தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 26 - கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று. -மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன்

20250521002329222.jpg

கட்டுப்படுத்தப்பட்டால் எகிறுவது என்ற குணம் சொந்த வாழ்க்கையில் சங்கடங்களை ஏற்படுத்தினாலும் நிருபர் தொழிலில் அது பேனாவின் நேர்மையைக் காக்க உதவும். தென்னாற்காடு மாவட்டத்தில் அவன் முதலில் சந்தித்த கலெக்டர் P.S.பாண்டியன். நெய்வேலிக்கு ஜனாதிபதி வந்தபோது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தவில்லை என்றும் வருவாய்த்துறை ஒரு வேலையும் செய்யவில்லை என்றும் அவன் செய்தி எழுதியதை அடுத்து மாற்றப்பட்டார் P.S.பாண்டியன். அவருக்கு பதிலாக வந்த கலெக்டர் N.ராஜகோபாலன், தலைமைச் செயலகத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி. அப்பழுக்கற்ற மனிதர். ஒரு பிஆர்ஓ செய்யும் வேலையை தானே செய்துவிடுவார். யாருடனும் அதிகம் ஒட்டாமலும் விலகாமலும் பழகிவந்தார்.

அப்போதைய மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஷண்முகசுந்தரம். ராஜகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய கலெக்டராக பொறுப்பேற்றவர் V.S.சந்திரலேகா. மகா கெட்டிக்காரப் பெண்மணி, மாவட்ட நிர்வாகத்தின் சகல நுணுக்கங்களையும் அறிந்தவர். நல்லவர் தான் என்றாலும் அதிகாரிகளுக்கு அவரை கண்டால் பயம். அவனும், கலெக்டரும் பொது விஷயங்களில் மோதிக் கொண்டார்கள். எல்லாமே செய்தி சார்ந்ததுதான். தனிப்பட்ட முறையில் அல்ல. ஆனாலும், அவனது விமர்சன செய்திகளால் பெரிதும் கோபப்பட்டார் கலெக்டர். செய்திகளை நேரடித் தாக்குதலாக எடுத்துக் கொண்டார். தென்னாற்காடு மாவட்ட விவசாயிகளிடம் வரி பாக்கி, கடன் நிலுவை இவற்றை கெடுபிடியாக வசூல் செய்தார். அவர் என்ன செய்வார் பாவம், தானாகவா முடிவெடுத்தார்? விவசாயிகளிடம் இருந்த மின்சார கட்டணம் முதல் வரவேண்டிய பாக்கி இவ்வளவு என்று வருவாய்த்துறை அமைச்சர் ஷி S.D.சோமசுந்தரத்தை எம்.ஜி.ஆர். கேள்வி கேட்க, அவரோ மின்சாரத்துறை அமைச்சர் பண்ருட்டி ராமசந்திரன் தன் மாவட்டத்தில் அதை செய்து காட்டட்டுமே என்று சொல்ல கெடுபிடி வசூல் தென்னாற்காடு மாவட்டத்தில் நடந்தது. இந்த உள்விவகாரம் அவனுக்கு பின்னர்தான் தெரிய வந்தது. கெடுபிடி வசூல் நடந்த காலத்தில் அவன் மாவட்ட நிர்வாகத்தை, அதாவது கலெக்டரை விமர்சனம் செய்தே செய்திக் கட்டுரைகளை எழுதி வந்தான்.

கலெக்டரும் அவனும் நேரடியாகவே சில நாட்கள் வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அதுவும் பிறர் எதிரே. அப்போது மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த ம.நடராசன் இருவரிடமும் இணக்கத்தை ஏற்படுத்த முயன்றார். அந்த இருவரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கவில்லை. எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் கலெக்டரின் நிர்வாகச் சீர்கேட்டை அவன் குத்திக் காட்டத் தவறியதில்லை.

ஒரு சமயம் முதற்பக்க சிறு செய்தியில் அவனது தொடக்க வாசகம், “Tuesday’s order of the collector of South Arcot came to be reversed the same evening, following the intervention of the local minister” செய்திக்கட்டுரை இன்னும் நீண்டது. முன்யோசனை இல்லாமல் கலெக்டர் பிறப்பித்த உத்தரவு அது. உத்தரவு சரியென்றால் பின்வாங்காமல் இருந்திருக்கலாமே என்ற அர்த்தம் தொனிக்கும்படி இருந்தது அந்தச் செய்தி. இதை நேரடி தாக்குதலாக எடுத்துக் கொண்டார் கலெக்டர். ஹிண்டு எடிட்டருக்கு அந்த நிருபரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஹிண்டு அவருக்கு ஒற்றை வரியில் பதில் கொடுத்தது. ‘‘The powers to transfer our staff vest with our administration’’ உள் அர்த்தம், ‘எங்கள் நிருபரை மாற்றச் சொல்ல நீங்கள் யார்? கலெக்டர் மேலும் கோபப்பட்டார். வேறு ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காந்திருந்தார். நிருபரை குறை சொல்லி ஒரு நீளமான புகார் கடிதத்தை ஹிண்டுவிற்கு அனுப்பினார். அந்த கடிதத்தின் நகல் அவனுக்கு வழக்கம் போல் ஹிண்டுவில் இருந்து வந்தது. படித்துப் பார்த்தான். அதில் சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டிருந்தன. சில திரித்து எழுதப்பட்டிருந்தன. எடிட்டருக்கு பதில் எழுதுவதற்கு முன்னதாக தன் தரப்புக்கு நிரூபணங்களைத் திரட்ட விரும்பிய அவன் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியான பன்னீர் செல்வத்தைத் தொடர்பு கொண்டு, ‘‘என்னய்யா உங்கள் கலெக்டர் இப்படி எழுதியிருக்காங்க’’ என்று கேட்டார்.

