தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட ஆனி மாதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

The month of Ani is full of spiritual blessings!!

தமிழ் மாதங்களில் மூன்றாவது வரும் ஆனி மாதத்தில் சூரியன் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்தராயணத்தின் கடைசி மாதமாக வருவதால் தேவர்களுக்கு இது மாலைப்பொழுது எனச் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. வட மொழியில் இதனை 'ஜேஷ்ட மாதம்' என்று அழைப்பார்கள். இம்மாதம் ஆன்மிக ரீதியாக மிகவும் சிறப்புப் பெற்றது. இந்த மாதத்தில் ஆன்மீக நிகழ்வுகள், விரதங்கள் மற்றும் பல சடங்குகள் நடைபெறுகின்றன. மேலும் இம்மாதத்தில் செய்யும் இறைவழிபாடு இரட்டிப்பு பலனைக் கொடுக்கும் என்பது ஆன்மீகத்தின் நம்பிக்கை. ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதினைக் கொண்டது.
இது இளவேனிற் காலம் தொடக்கம் என்பதால் இதமான காற்று வீசி வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும். ஆனி மாதத்தில் கூனியும் நிமிர்ந்து நிற்பாள் என்ற பழமொழிக்கு ஏற்ப இம்மாதமானது சிகிச்சைக்கு ஏற்ற மாதம் என்று வேதகால மருத்துவத்தில், பண்டைய வைத்திய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

ஆனி மாதத்தின் முக்கிய சிறப்புகள்:

ஆனித் திருமஞ்சனம்:
இந்த மாதத்தில் ஆனித் திருமஞ்சனம் மிகவும் முக்கிய நிகழ்வு. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனத்தின்போது ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைத்துச் சிவாலயங்களிலும் மாலை நேரத்திலும் திருமஞ்சனம் நடைபெறும். வைணவத் தலங்களில் முக்கியமான ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் என்கின்ற ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். ஆனித் திருமஞ்சன விரதம் இருந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டால் தோஷங்கள் விலகி விரும்பிய வேண்டுதல்கள் நிறைவேறும்.

வாராகி நவராத்திரி:

The month of Ani is full of spiritual blessings!!

ஆனி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் தொடங்கி வாராகி நவராத்திரி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. அன்னை ராஜராஜேஸ்வரியின் படைத் தளபதியாகவும் சப்த மாந்தர்களில் ஒருவராகவும் விளங்கும் வாராஹி அம்மனுக்கு இந்த ஒன்பது நாட்களில் பூஜை செய்தால் விவசாயத்திற்கு அதிபதியான அவர் நாட்டில் பசுமையை மிளிரச் செய்து நமது பசிப்பிணி போக்கி வாழ்வில் வசந்தம் வீசச் செய்வார்.

ஆனிப் பௌர்ணமி:
குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பூர்ணிமா வருவதும் இந்த மாதத்தில் தான். இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெறத் திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். இந்த நாளில் தான் உலக நலனுக்காக மகான்கள் தொடங்கும் சாதுர் மாத விரதம் வியாச பூஜையுடன் ஆரம்பம் ஆகும். பொதுவாக, நிறையக் கோயில்களின் கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில்தான் நடைபெறும்.

பகவதா அஷ்டமி:
இந்த தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருடன் சிவனையும் வணங்கினால் நமது சுமைகள் நீங்கி நலம் பெறலாம்.

நிர்ஜலா ஏகாதசி:
ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது. 'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள். இது நீர் இல்லாமல் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் கடைப்பிடிக்கப்படும் ஒரு கடினமான விரதமாகும். இந்த விரதத்தை அனுசரிப்பதால், ஒரு வருடத்தில் வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

யோகினி ஏகாதசி:
இந்த விரதம் இருந்தால் கடும் நோய்கள் நீங்கி சுகம் பெறலாம். ஹேமமாலி என்ற யட்சன் குபேரனின் சாபத்தால் குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான். யோகினி ஏகாதசியில் விரதம் இருந்து நோய் குணமாகி நலம் பெற்றான்.

இம்மாதத்தில் அவதரித்த மகான்கள்:
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று அவதரித்தார்.

The month of Ani is full of spiritual blessings!!

திருப்புகழை நமக்களித்த மகான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தன்று அவதரித்தார்.
ஸ்ரீ வைணவ பெரியோர்கள் வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் அனுஷ நட்சத்திரத்தன்று அவதரித்தார்

குருபூஜை:
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது.

கோயில்களில் விழாக்கள்:
இந்த மாதத்தில் தஞ்சை பெரிய கோயிலில் வராகி நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள்.
திருச்சி அருகே உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோயிலில், ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று மாம்பழ அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் கூடை கூடையாக மாம்பழங்களைக் கொண்டு வந்து அம்மனுக்குச் சமர்ப்பிப்பார்கள். அதைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த மாம்பழங்களைப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமி அன்று ஸ்ரீ தாயுமானவ சுவாமிக்கு வாழைப் பழத்தார்கள் சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாகச் சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜைகள் நிறைவு பெற்றதும் அந்த வாழைப்பழங்களைப் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.புதுச்சேரி அருகே உள்ள காரைக்காலில், காரைக்கால் அம்மையாருக்குத் தனிக் கோயில் இருக்கிறது. இங்கு ஆனி மாத பௌர்ணமியையொட்டி "மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று கயிலாசநாதர் மற்றும் அம்பாளுடன், வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடை கூடையாக வீட்டின் மேற்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்.

The month of Ani is full of spiritual blessings!!

ஆனி பௌர்ணமியையொட்டி, மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட இந்த ஆனி மாதத்தில் நாம் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறி, சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்!!

The month of Ani is full of spiritual blessings!!