தொடர்கள்
ஆன்மீகம்
விசேஷம் மிகுந்த வைகாசி விசாகம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

20250506192521656.jpg

தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமி போன்று வைகாசி விசாகமும் விசேஷம் மிக்க தினமாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடும் நன்னாளே வைகாசி விசாகமாகப் போற்றப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர விரத தினம் பல் வேறு புனிதங்கள் நிறைந்தது.


வைகாசி விசாகம் முருகப் பெருமான் அவதரித்த நட்சத்திரம் என்பதால் இந்த நாள் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகம் பத்து நாட்களாகப் பெருவிழாவாக வெகு விமரிசையுடன் தமிழக மக்களால் உலகெங்கிலும் கொண்டாடப்படுவது வழக்கம். வைகாசி விசாக விரதத்தை முழுமையாகக் கடைப்பிடித்தால் சஷ்டி விரதம் இருந்த பலனை அடையலாம் என முருக புராணம் கூறுகின்றது.

இந்த ஆண்டு (2025) வைகாசி விசாகம் ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

வைகாசி விசாகத்தில் என்ன விசேஷம்:


வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதரித்த நாளாகும்.
தசாவதாரங்களில் மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரும் அவதரித்தது இத்தினத்தினத்தில் தான்.
திருமழப்பாடி என்ற ஊரில் சிவபெருமான் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடியதும் வைகாசி விசாகத்தினத்தில் தான்.எமதர்மராஜன் அவதரித்ததும் ஓர் வைகாசி விசாகம் என்பதால், அவர் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வாஞ்சியம் மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாகப் பெற்ற இந்நாளில் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.


இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றலைப் பெற்றார்.
பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமான நம்மாழ்வார் பிறந்ததும் வைகாசி விசாகம் அன்று தான்.
இராமலிங்க அடிகளார் தன் சத்யஞான சபையை வடலூரில் நிறுவிய தினம் வைகாசி விசாகம்.
பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாகத் தஞ்சை தரணியில் அரங்கேற்றம் செய்வதும் இவ்வைகாசி விசாக நன்னாளிலே என, தஞ்சை பெரிய கோவில் கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தார்த்தர் என்கிற கௌதம புத்தர் அவதரித்ததும், ஞானம் பெற்றதும் ஓர் வைகாசி விசாக நந்நாளிலேயாகும். இத்தினத்தில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் புனித நாளாகக் கொண்டாடுகின்றனர்.

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாகம்:
ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையைக் களைந்து தேவர்களைக் காத்தருள தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு தீ பொறிகளாக விழுந்து அவை ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. மகாவிஷ்ணு அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க ஆறு கார்த்திகைப் பெண்களை நியமித்தார். கார்த்திகைப் பெண்கள் அக்குழந்தைகளைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் குழந்தைகளைக் காணச் சிவனும், பார்வதியும் சரவணப் பொய்கைக்குச் சென்றனர். பார்வதிதேவி அங்குள்ள ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைக்கும் போது பன்னிரு விழிகளுடனும், பன்னிரு கரங்களுடனும்,ஆறு முகப் பெருமான் அவதரித்தார்.அன்றைய சிறப்புத் தினமே "வைகாசி விசாகம்" ஆகும்.

விழாக்கள்:
பொதுவாக வைகாசி விசாகம் விழாக்கள் எல்லா முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. அதிலும் சிறப்பாக முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் சில கோயில்களில் தேர்த் திருவிழா மற்றும் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறுகின்றது. பக்தர்கள் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பாதயாத்திரை செல்லல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

வைகாசி விசாகம் விரதம்:
வைகாசி விசாகம் அன்று உபவாசம் (உணவோ, நீரோ இல்லாமல்)இருக்க விரும்பினால் அந்நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். ஒருவேளை அப்படி இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவு அருந்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தவிரப் பால், மற்றும் பழம் உண்டும் விரதத்தினை மேற்கொள்ளலாம். அன்றைய தினத்தில் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் ஏதேனும் ஒன்றைக் காலையிலும், மாலையிலும் படிக்கலாம். முடியாதவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ அல்லது ஓம் முருகா’ ஆகிய ஏதாவது ஒன்றைச் சொல்லலாம். வீட்டில் வழிபட்ட பிறகு அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று நம்மால் முடிந்த பூ, பால், நெய் என ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம். அங்கு முருகப் பெருமானைத் தரிசனம் செய்து விட்டு, அடியவர்களுக்கு நம்மால் முடிந்த தான தர்மங்களைச் செய்வது சிறப்பு.

வைகாசி விசாகம் விரத பலன்கள்:
வைகாசி விசாகம் அன்று விரதமிருந்து முருகனை மனமுருகி வேண்டிக் கொண்டால், வேண்டிய வரம் அனைத்தும் கிடைக்கும் என்பது உறுதி. குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
முருகனின் அவதார திருநாளான இந்த நன்னாளில் அவரை துதி செய்து அபிஷேக, ஆராதனைகளைக் கண்டுகளித்து சகல சௌபாக்கியங்களும் பெறுவோமாக.!!

வேல் வேல் முருகா..!! வெற்றி வேல் முருகா …!!!

“வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா”