தொடர்கள்
அழகு
மழைக்காடுகள் தினம் - இந்துமதி கணேஷ்

20250520230703921.jpeg


'உலக மழைக்காடுகள் தினம்' என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு மழைக்காடுகளைப் பாதுகாத்து வழங்குவது குறித்த விழிப்புணர்வைத் ஏற்படுத்துவதுதான் இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கமாகும். 2025ஆம் ஆண்டில் "மழைக் காடுகளைப் பாதுகாப்போம் உலகை வலுவாக்குவோம்" என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அதிகமான மழை வளத்தால் செழித்து வளரும் காடுகளை நாம் மழைக்காடுகள் அல்லது பொழில் என்று அழைக்கிறோம். தொடர்ந்து மழை பொழிவதால் அந்த நிலத்திற்கு பொழில் என்ற பெயர் பொருத்தமாக அமைகிறது. பொழில்கள் பூமியின் பழமையான சுற்றுச்சூழல் அமைப்புகளாகும். அவை கிட்டதட்ட எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது டைனோசர் வாழ்ந்த காலம் தொட்டு என்று கொள்ளலாம், அப்போதே தோன்றியிருக்கின்றன. உலகிலுள்ள விலங்குகளிலும் தாவரங்களிலும் கிட்டதட்ட 75 விழுக்காடு மழைக்காடுகளை பூர்வீகமாக கொண்டவை. மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளும் மரங்களும் இங்கு செழித்து வளர்கின்றன. உலகத்திற்கு தேவையான ஆக்சிஜனில் கிட்டத்தட்ட 28 விழுக்காட்டை பொழில்களே நமக்கு வழங்குகின்றன.

மழைக்காடுகள் மிக குறைவான நிலப்பரப்பை கொண்டிருந்தாலும்(6 %) அங்கு பல்கி பெருகும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கும். இன்னும் கூட பல வகைகள் உயிரினங்கள் அறியப்படாமலேயே இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பத்து கிலோமீட்டர் மழைக்காட்டில் மட்டுமே கிட்டதட்ட 1,500 பூக்கும் தாவரங்கள், 750 வகையான மரங்கள், 400 வகையான பறவைகள் மற்றும் 150 வகையான பட்டாம்பூச்சிகள் இருக்கலாம் என்று நமபப்படுகிறது என்றால் மொத்த மழைக்காட்டின் உயிரினங்களின் தாவரங்களின் கணக்கெடுப்பை யோசித்து பாருங்கள்.

அண்டார்டிகாவைத் தவிர மற்ற எல்லா கண்டத்திலும் மழைக்காடுகள் செழித்து வளர்கின்றன. பூமியில் மிகப்பெரிய மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் அமேசான் நதியையும் ஆப்பிரிக்காவின் காங்கோ நதியையும் சுற்றி இருக்கும் அமேசான் காடுகள் தான். தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் அடர்த்தியான மழைக்காடுகள் உள்ளன. நமது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளக் காடுகள், மழைக்காடுகள்தான். அதேநேரம் ஒவ்வொரு மழைக்காடும் ஒன்றிலிருந்து மற்றொன்று சற்றே வேறுபட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் வித்தியாசமாக இருப்பதுதான்.மழைக்காடுகளின் வளமானது நமது பூமியின் நல்வாழ்வுக்கு மிக அவசியம், அதனாலேயே அவைகளை நா பாதுகாக்க வேண்டியது அவசியம்.

இக்காடுகள் உலகில் உள்ள நீர்சுழற்சியினை சமநிலைப்படுத்துகின்றன. பொதுவாக, பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கும் வங்கிகளாக காடுகள் செயல்படுகின்றன. மரங்களே இல்லாத சாதாரண நிலப்பரப்பில் மழை பெய்யும்போது மழை நீரில் 3 விழுக்காடே பூமியினுள் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 97 விழுக்காட்டு நீரும் உடனடியாக வெளியேறி விடுகின்றது. ஆனால், காடுகளில் பெய்யும் மழை நீரில் 33 விழுக்காடு உள்ளிழுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. இது காடுகளை நம்பி வாழும் மக்களுக்கு மிகப்பெரும் கொடையாக அமைந்துள்ளது. பூமியில் உள்ள நீரினை உறிஞ்சி காற்று மண்டலத்தில் வெளியிட்டு மழையைப் பெய்யச் செய்கிறது. மழைக்காடுகளில் உள்ள மரங்கள் மண்அரிப்பு, வெள்ளப்பெருக்கு, வண்டல் படிவு ஆகியவற்றைத் தடுக்கின்றன.

