்றும் கமல்ஜீ அவர்களின் நெருங்கிய நண்பர் விகடகவி எடிட்டர், கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள்...!" என்றாள் பாட்டி.

(அட்டகாசம் அடுத்த இதழில் நிறைவுறும்...)