மகாராஷ்டிர மாநிலம், ஜல்னா மாவட்டம், அம்போரா ஜஹாகீர் கிராமத்தை சேர்ந்தவர், 93 வயதான நிவ்ருத்தி ஷிண்டே. இவரது மனைவி, 85 வயதான சாந்தாபாய். இருவரும் எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். எனினும், இந்த வயதான தம்பதி தனியே வசித்து வருகின்றனர். இந்த 93 வயதிலும் நிவ்ருத்தி ஷிண்டேவுக்கு, தனது மனைவிமீது தீராத காதல் மற்றும் பாசம் இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தங்களின் திருமண நாளை முன்னிட்டு, தனது மனைவி சாந்தாபாய்க்கு பரிசளிக்க விரும்பினார். இதற்காக சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள பிரபல நகைக் கடைக்கு மனைவியை நிவ்ருத்தி ஷிண்டே அழைத்து சென்றுள்ளார். பாரம்பரிய வெள்ளை வேட்டி, குர்தா மற்றும் தொப்பி உள்பட எளிய உடைகளுடன் வந்த முதிய தம்பதியை பார்த்ததும், பிச்சை எடுக்க வந்திருப்பதாக நகைக்கடை ஊழியர்கள் நினைத்துள்ளனர்.
அன்றைய தினம் தங்கத்தின் விலை விண்ணை எட்டும் அளவில் இருந்தாலும், தனது மனைவி சாந்தாபாய்க்கு தாலி சங்கிலி வாங்கித்தர முதியவர் நிவ்ருத்தி ஷிண்டே விரும்பியுள்ளார். இதற்கென சேமித்து வைத்திருந்த ₹1,120 ரொக்கப் பணத்தை நகைக்கடை உரிமையாளரிடம் கொடுத்து, தனது மனைவிக்கு தாலிச் சங்கிலியை ஆசையாக தருவதற்கு விரும்புவதாக முதியவர் நிவ்ருத்தி ஷிண்டே கூறியுள்ளார். இதை கேட்டு ‘இந்த வயதிலும் தனது மனைவிமீது தீராத காதலுடன், இருக்கும் பணத்தை வைத்து, தாலி சங்கிலி வாங்கிக் கொடுக்க விரும்புகிறாரே? இப்படியொரு காதல் ஜோடியா!’ என்று கடை உரிமையாளர் உள்பட அனைவரும் வியந்து பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்ததுதான் ஹைலைட்டே… 93 வயதான எளிய முதியவர் நிவ்ருத்தி ஷிண்டேவின் மனைவி மீதான காதலுக்குப் பரிசாக, நகைக்கடை உரிமையாளர் 20 ரூபாயை மட்டும் வாங்கிக்கொண்டு, 5 சவரன் எடையில் தங்கத் தாலிச்சரட்டை பரிசாக வழங்கினார். இதனால் முதிய தம்பதிகளான நிவ்ருத்தி ஷிண்டே-சாந்தாபாய் ஆகிய இருவரும் மகிழ்ச்சி பெருக்கில் கண்ணீர் மல்க நகைக்கடை உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தனர். இச்சம்பவம் கடையில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Leave a comment
Upload