தொடர்கள்
கதை
மனித மணம்-சிறுகதை - பா.அய்யாசாமி

20250520231543877.jpeg



அடுப்புலே டீ கொதிக்க வச்சிருக்கேன்,கொஞ்ச நேரம் இருங்கள் என உள்ளே ஓட்டமும் நடையுமாய் ஓடினார் சுந்தரம், சொம்பில் வடிகட்டி டீயை எடுத்து வந்துக் கொடுத்தார் தெருவில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு.

நகராட்சியில் மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று பத்து வருடங்களாக பென்சன் வாங்குபவர்,மனைவியை பறிகொடுத்த பின்னே மனநிலை சரியில்லாத 40 வயது தனது மகனுடன் வசித்து வருபவர் சுந்தரம்.

தனது அலுவலகத்துப் பணியாளர்கள் என்பதால் தனி அக்கறை அவர்கள் மீது, தொழிலாளர்களும் அவர் வீ்ட்டைச் சுத்தமாக வைத்திருக்க உதவி செய்வது அவர்களின் வழக்கம்.

நவம்பர் மாதத்தின் தொடர் மழையினாலும் நான்கு நாட்களுக்கு ஊரெல்லாம் சாக்கடைகள் அடைத்துக் கொண்டு தண்ணீர்த் தேங்கியதினால் வெவ்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகச் சென்ற பணியாளர்கள், இன்றுதான் சுந்தரம் வசிக்கும் தெருவிற்கு வந்து அவரது வீட்டினைக் கவனித்தார்கள்.

குப்பையும் கூளமுமாக இருந்தது. வீசியெறிந்த செய்தித்தாள்களும், எடுக்காத பால் பாக்கெட்கள் என கவனிப்பாரற்றுக் கிடந்தன.

"நான்கு நாட்களாக குப்பைகளை அள்ளாமல் நாங்கள் துர்நாற்றத்தில் இருந்து வருகிறோம், எங்கே போய்த் தொலைந்தீர்கள்", என மனம்போன போக்கில் அவர்களை ஏசினார்கள் அந்தத்தெருவாசிகள்.

இதோ வந்திட்டோம்ல, சுத்தம் செய்து விடுகிறோம் என்றவர்கள்,

சார்...சார் என சுந்தரத்தை அவரது வீட்டு வாசலில் கூப்பிட்டனர்,

எந்தவித பதிலும் வீட்டின் உள்ளியிருந்து இல்லாது போகவே, சன்னலைத் தள்ளி அதன் வழியாகப் பார்த்ததில் கட்டிலொன்றில் படுத்திருந்தார் சுந்தரம்,அருகில் நாற்காலி ஒன்றில் அவரது மகன் சரிந்துக்கிடந்தான்.

சிரம்ப்பட்டு கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தில் சுந்தரம் இறந்துப் போயிருந்தார்.
அவரது மகன் மயக்கமுற்று இருந்ததைக் கண்டு அவருக்கு பருக தண்ணீரைக் கொடுத்து காப்பாற்றினர் பணியாளர்கள். சுந்தரத்தின் உடல் அழுகத் தொடங்கி துர்நாற்றம் வீசத்தொடங்கியிருந்தது.

இறந்து குறைந்தது மூன்று நாட்களாகிருக்கும்,என்ன செய்வதென்றே தெரியாத மகன் அருகிலேயே அமர்ந்து பசியினால் மூர்ச்சையானதைக் கண்ட பணியாளர்கள் அவன் மீது பரிதாபப்பட்டனர்.

செய்திப் பரவியதில் கூடியிருந்த அக்கம் பக்கத்தினரும் களைந்துச் சென்றனர். சுந்தரத்தின் உடலை சுத்தம் செய்து பழையத் துணியைக்கொண்டு உடலை மூடி வைத்துவிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தனர்.

சொந்தப் பந்தங்கள் யாரென்றும் தெரியாது, மகனின் நிலையறிந்து எவரிடமும் அதிகம் பேசாத பழகாத சுந்தரத்தின் குறைகளைக் கண்டவர்கள் எவரும் வர இயலாது என மறுத்துக் கூறியதோடு,
நாற்றம் குடலைப் பிடுங்குகிறது தெருவை முதலில் சுத்தம் செய்யுங்கள் என வலியுறுத்தினர்.

