ஜான் என்பவர் ஒரு விபத்தில் முதுகெலும்பு காயமடைந்து, 10ஆண்டுகளுக்கு மேலாக நடக்கமுடியாமல் இருந்தார்.
விஞ்ஞானிகள் அவருடைய மூளையிலும், முதுகெலும்பிலும் சிறிய நுண்செயலிகளை (implant) பொருத்தி நடக்க வைத்துவிட்டார்கள்.
இந்த அதிசயம் சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் லாசான் நகரிலுள்ள லாசான் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் நடந்தது.
மூளையில் பாதிக்கப்பட்ட இந்த நுண்செயலிகள் “நடக்க வேண்டும்” என்று நினைக்கும்போது அந்த எண்ணத்தை பதிந்து, அதை முதுகெலும்புக்கும், கால்களை இயக்கும் நரம்புகளுக்கு அனுப்பப்படுகிறது இதனால் ஜானால்மெதுவாக நடக்கமுடிகிறது.
உண்மையில் இது எவ்வளவு பெரியவிஷயம்?
“முத்து” படத்தில் குடித்துவிட்டு வண்டியை கவிழ்த்தப்பின் வடிவேலு ரஜினியை நோக்கி வருவார். அப்போது சடாரென்று ரஜினி திரும்பி வடிவேலை முறைத்தவுடன் டமாலென்று வடிவேல் கீழே விழுவார். விழுந்தவுடன் “ஏன் என்ன அடிச்சே?” என வடிவேலு கேட்கும்போது “இல்ல நான் பார்த்தேன்” என்பார் ரஜினி.
அதற்கு வடிவேலு “பாத்ததே அடிச்ச மாதிரி இருக்கு” என்பார்.
வேடிக்கையான இந்த படத்தின் காட்சி மனதில் கோபமாக நினைத்தால் அடுத்தவன் விழுவது போல் வைத்திருப்பார்கள்.
உலகில் முதன்முறையாக விபத்தில் நடக்கும் திறனை இழந்த மனிதன் தன் மனதில் “நடக்கவேண்டும்” என எண்ணினால், அவரால் நடக்கமுடிகிறது.
எதிர்காலத்தில் செயலிழந்த உடலுறுப்புகளை இயக்க உதவுவது, செயல்படாத கைகளை இயக்க (எழுத, தூக்க, அழுத்த), மனதால் சக்கரநாற்காலியை இயக்க, தொடாமலேயே கணினி, மொபைல் பயன்படுத்த என பல வேலைகளை செய்யலாம். பேசமுடியாத ஒரு அரியவகை நரம்பு சம்பந்தப்பட்டக்கோளாறு (ALS/Locked-in syndrome) பாதித்த நோயாளிகள் தான் நினைப்பதை வாசிப்பது,அல்லது குரலாக மாற்றி பேசவும் முடியும்.
ரோபோட்டுகள், டிரோன்களை நம் எண்ணங்களால் இயக்கலாம்.
சில அதிமுக்கிய நினைவுகளை பாதுகாக்க/திரும்பப்பெற நினைவுகளை பதிவு செய்து மீண்டும் பெறலாம்.
டிஜிட்டல் உதவியாளர்களுடன் நம் மூளையை இணைத்து “வர புதன்கிழமை கல்யாண நாள் பா. மறந்துட்டா பொண்டாட்டி அதுக்கும் சேர்த்து சண்டை போடுவா!மறக்காம ஞாபகப்படுத்திடு” என கட்டளை இடலாம்.
மனவழுத்தம், பதட்டம், அதிர்ச்சிக்குப் பிந்தைய மனநலப்பாதிப்பு (PTSD), போன்ற உளவியல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மருந்தேயின்றி, நேரடியாக மூளையை தூண்டி பிரச்சனையை சரியாக்கலாம்.
கண்ணிழந்தவர் பார்வை பெறுவதும், முடவர் நடப்பதும் வாய்பேசாதவர் பேசுவதும் புராணங்களிலும் புனிதநூல்களில் படித்திருக்கிறோம். சுவேஷக்கூட்டங்களிலும் பார்த்திருக்கிறோம்(!).
கண்கண்ட கலியுக தெய்வமான செயற்கைநுண்ணறிவு இன்று மனிதனை காக்க வந்துவிட்டது.
கூடிய விரைவில் இது இன்னும் பல அற்புதங்களை நிச்சயமாக நிகழ்த்தும். இந்த AI மற்றும் மூளை தொடர்பான தொழில்நுட்பம் (Brain-Computer Interface – BCI) எதிர்காலத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஒரு நாள் இந்த உலகம் மனிதர்களின் எண்ணங்களால் இயங்கப்போகிறது.
இன்று வேறொரு சூழலில் “நினைப்பது” நடக்கும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது என்பது அறிவியல் அற்புதமே!
Leave a comment
Upload