அப்போது பன்னீர்செல்வம், ‘அண்ணே உங்கள் நண்பர் கடிதத்தை தன் கையெழுத்தில் டிராப்ட் செய்தார். ஆனால் கலெக்டர் அந்த கையெழுத்து பிரதியில் தன் கையாலேயே சில வார்த்தைகளைச் சேர்த்தார். சில வார்த்தைகளை மாற்றி சூடேற்றினார். அதனால்தான் இந்த காரசாரமான கடிதம்’ என்றார். அவன் அவரைக் கேட்டான், ‘சரி பி.ஆர்.ஓ எழுதிய டிராப்ட் கடிதம் எங்கே?’ பன்னீர்செல்வம் சொன்னார், ‘‘அண்ணே கலெக்டரின் திருத்தங்களோடு வந்த அந்தக் கடிதத்தை டைப் செய்தபின் கிழித்துப் போட்டிருக்க வேண்டும், எதற்கும் இருக்கட்டும் என்று அதை பைலில் வைத்திருக்கிறேன். நான் கொடுத்தேன் என்று சொல்லாதீர்கள். எடுத்துக் கொண்டு செல்லுங்கள் அது உங்களை காப்பாற்றும்’’ என்றார்.

அதன்படியே நடராசனின் கையெழுத்தில் இருந்த டிராப்ட் கலெக்டர் கையெழுத்தில் இருந்த கோபமாக சேர்க்கப்பட்ட சொற்கள் கொண்ட அந்தக் கடிதத்தை அவன் அப்படியே ஹிண்டு ஆசிரியருக்கு அனுப்பினான். எடிட்டருக்கு விஷயம் விளங்கிவிட்டது. இதற்கிடையில் இன்னொரு சம்பவமும் நடந்தது. விவசாய சங்கத்தலைவர் நாராயணசாமி நாயுடு கடலூரில் நிருபர் சந்திப்பில், ‘அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கள்ளுக்கடை திறக்கலாம், தடைசெய்யப்பட்ட வேறு செயல்களையும் செய்யலாம், அதற்கான வாரியத்திற்கு உங்கள் கலெக்டரையே தலைவியாகப் போட்டுவிடலாம் என்று சொன்னார். நிருபர்களிடம் நாராயணசாமி நாயுடு இப்படி பேசியது உளவுத்துறை மூலமாக கலெக்டருக்குத் தெரியவந்தது. அவர் பிஆர்ஓ நடராசனை அழைத்து, யார் யார் அந்த நிருபர் கூட்டத்தில் இருந்தார்கள் என்று பட்டியல் கேட்டார். பிஆர்ஓ ஒன்பது பேர்கள் கொண்ட பட்டியலைக் கொடுத்தார். முதல் பெயர் ஹிண்டு நிருபர். அதைப் படித்துப் பார்த்த கலெக்டர் பிஆர்ஓ நடராசனிடம் சொல்லியிருக்கிறார், ‘ஹிண்டு நிருபரை விட்டுவிடு, அவர் எதையும் முகத்திற்கு நேராகப் பேசுவார். புறம் பேசுவதில்லை என்று சொல்லி மீதி எட்டுப்பேரை கவனி’ என்று சொல்லிவிட்டார்.

மறுநாள், அவனை சந்தித்த பிஆர்ஓ, ‘என்னய்யா நீயும் கலெக்டரும் கடுமையாக சண்டை போட்டுக்கிறீங்க, ஆனா அந்த அம்மா இந்த விஷயத்துல உன்னை குறை சொல்லல’ என்றார். பின்னர் கலெக்டர் சந்திரலேகா அந்த மாவட்டத்தில் இருந்து மாற்றல் ஆகிச் சென்றபோது அவரைப் பார்த்து அவன் சொன்னான், ‘சகோதரி, சண்டை சச்சரவுகள் என் பேனாவிற்கும் உங்கள் நிர்வாகத்திற்கும்தான். நீங்கள் வேறு பணியில் சேர்ந்து இங்கு வரும்போது முதல் நபராக நான் உங்களை வரவேற்பேன்’ என்றான்.

அவர் கோழிவாரிய தலைவியாக கடலூர் வந்தபோது சொன்னபடியே முதல் நபராக அவரைச் சந்தித்தான். சந்திரலேகா அமெரிக்காவிற்குப் படிக்கப் போவதாக சொன்னபோது, அவன் அமெரிக்க சமூகம், அமெரிக்க அரசியல், அமெரிக்கப் பொருளாதாரம் என்ற மூன்று புத்தகங்களை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான். சென்னையில் அவர் முகத்தில் அமிலம் வீசப்பட்ட தினத்தில் செய்தி அறிந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தான். அவன் வேறு இரண்டு முக்கியஸ்தர்களுடன் தன் வீட்டில் இரவு விருந்திற்கு அழைத்தபோது தட்டாமல் வந்து கலந்து கொண்டார் சந்திரலேகா. இன்றும் கூட அவரைச் சந்தித்து சுமூகமாக பேசிக் கொண்டிருக்கிறான். இருவருமே மோதிக் கொண்டது தங்கள் தொழில் நிர்பந்தமாகத்தான், தனி மனிதர்கள் அல்ல என்பதை உணர்ந்துக் கொண்டார்கள்.

தொழில்முறை சச்சரவுகள் தனி மனித உறவில் நுழைந்து விடாமல் தொழில் தர்மத்தைக் காத்தவன் அவன்.