நமது வாசகர்கள் அங்குமிங்கும் (ஹி..ஹி ஒட்டு) கேட்ட உரையாடல்கள்...
ராமர் கோயில், குரோம்பேட்.
“சார் ஆஞ்சநேயருக்கு தேங்கா கட்டணும், கோயில் மூடி இருக்கே...”
“கவர்ன்மெண்டுல சொல்லி இருக்காங்க கோயில் திறக்க கூடாதுன்னு... உங்களுக்கு என்ன பண்ணனும், புதுசா கட்டணுமா, இல்ல ஏற்கனவே கட்டுனத பிரிச்சு அர்ச்சனை பண்ணனுமா?”
“புதுசா கட்டணும்...”
“அது இப்போ முடியாது. நீங்க வேண்டிக்கிட்டு போங்க...”
“சரி, என்ன பண்ண? கொரோனா சீக்கிரம் போகணும்னு வேண்டிக்கிட்டு போறேன்..”
“சார் தேங்கா வாங்குற காச யாருக்காவது ஒரு ஏழைக்கு சாப்பாடு வாங்கி குடுத்துட்டு வேண்டிக்குங்க சார், நினைச்சது நடக்கும்...”
“சார்.. இப்போ சொன்னீங்க பாருங்க, இந்த மனசு தான் சார் கடவுள். வர்றேன் சார், எனக்கு நம்பிக்கை இருக்கு.”
சந்தோஷமாய் செல்கிறார்......
ராமன், தாம்பரம்.
ராமநாதபுரம், ராமநாதர் கோயில் வாசலில்...
“இப்போ ஆளுங்களும் வர்றதில்லை, வியாபாரமும் இல்ல.. என்ன பண்றது சார் பொழப்புக்கு...”
“தெரிஞ்ச ஒருத்தர் தோட்டத்துல வேல வாங்கித் தரேன், போறியா?”
“என்ன வேல சார், எவ்ளோ குடுப்பாங்க?”
“தோட்டத்தை பாத்துக்கணும், செடிக்கு தண்ணி ஊத்தணும். ஆடு மாடு மேஞ்சிடாம பாத்துக்கணும். மாசம் எப்படியும் ஒரு எட்டு ரூபா கொடுப்பாங்க..”
“சார், நீ தெய்வம் சார். சும்மா பூ வாங்கினு போறியேன்னு நினச்சேன். ஊட்டுல விளக்கேத்தி வெச்சிட்ட சார் நீயி. நாளைக்கே போறேன் சார். அட்ரஸ் குடு சார்.”
“இந்தா... இந்த பேப்பர்ல இருக்கு. உன் பூ வியாபாரத்துல இத்தனை வருஷமா எப்படி உன்ன சுத்தமா பாத்தேனோ, அதேமாரி இருக்கணும். பேர காப்பாத்தணும்.”
“ராமநாத சாமி சத்தியமா காப்பாத்துவேன் சார்.”
அழுகையோடு நகர்கிறார்.... அவர் கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிடுகிறார்.
கிருஷ்ணன், ராமநாதபுரம்.
துரைப்பாக்கம் ரேஷன் கடையில்...
“ஏங்க.. என்ன அரிசி மட்டும் போடறீங்க, நாலாயிரம் பணம் கொடுங்க...”
“எதே, பணமா....?”
“ஸ்டாலின் வந்தா நாலாயிரம் தருவார், ஏங்க தெருவுல ஒட்டு கேக்க வந்த தம்பி சொல்லுச்சே, நான் ஸ்டாலினுக்கு தான் போட்டேன். அவரு தான் வந்துட்டாரே..”
“நீ ஏம்ப்பா கொடுக்காம இழுத்தடிக்கறே, எங்க பாவம் உன்ன சும்மா விடாது...”
“இந்தாம்மா, எதுக்கு சாபமெல்லாம் விடறே.. வந்தா தர மாட்டோமா... இனிமே தான் அவரு வந்து அதுக்கான உத்தரவை போடணும். பத்து நாள் பொறுத்து வா, இருந்தா தரேன்...”
“சரி வரேன், வந்து தானே ஆவணும். இத நம்பி கடன் வாங்கி, பேத்திக்கு துணி எடுத்து கொடுத்துட்டேன்....”
கவலையோடு நகர்கிறார்.
ராஜேஷ், துரைப்பாக்கம்.
பல்லாவரம் பஜார் ரோடில் ,மளிகை கடை ஒன்றில்...
“என்னப்பா அவசரமா கடைய பூட்டுற, லோக்கல்ல யாராவது செத்துட்டாங்களா...?”
“ஏன் சார்... நீங்க டிவி-லாம் பாக்கறதே கிடையாதா? இன்னிலேர்ந்து 12 மணிக்கு கடைய அடைக்கணும்?”
“இன்னும் மளிகை சாமான் வாங்கலியே?”
“உங்க வீட்டம்மா வந்து வாங்கிட்டு போய்ட்டாங்க, முட்டையை மறந்து வெச்சுட்டு போய்ட்டாங்க, உங்க மச்சான் வந்திருக்காருன்னு சொன்னாங்க..”
“அதான் முட்டையா, எது ஜாஸ்தி வாங்குனா?”
“ரவா தான் சார், மூணு கிலோ வாங்குனாங்க..”
“அப்ப தினசரி உப்புமா தான்....”
குடு அந்த முட்டையை..... என் தலையெழுத்து.....
கடைக்காரர் புன்னகையுடன் முட்டையை கொடுத்து விட்டு கடையை மூடுகிறார்...
சித்ரா, தாம்பரம்.
Leave a comment
Upload