மழைக்காடுகளில் பொதுவாக நான்கு அடுக்குகளில் உயிர் செறிவானது பிரிக்கபட்டிருக்கிறது. வெளிப்படு அடுக்கு, மரக் கவிகை அடுக்கு, மரக்கீழ் அடுக்கு மற்றும் காட்டுத்தரை. வெளிப்படு அடுக்கில் குறைந்த எண்ணிக்கையிலான மிகப் பெரிய மரங்கள் இருக்கும். இவை பொதுவான மரக் கவிகைக்கு மேலாக வளர்ந்து 45-55 அடி உயரத்தை எட்டுகின்றன. சில வேளைகளில் சில மரங்கள் 70-80 அடி உயரத்துக்கு வளர்வதும் உண்டு. கழுகுகள், வௌவால்கள், வண்ணத்துப் பூச்சிகள், சில வகை குரங்குகள் ஆகியவை இந்த அடுக்கில் வாழும்.

அடுத்த அடுக்கான மரக்கவிகை அடுக்கு மிகவும் அடர்த்தியானது, நெருக்கமாக அமைந்த மரங்கள் சூரிய ஒளியை கூட உள்நுழைய விடாது ஒரு குடை போன்ற அமைப்பினை ஏற்படுத்தி விடும். உலகின் 50% அளவான தாவர வகைகளின் வாழிடம் மரக்கவிகை அடுக்கே எனத் தெரியவருகிறது, உலகின் மொத்த உயிரினங்களில் அரைப்பங்கு இந்த அடுக்கிலேயே வாழக்கூடும் என்றும் நம்பப் படுகிறது. வெளிப்படு அடுக்கில் உள்ளது போன்ற விலங்குகளே இங்கும் வாழ்ந்தாலும், இங்கு அதைக்காட்டிலும் பல்லுயிர்கள் வாழக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மரக்கீழ் அடுக்கு, மரக்கவிகை அடுக்குக்கும், காட்டுத்தரைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் பறவைகள், பாம்புகள், வழிகள், சிறுத்தைகள், மற்றும் பல பூச்சி வகைகள் காணப்படுகின்றன. கடைசி அடுக்கான காட்டுத் தரை அடுக்கில் மிக குறைந்த அளவே சூரிய ஒளி ஊடுருவ முடியும். இதனால் அங்கு நிறைய செடி கொடிகள் வளர வாய்ப்புகள் இல்லை. இந்த அடுக்கு சிதைவடைந்து போயிருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மிச்சங்களை கொண்டிருக்கும். இளஞ்சூடான, ஈரப்பற்றுக்கொண்ட சூழலில் இவை விரைவாகவே சிதைந்து விடுவதால் விரைவாகவே மறைந்து விடுகின்றன.இத்துனை சிறப்பு வாய்ந்த இந்த மழைக்காடுகள் தான் இன்று வேகமாக அழிந்து வருகின்றன.

"எப்போது மனிதர்கள் தனக்குத் தானே காமுரத் தொடங்கினார்களோ அப்போதி அவர்களுக்கு இயற்கை மீதிருந்த காதல் போய்விட்டது. இயற்கை நமக்கு அற்புதமான கண்ணாடியாக ஓடும் நதியை தந்தது ஆனால் நாம் அதை உடைத்துவிட்டு செயற்கையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டோம்" சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் தன்னுடைய நூலான காடோடியில் இப்படி எழுதி இருப்பார். அந்த புதினத்தில் போர்னியா மழைக்காடுகளில் வாழும் சறுக்கிகள் பற்றிய விவரங்களை அற்புதமாக எழுதி இருப்பார். குரங்குகளில் மட்டும் 15க்கும் மேல் வகைகள் இருப்பதாகவும் அதில் பாதியை தான் இறந்த பிறகே பார்க்க நேர்ந்ததை வருத்ததுடன் பகிர்வார்.

வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் மழைக் காடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உலக வங்கிகளுக்கும் கடன்பட்டு தங்களுடைய வளங்களை இழந்து வருகின்றன. இதை பற்றி நக்கீரன் அவர்கள் மழைக்காடுகளின் மரணம் என்ற நூலில் விவரித்து இருப்பார். நூலின் இறுதியில் இருக்கும் கவிதை மனதை உருக்கும், அதில் மூதாய் மரங்கள் மனிதனிடம் நீதி கேட்பது போல எழுதி இருப்பார். அமேசான் காடுகளில் ஒரு பகுதியில் காட்டுத்தீ உருவாகி காட்டையும் அங்குள்ள உயிர்களையும் அழித்தது நம் நினைவில் இருக்கலாம், அங்குள்ள பழங்குடி பெண்ணின் கதறல் இன்னும் எண் செவிகளில் ஒலிக்கிறது. 2050ல் இந்த காடுகள் அழிந்து போய் விடும் அபாயம் உண்டு என்பதால் நாம் தான் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். நாளைய தலைமுறைக்கு கொஞ்சமாவது பச்சையத்தை விட்டு வைப்போம். காட்டழிப்புக்கு எதிராக குரல் கொடுப்போம்.

இந்துமதி கணேஷ்

cheers,
Indhu