வலையங்கம்
வலையங்கம் - அந்தக் கண்ணீர்!

20190812181958846.jpg


நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொள்ளாத பகுதியில் ‘சந்திராயன்-2’ இறங்க வேண்டிய கடைசி கட்டம் நெருங்கியது. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் உத்தரவுகளை பிறப்பித்து கண்காணித்துக் கொண்டிருந்தனர்! ஆனால்...! யாரும் எதிர்பாராத விதமாக கடைசி நிமிடத்தில் திடீர் சறுக்கல்!


பூமியில் இருந்து 2 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலவு இருக்கிறது. 47 நாட்கள் லட்சக் கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, மெள்ள மெள்ள சந்திராயன் நிலவை சுற்றி வந்து நெருங்கிக் கொண்டிருந்தது. லேண்டர் தனியாகப் பிரிந்து, நிலவில் இறங்க வேண்டிய நேரத்தில் தொடர்பு அறுந்தது. தகவல்கள் நின்று போய் கட்டுப்பாட்டை இழந்தது.


இரவும் பகலும் பாடுபட்ட தங்கள் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதைக் கண்ட இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதே விட்டார். இன்னும் பல விஞ்ஞானிகளும் கண்ணீர் சிந்தினர்!


நிலவில் லேண்டர் இறங்கும் அற்புதக் காட்சியை பார்க்க அங்கே காத்திருந்த பிரதமர் மோடி, சிவனை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறியபோது, அவரும் அழுத காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் கண்கலங்க நேரிட்டது.


சிவன் அழுததும், பிரதமர் மோடி அழுததும் அவர்களது உள்ளத்தின் களங்கமற்றத் தூய்மையைத்தான் காட்டுகிறது. நாட்டுக்குத் தேடித்தர இருந்த ஒரு மாபெரும் வெற்றி கிட்டாமல் போய்விட்டதே என்று தலைவர் சிவன் கண்கலங்கினார். விஞ்ஞான ஆராய்ச்சியில் பின்னடைவுகள் நிகழும் என்பதை அறியாதவர் அல்ல சிவன். ஆனாலும் அந்த எளிய மனிதரால் துயரத்தை அடக்க இயலவில்லை.

பொய்யும் புரட்டும் போட்டியும் பொறாமையும் சுயநலமும் மிகுந்த அரசியலையே எந்நேரமும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள பிரதமர் மோடி, தேசப்பற்று மிகுந்த ஒரு எளிமையான விஞ்ஞானியின் தூய உள்ளத்தை கண்ட போது, அவரையும் அறியாமல் கண் கலங்கி விட்டார்!


இந்தக் கண்ணீர் இனி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வெற்றிகளை தேடித் தரப் போகிறது. தோல்வி என்பதே இல்லாமல் ‘இஸ்ரோ’ அடுத்தடுத்து சாதனைகள் நிகழ்த்தப் போகிறது.



இஸ்ரேல் பயணம் எதற்கு?


இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடியார் ஊர் திரும்பிவிட்டார்! முகத்தில் அவருக்கே உரிய சிரிப்பு! வெளிநாடுகளில் சூட்டும் கோட்டுமாக இருந்தவர், அவரது இயல்பான வெள்ளை வேட்டி சட்டையுடன் விமானத்திலிருந்து இறங்கினார்!

மேலைநாட்டு தொழிலதிபர்களை சந்திக்க சூட்டும் கோட்டும் அவசியமாயிற்று என்றார்! தனது ‘இமேஜ்’ உயர்ந்த திருப்தி அவரது பேட்டியில் வெளிப்பட்டது!


கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதை முதல்வர் விவரித்தார். ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கனவு உலகத்தை காட்டினார்! இந்த காகித ஒப்பந்தங்கள் உயிர் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!


அவரது வெளிநாட்டு பயணம் மேலும் தொடருமாம்! நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்லப் போகிறாராம்!


இஸ்ரேல் எல்லாத் துறைகளிலும் முதன்மையான இடத்தில் உள்ள நாடு. எதிரிகளை சமாளிப்பது, ராணுவ பாதுகாப்பு இவற்றை இஸ்ரேலிடம் இருந்து அறிவதற்கு நிறைய இருக்கும். அது மத்திய அரசு சம்பந்தப்பட்டது.


நீர் சிக்கனம் - நீர் மேலாண்மை பற்றி அறிய இஸ்ரேல் போக வேண்டுமா? இங்கேயே அது பற்றி நன்றாக அறிந்தவர்கள், அதில் சாதித்துக் காட்ட திட்டம் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்களே! அரசு அழைப்புக்கு காத்திருக்கிறார்கள்! அவர்களை அழைத்து திட்டமிட முடியாதா?


காமராஜர் முதல்வராக இருந்தபோது நகரமைப்பு பற்றி அறிய வெளிநாடு செல்ல அதிகாரிகள் அரசின் அனுமதி கேட்டனர். ‘நகர அமைப்பு பற்றி அறிய ஏன் வெளிநாடு போக வேண்டும்? மதுரையைப் போய் பாருங்கள்! அங்கேயே தங்கி அந்த நகரம் எப்படி அமைக்கப்பட்டது என்று ஆராயுங்கள், நிறைய சங்கதிகள் கிடைக்கும்’ என்று கூறி அதிகாரிகள் பயணத்துக்கு காமராஜ் முற்றுப் புள்ளி வைத்தார்!


நம்மிடம் இருப்பதை முதலில் ஆராய்வோம்.