தொடர்கள்
நொறுக்ஸ்
பாடல் வரிகளில் எஸ்.பி.பி. உருவ ஓவியம்! - மாலாஸ்ரீ

20210505002452864.jpeg

எஸ்.பி.பி-யின் 75-வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணம்...

இந்தியாவின் பன்மொழி திரையிசை உலகில் கோலோச்சி வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். தனது பாடல்களால் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல், 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல்வேறு திரைப்படங்களில் எஸ்.பி.பி நடித்துள்ளார். இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக, ‘பாடும் நிலா பாலு’ என அனைவராலும் கொண்டாடப்பட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பால் மரணமடைந்தார். அவருடைய மறைவு சினிமா துறையினர் மட்டுமின்றி லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாடகர் எஸ்.பி.பி-க்கு நேற்று (4-ம் தேதி) 75-வது பிறந்தநாள். அவரது மறைவுக்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாளில் சினிமா பிரபலங்கள், இசை கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் அவருடைய பிறந்த நாளில், எஸ்.பி.பி-யை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டினர்.

20210505002534556.jpeg

இதற்கு ஒருபடி மேலாக, சேலம் மாவட்டம், அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் (32), எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக, எஸ்.பி.பி பாடிய புகழ்பெற்ற மிகச் சிறந்த 1,270 பாடல்களின் முதல் வரியை எழுதி, எஸ்.பி.பி-யின் உருவ ஓவியத்தை தத்ரூபமாக வரைந்துள்ளார்!

எஸ்.பி.பி-யின் ரசிகரான குமரேசன், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சமையல்கலை வல்லுநராக வேலை பார்க்கிறார். இவர், இதுவரை 9 உலக சாதனைகளை நிகழ்த்தி, சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தில், 240 பக்கங்களில் உள்ள வரிகளை, A3 அளவு பக்கத்தில் அப்துல் கலாம் வடிவத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில்தான், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலான, 1969-ம் ஆண்டு எம்ஜிஆர் படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலில் ஆரம்பித்து, கடைசியாக 2020-ம் ஆண்டு, ரஜினி படத்தில் வரும் ‘அண்ணாத்தே... அண்ணாத்தே!’ பாடல் வரை 1,270 மிகச் சிறந்த பாடல்களின் முதல் வரிகளை கொண்டு, எஸ்பிபி-யின் உருவ வடிவில் தத்ரூபமாக எழுதியுள்ளார்.

‘A4’ தாளில், ஒரே நாளில் 10 மணி நேரம் செலவழித்து, எஸ்.பி.பி-யின் பிறந்த நாளில், பாடல் வரிகளில் அவருடைய உருவத்தை ஓவியமாக வரைந்து எஸ்.பி.பி-க்கு சமர்ப்பணம் என்கிறார். குமரேசனின் இந்த முயற்சியை எஸ்.பி.பி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.