
கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக தீர்த்தவாரியின் முதன்மை கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயில் பெட்டகத்தில் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது கல் நாதஸ்வரம் ஒன்று.
சிற்பியின் கை வண்ணத்தில் கல் நாதஸ்வரம் பிறந்தது, இசை வல்லுநர்களின் உயிர் காற்றுடன் கலந்து இதயத்தை மயங்க வைக்கும் இன்னிசையாக தவழ்ந்து ராகங்களின் சுவடுகளை சுமந்து வரும் இந்த கல் நாதஸ்வரம் உருவாகி ஆண்டுகள் பல நூறு இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
இந்த கல் நாதஸ்வரம் சாதாரண நாதஸ்வரத்தை விட சுமார் ஆறு பங்கு கூடுதல் எடையுடையது. சுமார் இரண்டடி நீளமுடைய தாகவும், வட இந்திய குழல் இசை கருவியான ஷெனாய் மாதிரியான அமைப்பில் உள்ளது.
ஆதி இசை கருவியான நாதஸ்வரம் ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது. மரத்தில் செய்வதற்கு முந்தைய காலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்கு சான்றாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் கல் நாதஸ்வரம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திலுள்ளது. இது 6 துளைகளை கொண்ட திமிரி வகை நாதஸ்வரம்.
கல் நாதஸ்வரத்தின் உடலமைப்பு:
முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஓரு நாணல் புல்லால் செய்யப்படுகிறது. கல் நாதஸ்வரத்தின் உலவு பகுதி மூன்று பகுதியாக தனி தனியாக கருங்கல்லால் செய்யப்பட்டு வெண்கல பூணால் இணைக்கப்பட்டு வெண்கல அரசுடன் மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது இந்த கல் நாதஸ்வரம்.
முழுயாகவும் அடர்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால் மட்டுமே இதில் நல் இசை கிடைக்கும். மேலும் இந்த கருவியை வாசிக்க நல்ல பயிற்சியும் அவசியம்.

மறைந்த நாதஸ்வர மேதை திரு பக்கிரிசாமி பிள்ளையும் பிறகு திரு குஞ்சிதபாத பிள்ளையும் இந்த கல் நாதஸ்வரத்தை ஆலயத்தின் முக்கிய விழாக் காலங்களில் வாசித்துள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆயுத பூஜை நன்நாளில் இந்த நாதஸ்வரம் வாசிக்கப் பட்டது.
இப்போது இந்த அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவம்பர் 28, 2025 புதன்கிழமை மாலை கோயில் வளாகத்தில் இந்த கல் நாதஸ்வரம் வாசிக்க உள்ளதையறிந்து ஏராளமான ரசிகர்களும், ஆர்வர்களும் குழுமியிருந்தனர்.


மேலும் சென்ற திங்கட்கிழமை 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்ததால் ஏராளமான ஆன்மிக மக்களும் வந்திருந்தனர். இந்த அரிய நாதஸ்வரத்தை ஆலயத்தின் முன்னால் கலைஞர் திரு சுவாமிநாதன் அவர்களும் அவரது மகன் திரு தமிழரசனும் சேர்ந்தது வாசித்தனர்.
இந்த நாதஸ்வரத்திலிருந்து வரும் இசை நாம் சாதாரணமாக கேட்கும் நாதஸ்வர இசையை போன்றே இனிமையாக இருந்தது. அதிக எடையுள்ள இந்த நாதஸ்வத்தை கையாள்வது எளிதல்ல. அதற்கு நாதஸ்வர கலைஞர் முழு அடர்த்தியான மூச்சை செலுத்தி வாசித்தல் அவசியம். மூன்று கிலோவிற்கு மேல் எடையுள்ள இசைக்கருவியை கைகளால் ஏந்தி பிடித்து தேவையான மூச்சுக்காற்றை உள்ளே செலுத்தி வாசிப்பது எளிதான காரியமில்லை.
அனைவரும் இந்த தொன்மையான கல் நாதஸ்வரத்தை கண்டும் அதன் இசையை கேட்டு அனுபவித்து பரவசம் அடைந்தனர்.
இந்த ஏற்பாட்டை செய்த ஆலய நிர்வாகத்திற்கும் நாதஸ்வர கலைஞருக்கும மற்ற இசை குழுவினர் களுக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி கூறினர்.

காஞ்சி காமகோடி பீடம் 70 வது சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ மந்திரலாயம் பீடாதிபதி முன்னிலையில் இந்த ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக போட்டோக்களும் வீடியோக்களும் இதோ

[யாக சாலை]

[யாக சாலை]

[கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ஒளியில் மிளிரும் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்]

[விமான கலசங்களில் யாக சாலை கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்]
[கருவறை விமானம் மீது கலச நீர் அபிஷேகம்]
[காஞ்சி சங்கராசாரியாரும் மந்த்ராலய பீடாதிபதியும்]
[விமான கலசங்களின் மீது யாக சாலை கலச நீர் அபிஷேகம்]
[ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக கொண்டாட்டத்தில் திளைக்கும் குடந்தை]

Leave a comment
Upload