இரும்புப் பறவையின்
இருக்கையில் அமர்ந்து,
இன்சிரிப்பில் குடும்பமாய்
இணைந்த புகைப்படங்கள்...
இன்பப் பயணமென்று
எண்ணி மகிழும் முன்
இறுதிப் பயணமாகியதோ...!
வண்ணக் கனவுகள் பல,
எண்ணப் பறவைகளாய்
பலர் நெஞ்சிலே சிறகடிக்க,
விண்ணில் பறக்க இருந்த
விமானப் பறவையோ, தன்
சிறகுகள் விரிக்க மறந்து
மண்ணில் புதைந்ததுவோ...!
எத்தனை கனவுகள் சுமந்து
வாழும் ஆசையில் மிதந்து,
பாரம் குடும்பத்தில் குறைய
தூரம் துரத்தி போனவர்கள்...
குதூகலமான பயணம் ஒன்று,
குலைந்து ஏன் போனதன்று..?
கனவுச்சுமைகளின் பாரமா...?
மீளாத தூரங்கள் மீண்டு...
காணாத சொந்தங்கள் கண்டு
கூடாதிருந்த நேரங்கள் எல்லாம்
கூடிவரும் தருணங்கள் காண,
வாடாது இருந்த முகங்கள்...
வானளாவும் தீயில் கருகி
மீளாது ஏன் போனதன்று...?
வீழ்ந்து மாண்டனர் பயணிகள்...
வீழ்ந்த இடத்தில் இருந்தோர்..?
காலன் கணக்கு குறைந்ததோ..?
கூடச் சேர்த்தானோ அவர்களை..?
காரணம் தேடுவோர் பலர்...!
காரணம் கூறுவோர் சிலர்...!
மரணம் மறுக்க முடியாதது...!
கணிக்க முடியாததும் தான்...!
இருந்தும் மறக்க முடியுமா...
புன்னகைத்த முகங்களாய்
விமானிகள்,பணிப்பெண்கள்..!
இன்முகத்துடன் வரவேற்ற
காட்சிகள் வரும் கண்களில்...!
இத்தனை உயிர்கள் பலி...
யார் மீது சொல்வது பழி...?
பாலா கோவை
Leave a comment
Upload