நவராத்திரி என்பது துர்கா தேவி போர் புரிந்த ஒன்பது நாள் இரவுகளையும், பத்தாம் நாள் அவர்கள் பெற்ற வெற்றியையும் குறிக்கிறது. ஆகவே ஒன்பது நாட்களை நவராத்திரி தினமாகக் கொண்டாடி பத்தாம் நாள் விஜய தசமியாகக் கொண்டாடப்படுகிறது.
உலகம் அனைத்தும் 'சக்தி மயம்' என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்’ தர்மத்திற்கு எப்போதெல்லாம் குறைபாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பராசக்தி பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெறச் செய்திருக்கிறார். மகிடாசுரனைப் பராசக்தி வதம் செய்ய எடுத்த அவதாரம் தான் ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
அரக்கன் மகிஷாசுரனின் அட்டூழியங்களில் இருந்து இவ்வுலகைக் காப்பாற்றிய ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜை செய்து வழிபடும் தெய்வீகத் திருவிழா நவராத்திரி.
ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி் தோற்றமும், நவராத்திரியும்:
மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். அவனது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய பிரம்மதேவர், மகிஷாசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷாசுரன் தனக்கு மரணமில்லாத வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். உடனே பிரம்மதேவர்
“பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே, வேறு வரம் கேட்கும்படி” கூறினார்.
மகிஷாசுரன் “பெண்கள் பலம் இல்லாதவர்கள் என்பதால் தன்னை அழிக்க முடியாது என்ற காரணத்தால் ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்” என்று வரம் பெற்றான். எந்தப் பெண்ணிற்கும் எனையழிக்கும் அளவிற்கு வலிமையும், துணிவும் இல்லை என்ற எண்ணத்தில், தனக்கு அழிவே கிடையாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட மகிஷாசுரன் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். மகிஷாசுரனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பம் அடைந்தனர். துன்பம் எல்லையைக் கடந்ததால் தேவர்கள் அனைவரும் பிரம்மனின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களின் நிலையினை அறிந்த சிவபெருமான், பிரம்மனின் வரத்தின்படி மகிஷாசுரனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதால் அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக்கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மா, விஷ்ணு தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக்கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் மூன்றும் ஒன்றாகக் கலந்தன. அந்த ஒளிப்பிழம்பில் இருந்து துர்காதேவி தோன்றினாள். மற்ற தேவர்களும் தங்களது படைக்கருவிகளை அவளுக்குக் கொடுத்து உதவினர் என்பதை மார்க்கண்டேய புராணமும், துர்கா சப்தசதியும் கூறுகின்றன.
துர்காதேவி அனைத்து தெய்வங்களிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று, தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மகிஷாசுரனை அழிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றாள்.
துர்காதேவி, ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாளில் எட்டுக்கரங்கள் உடைய துர்க்கையாக விஸ்வரூபம் எடுத்து அரக்கன் மகிஷாசுரனுடன் போரிட்டு அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசுரனை வதம் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “ஶ்ரீ மகிஷாசுரமர்த்தினி” என்று துர்கையைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் அவர் வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது. அந்த வெற்றித்திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.
புராணத்தில் விஜயதசமி:
வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்குப் புறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் அரசாட்சி, அதிகாரம், நாடு முதலானவற்றை இழந்த பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் அஞ்ஞானவாசம் முடிந்த பின் வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த தங்களது ஆயுதங்களை வெளியே எடுத்து அர்ஜுனன் வழிபட்ட நாள் விஜயதசமி.
விஜயதசமியின் சிறப்பு:
எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் தாம் வெற்றி பெற வேண்டும் என்றே எல்லோரும் ஆசைப்படுவோம். அந்த வெற்றியை நமக்குத் தரும் நாளே விஜயதசமி ஆகும். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும். முதல் நாளான சரஸ்வதி பூஜை அன்று மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை அடுக்கி வைத்து பூஜை செய்த பிறகு மறுநாள் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி புத்தகங்களில் சில வரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் சரஸ்வதி கடாட்சம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் மிகுந்த பலனைத் தரும். படிப்பு மட்டுமில்லாமல் சுபவிஷயங்களை தொடங்கினாலும் அதில் சுலபமாக வெற்றி பெறலாம். நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குதல், புதிய முயற்சி எடுத்தல், ஒப்பந்த பேச்சு வார்த்தை போன்றவைகளை ஆரம்பிக்கலாம்.
எல்லாவிதமான வெற்றிகளைத் தந்தருளும் நாளாக விஜயதசமி தினம் திகழ வாழ்த்துக்கள்!!
Leave a comment
Upload