ஜூன் ஐந்தாம் நாள் உலக சுற்றுச்சூழல் தினம்
ஐநாவின் பரிந்துரையின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது , இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் "நெகிழி பயன்பட்டால் ஏற்படும் மாசை முடிவுக்குக் கொண்டு வருவது" ( Putting an End to Plastic Pollution ) . நாம் வாழும் இப்பூமியை மாசின்றி காக்கும் எண்ணம் நம்மில் இருந்தாலும், இத்தினத்தில் சுற்றுச்சூழலைப் பற்றி பேசுவது மிகவும் சிறப்பாகும்,
நம்முடன் இது குறித்து பேச வந்துள்ளவர் சதீஷ் முத்துகோபால் , சிங்கப்பூர் வாழ் தமிழர்.
சதிஷ் அடிப்படையில் ஒரு பொறியாளர். கணினித் துறையில் பணி செய்த போதும் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக பேசியும், எழுதியும், களப்பணி செய்தும் , இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். சிதறாத எழுத்துக்கள், யாருக்கானது பூமி? பறவைகளின் உயிர் சூழல் உள்ளிட்ட தமிழ் நூல்களையும், shades of habitat என்னும் ஆங்கில நூலையும் எழுதி உள்ளார்.அவரது இணையதளம் https://www.writersatheesh.com சுற்றுச்சூழல் தொடர்பான கருத்துக் குவியலாக மிளிர்கிறது.
"விகடகவி "இதழுக்காக அவருடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி உரையாட அழைத்தோம். இப்பூமியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பு அவர் பேச்சில் தெறிக்கிறது . மிக அழகான தமிழில் அவர் கருத்துக்களை முன் வைக்கும் போதே அவரது ஆர்வம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது .
இனி சதீஸ் முத்துகோபாலுடன்....:
ஒரு பொறியாளரான நீங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறியது எப்படி ?
என் சொந்த ஊர் பழனி .பழனி இயற்கை அழகில் நம்மை வசீகரிக்கும் ஊர். மலைகள் , குன்றுகள், புதர்கள்,மரங்கள் என்று திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை நம்மைக் கவர்ந்திழுக்கும். சிறுவயதில் இருந்தே இயற்கையை ரசிக்கவும் ,அனுபவிக்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் சுற்றுச்சூழல் பற்றி அதிக ஆர்வமுடன் ஆராய முற்பட்டேன்.காட்டுயிர்கள், பறவைகள், இயற்கை வளம் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேவையைஉணர்ந்தேன். அதன் முக்கியத்துவம் பற்றி படிக்கவும் பேசவும், எழுதவும் ,களப்பணி செய்யவும் தொடங்கினேன் .
18 ஆண்டுகளாக என் பணி தொடர்கிறது . தியோடர் பாஸ்கரன், கோவை சதாசிவம், முகமது அலி போன்ற இயற்கை ஆர்வலர்கள் என் வழிகாட்டியாக துணை நிற்கிறார்கள்.பழனியில் இயங்கும் சுற்றுப்புற பாதுகாப்பு குழுவின் ஆயுள் கால உறுப்பினராக இருக்கிறேன். சில தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து செயலாற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். Save Palani Hills என்ற அமைப்பை நண்பர்களுடன் தொடங்கி பழனி மலையின் பாதுகாப்புக்காக செயல்படுகிறேன்.
'சுற்றுச் சூழல் பாதுகாப்பு" இப்போது அதிகமாக பேசப்படுகிறது. இணையத்தில் , சமூக ஊடகத்தில் இது குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இது ஒரு நல்ல அறிகுறி தானே ?
ஆம் , நாம் நிறைய பேசுகிறோம் தான். ஆனால் நம் நாட்டில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க சரியான வழிமுறைகள் இல்லை . இயற்கையைச் சுரண்டி வாழும் வாழ்க்கையை குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்கிறார்கள். நீர்வளம் , நெகிழி பயன்பாடு , தேவையற்ற பொருட்களை மறுசுழற்சி செய்து உபயோகித்தல் பற்றி முறையான வழிகாட்டுதல்கள், கட்டுப்பாடுகள் இங்கு இல்லை, நம் வீட்டுக் குப்பைகளை தனித்தனியாக பிரித்து போடும் எளிய காரியத்தை மக்கள் செய்வதே கடினமாக இருக்கிறது.
நெகிழி பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டு வர முடியாதா?
ஒரு திருமணத்தில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் , மேசை விரிப்பான்களும், அலங்கார பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே நாளில் ஏகப்பட்ட நெகிழி குப்பை சேர்கிறது. அவற்றை அப்புறப்படுத்தும் வழிகளைச் சிந்தித்து இருக்கிறீர்களா ? எல்லா குப்பைகளையும் ஏரி, குளங்களில் அல்லவா தள்ளி விடுகிறார்கள் . நம் ஆறுகளின் நிலைமையைப் பாருங்கள். நம் இளமையில் தண்ணீர் சுழித்தோடிய காட்சியை நம்மால் இப்போது காண முடியவில்லை . சிறு சிறு குட்டைகளாக தேங்கி இருப்பதைக் காண முடிகிறது .எல்லா இடங்களிலும் மலையாக பிளாஸ்டிக் குவிந்துள்ளது. அதன் மறுசுழற்சி பற்றி முறையாக சிந்திப்பதில்லை . அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க சட்டங்களைக் கொண்டு வந்தது. அதை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறோம் ? தனி மனிதராகவும், இயக்கமாகவும் நாம் ஒன்றாக செயல்பட வேண்டும்.
வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடையில் உள்ளதா ?
நம் நாட்டு வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை பொக்கிஷங்கள். காடுகளை மிக மோசமாக கையாள்கிறோம் . அங்குள்ள எண்ணற்ற அரிய வகை உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் பற்றி நாம் அறிவது கொஞ்சம். காடுகளில் வாகனப் போக்குவரத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும், வாகனத்தில் அடிபட்டு ஒரு உயிர் இறந்த பின்புதான் அப்படி ஒரு உயிரனம் இருந்ததே நமக்குத் தெரிய வருகிறது . சுற்றுலா செல்பவர்கள் குரங்குக்கு, பறவைகளுக்கு உணவு கொடுப்பதை மக்கள் புகைப்படம் எடுத்து பகிர்கிறார்கள் . இது இயற்கைக்கு எதிரானது. விலங்குகள் , பறவைகள் தமக்குரிய உணவைத் தானே இயற்கையில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் . நமது நீர்வளம், கனிம வளம் தொடர்ந்து சுரண்டிக் கொண்டே இருப்பதால் ஏற்படும் விளைவுகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்
சுற்றுலா தளங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்,அவை மீறப்படுவதால் ஏற்படும் விளைவுகள், பருவநிலை பிறழ்சி, கார்பன் உமிழ்வு அயல்நாடுகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதம் என்று மேலும் பல கேள்விகள் நமக்குள் எழுகிறது .
இவ்வினாக்களுக்கு சதிஷ் முத்து கோபாலின் தீர்வுகளை அறிய ஆவலாக இருக்கிறது . மேலும் உரையாடுவோம் .
தொடரும்
Leave a comment
Upload