அக்கம் பக்கம் வசிக்கும் நீங்கள் இத்தனை நாட்களாக பிணத்தின் வாடையில்தான் இருந்துள்ளீர்கள், குப்பை வாடையைவிட அது கெடுதல். இதனை கவனிக்காமல் இப்படி சுயநலமாக இருந்துள்ளீர்களே என திரும்பக் கேட்டனர் துப்புரவுப் பணியாளர்கள்.

இப்போவாவது வாங்க, வந்து ஆகவேண்டியதை கவனியுங்கள் நாங்கள் மற்ற வேலைகளுக்குப் போகணும் என்று கூறியும் ஒருவர் கூட சுந்திரத்தின் உடலை வந்து பார்க்கவில்லை,எவ்வித உதவியும் செய்ய முன் வராமலும் இருந்தனர்.

அவரது மகனுக்கு பசி நீங்கியதும் நடந்தவை என்னவெனத் தெரியாமல் வாசலில் நின்றுக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் நடந்தவைகளை.

பணியாளர்கள் பணிக்கு வராததைக் கண்ட சூப்பர்வைசர் அவர்களைத் தேடிக்கொண்டு அங்கு வந்துவிட அவரிடம் நடந்ததைக் கூறினார்கள்,

சரி வாங்க,நேரமாகிவிட்டது, கோர்ட் ரோடு,கலெக்டர் ஆபீஸ் ரோடு,எஸ் பி ஆபீஸ்ரோடு முழுவதும் குப்பை மண்டிக் கிடக்கு,உங்களுக்கு வேலை நிறைய கிடக்கு என அழைத்தார்.

இல்ல சார்,நாங்க இன்று வேலைக்கே வரலை என்றனர் அனைவரும்.

நீங்கள் வரலைனா உங்களுக்கு ஒன்று நட்டமில்லை,உங்க ஒப்பந்தக்காரருக்குத்தான் ஆபத்து அப்புறம் பார்த்துக்கோங்க என மிரட்டினார் சூப்பர்வைசர்.

நம்ம சுந்தரம்சார்ங்க ! இப்படியே விட்டுவிட்டு வர முடியமா என கேட்டனர்.

யாரு விடச் சொன்னா? இப்போ வாங்க அப்புறமா வந்து பாருங்க என்றார் சூப்பர்வைசர்.

அவருக்கென யாருமில்லை சார், நாங்க முதலில் அவரை அடக்கம் செய்யப் போகிறோம்,மற்ற வேலையெல்லாம் அப்புறந்தான் என்றனர் பணியாளர்கள்.

அப்போ எங்கள் பகுதி நாற்றமெடுத்தால் பராவாயில்லை அப்படித்தானே என்றனர் நகர் வாசிகள் கோபமாக.

நாறட்டுமே!

அக்கம்பக்கத்தில் வசிக்கும் நீங்கள் இப்படி சுயநலம் கொண்டு மனத்தளவில் மிருகமாக இருக்கும்போது இந்த நகர் இப்படியிருந்தால் தப்பில்லை.

மனசு முழுக்க குப்பையை சுமந்துத் திரியும் உங்கள் பகுதி ஒரு நாள் குப்பையோடுதான் கிடக்கட்டுமே,என்ன குடியா மூழ்கிடப் போகுது என்று கேட்டதும் வாயடைத்து திரும்பினர்.

பணியாளர்களே ஆம்புலன்சு ஒன்றை அழைத்து வந்து சடலத்தை ஏற்றிக்கொண்டு இடுகாட்டிற்குச் செல்லும்போது, இவை எதுவும் புரியாமல்
கண்கள் கலங்க நின்ற அவரது மகன் 'டாடா' காட்டியபடி நின்றது அனைவரது கண்களையும் குளமாக்கியது.

பணியாளர்களால் மனிதம் எனும் அகர்பத்தி ஏற்றியதில் மணம் வீச மனத்தின் துர்நாற்றம் சற்று குறைய ஆரம்பித்திருந்தது அந்த பகுதியில்.