உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி சதீஸ் முத்துகோபால் , பொறியாளர் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அவர்களின் கருத்துக்களை சென்ற வாரம் விகடகவி இதழில் வெளியிட்டோம் .
சுற்றுச்சூழல் பாதுகாப்பு , பல்லுயிர் வாழ்க்கை , பல்லுயிர் பெருக்கம் , கார்பன் உமிழ்வு ஆகியவற்றில் தெளிவான கருத்துக்களை உறுதியுடன் தொடர்ந்து முன் வைக்கிறார் .
இதோ அந்த உரையாடலின் தொடர்ச்சி ..
நம் நாட்டில் இயற்கை வளங்களைப் பாதுகாக்க எவ்வாறு திட்டமிடலாம்.
பள்ளிகளில் சூழலியல் கல்வியில் இருந்து ஆரம்பிக்கலாம் . பிள்ளைகளுக்கு இது பற்றிய தெளிவான அறிவைத் தர வேண்டும். நம் நாடு பல்லுயிர் சூழல் அமைந்த நாடு. இங்கு எதுவும் "வீண்" இல்லை.
வீணான நிலம் ,வீணான காடு வீணான நீர்நிலை எதுவும் இல்லை .எந்த இடமும் எதோ ஒரு உயிரினத்துக்கு தேவை . வீணான நிலம் என்று அங்கு தொழிற்சாலை , வீடுகள் அமைக்கும்போது அங்கு வாழும் பல்லுயிர்கள் அழிகின்றன . மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்கிலேயர் காலியான இடம் என்று பைன் மரங்களை நட்டனர். அங்கு வாழும் பல்லுயிர்கள் அழிந்தன.
அரசு புதிய திட்டங்களை அமைக்க திட்டமிடும் போதே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய எண்ணத்துடன் இருக்க வேண்டும் . எல்லா திட்டங்களுக்கும் இயற்கையில் இருந்துதான் மூலப்பொருட்களை எடுக்க வேண்டி உள்ளது . மலையைக் குடைந்து மண் எடுக்கிறோம் .சாலை அமைக்கிறோம் . அந்த திட்டத்தில் ஊழல் விளையாடும் போது , அந்த கட்டமைப்பை மீண்டும் செய்ய மறுபடியும் இயற்கையைச் சுரண்டுகிறோம் .
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி அரசு ,மக்கள் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் . அது குறித்த கல்வியறிவை தெளிவாக மாணவர்களுக்குத் தர வேண்டும்
சுற்றுச்சூழல் பாதிப்பால் விலங்குகள்,பறவைகள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றன?
பூமியில் பல்லுயிர் வாழ்வு என்பதை ஒரு சிலந்தி வலை போல பின்னப்பட்டுள்ளது. விலங்குகள் ,பறவைகளின் வாழ்விடங்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படும் போது அவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நீர் ,நிலம், காற்று மாசு இவை படுத்தப்படும் போது அவை வாழ முடியாத சூழல் ஏற்படுகின்றன. ஒலிபெருக்கியின் சப்தம் பறவைகளின் இயற்கை இனப்பெருக்கத்தைக் குறைக்கிறது. அதிவேக வாகனங்கள் , மின்வேலிகளில் அடிபட்டு பறவைகளும் விலங்குகளும் உயிர் விடுகின்றன. யானைகள் மலைப்பாதைகளில் இறந்து கிடக்கின்றன .அவற்றின் வயிற்றில் ஏகப்பட்ட நெகிழி குப்பைகள். சிவிங்கப்புலி , கானமயில் போன்ற விலங்குகள் இன்று தமிழ் நாட்டில் ஒன்று கூட இல்லை..
அயல்நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை நம்நாட்டில் அமல் படுத்த முடியுமா?
நம் நாட்டின் சூழல் வேறு .அயல் நாடுகளின் சூழல் வேறு . ஆயினும் அவர்களின் சில திட்டங்களை நாமும் நம் நாட்டில் பின்பற்றலாம் .சில நாடுகளில் பல்லுயிர் சூழல் இல்லை . நம் நாட்டில் பல்லுயிர் சூழல் அமைந்துள்ளது. மலைகள், காடுகள் , ஆறுகள் இவற்றைப் பாதுகாக்க அயல்நாட்டினர் காட்டும் சிரத்தையை நம் மக்களும் பின்பற்ற வேண்டும் . . சிங்கப்பூரில் பறவைகளை கூண்டில் வைத்து வளர்க்கலாம்,நம் நாட்டில் அது தடை செய்யப்பட்டுள்ளது, இந்திராகாந்தி 1972 ஆம் ஆண்டில் கொண்டு வந்த காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் நம் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் அருமையான சட்டம் .அச்சட்டத்தால் தான் நம் நாட்டில் விலங்குகள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன . நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப , இன்னும் கடுமையான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு ,அவை உறுதியாக பின்பற்றப்பட வேண்டும் . சட்டங்கள் காகிதத்தில் மட்டும் இருக்கும் நிலை மாறி , அனைவரும் பின்பற்றும் நிலை வர வேண்டும் .
சூழல் சீர்கேட்டால் விளையும் பருவநிலைப் பிறழ்வு, இயற்கை பேரழிவுகளைப் பற்றி விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தலாம். ?
பருவநிலை பிறழ்வு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளையே அதிகம் பாதிக்கிறது .அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம் கட்டுப்பாடின்றி உயருகையில் , கார்பன் உமிழ்வு அதிகமாக உள்ளது . இதனால் பருவநிலை பிறழ்வு ஏற்படுகிறது .கலிபோர்னியாவின் காட்டுத்தீ , பிலிப்பைன்ஸ் நாட்டின் புயல்கள் நம் நாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை புயல் , ஏனைய பேரிடர்கள் எல்லாம் இதனால் ஏற்படுகின்றன . பாரிஸ் ஒப்பந்தம் , உலக நாடுகளை ஒருங்கிணைத்து வெப்ப உயர்வைக் குறைக்க வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டியது . ஆனால் இவை உலக நாடுகளால் பின்பற்றப் படுவதில்லை .
தொடர்ந்து உயரும் பூமியின் வெப்பநிலை, இங்கு உயிரனங்கள் வாழ இயலாத சூழலை ஏற்படுத்தி உள்ளது . வேளாண்மை செய்யவும் சாத்தியமில்லாத சூழல் உருவாகி வருகிறது . வருங்காலம் குறித்து அச்சமும் , கவலையும் தோன்றுகிறது .
இதைத்தடுக்க தனி மனிதனால்,ஒருமாநிலத்தால் , ஒரு நாட்டால் முடியாது, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்டும் , உலக மக்கள் அனைவரின் ஒத்துழைப்பாலும் மட்டும் இது சாத்தியமாகும் .
நன்றி சதிஷ் !
இயற்கையைப் பாதுகாக்க , இம்மண்ணை மாசின்றி காத்து , மனிதர்களும், பிற உயிர்களும் வாழ தகுதி உடையதாக மாற்ற முயன்று வரும் உங்களைப் போன்ற இளைஞர்கள் உழைப்பில் இப்பூமி காக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
Leave a comment
Upload