ஜூலை 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகையாலும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மூலம் ஏற்படக்கூடிய கழிவுகளாலும் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, மாறி வரும் காலநிலை, காடுகள் அழித்தல், காற்று மற்றும் நீர் மாசுபாடு, பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற பிரச்சனைகள் இன்று உலக அளவில் பெரும் கவலையாக உள்ளன. இந்த வகையான பல பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வு காண்பதற்காகவே, இந்த நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய நாளாகவும் இது விளங்குகிறது.
இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையில் 1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. . இதற்கான அடித்தளத்தை 1972ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாடு (Stockholm Conference) அமைத்தது. இக்கொள்கையை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாட தீர்மானித்தது.
மக்கள் தொகை மிகப்பெரிய காரணமாக இருந்தாலும் கூட நம்முடைய சிந்தனை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாததுதான் இன்றைய நிலைக்கு முக்கிய காரணங்கள் .இந்த உலகம் மனித சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தம் என்று கருதாமல், இதில் நம்மோடு வாழக்கூடிய பலவகையான உயிரினம் பற்றிய அக்கறையும் அவசியம். அவைகள், இன்று அழிந்து கொண்டு வருவதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. தனியார் மயமாக்கல் மற்றும் வணிக மனப்பான்மையின் அபாயகரமான சூழல் இதற்கு மேலும் கேடு விளைவிக்கிறது.
இந்த நிலையில் இருந்து மீள்வதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்த்தால் அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்பது. அடுத்தபடியாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. காடுகள் அழிவதை தவிர்ப்பதற்கு பேப்பர்களின் பயன்பாட்டை நாம் குறைக்கலாம், மறுசுழற்சி மறு பயன்பாடு என்கிற மனப்போக்கை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதும் நம்முடைய தலையாய கடமையாக கொள்ளல் வேண்டும்.
வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதும் நல்லது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தனக்கென்று ஒரு வாகனம் எடுத்துச் செல்லாது, குழுவாக ஆங்கிலத்தில் கூறுவது போன்று "Car pooling" செய்தோ அல்லது மிதி வண்டியிலோ, நடந்தோ செல்வது சிறந்ததாகும். இதன் மூலம் வாகனங்கள் அதிகரிக்கும் நிலையையும் நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம், நம்முடைய உடல் நலனையும் மேம்படுத்தலாம்.
உலக சுற்றுச்சூழல் தினம் என்பது, ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், வாழ்நாளில் நம்மால் இயன்ற நடவடிக்கைகள் எடுக்கச் செய்யும் ஒரு விழிப்புணர்வு இயக்கமாக இருக்க வேண்டும். இயற்கையுடன் இசைவாக வாழ்வது மட்டுமே நம்மையும், எதிர்காலக் தலைமுறையையும் பாதுகாக்கும்.
"நாம் இயற்கையை நேசிப்போம், இயற்கையும் நம்மை நேசிக்கும்!"
Leave a comment
Upload