தொடர்கள்
புத்தக விமரிசனம்
நூல் :- பறவைகள்  சூழ் உலகு ( பறவை பார்ப்பவனின் டைரி) மருத்துவர் வி.விக்ரம் குமார் - பூங்கொடி பாலமுருகன்

20250520231041721.png

பதிப்பகம் :- காக்கைக் கூடு

பக்கங்கள் :- 80

விலை :- ₹90.00

வாழ்க்கை என்பது ஒரு போட்டி. இதில் யார் வேகமாக ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்ற கற்பிதம் மனதில் பல காலமாய் விதைக்கப்பட்டதால், ஏன் ஓடுகிறோம்? எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தில் நம்மை சுற்றியுள்ளவர்களையே கவனிக்க நேரமில்லாத போது, நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய மற்ற உயிரினங்களை கவனிக்க நமக்கு நேரம் இருக்கப் போகிறதா என்ன?

ஆனால் இந்த நூலின் ஆசிரியர், தான் பார்த்து ,ரசித்து, ஆராதித்த பறவைகளைப் பற்றித்தான் இந்த நூலில் சுவைபட எழுதி இருக்கிறார்.

'உன்னிடம் பேசுவதைவிட

உன்னைப் பற்றி

உன் நண்பர்களிடம் பேசுவது

உன்னிடம் நெருக்கமாய்

உணர வைக்கிறது..'

எப்போதோ வாசித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது நூலை வாசித்ததும் நினைவுக்கு வந்ததும்.

பறவைகள் நாம் பார்த்து மகிழ்வதை விட, மற்றொருவர் பறவைகளைப் பற்றி சிலாகித்து எழுதி இருப்பதை வாசிப்பது அதை விட இன்பமாய் இருக்கிறது. அதை தான் பறவைகள் பற்றிய நூல்கள் வாசிப்பில் உணர்கிறேன்.

வெண் மார்பு மீன் கொத்தியின் அழகு, காணொளியில் ரசித்த சிகாரா பூங்குருவியின் இனிமை ததும்பும் பாடல், தையல் சிட்டுவின் இலைகளில் கட்டமைத்த கூடு, தூக்கணாங்குருவியின் தொங்கும் வீடு போன்றவற்றையெல்லாம் நெருக்கமாக பார்த்தபோது மெல்ல மெல்ல பறவை உலகத்தில் ஈர்க்கப்பட்டு, பறவை பார்த்தல் இன்னும் இந்த அற்புத உலகத்திற்குள் தான் அடியெடுத்து வைத்ததாய் நூல் ஆசிரியர் இதில் குறிப்பிடுகிறார்.

பகலில் காணும் காடுகளுக்கும், இரவில் காணும் காடுகளுக்கும் அநேக வேறுபாடுகள் உள்ளன. ஒரு பக்கம் மாந்தைகளின் அலறல் மறுபக்கம் பூச்சிகளின் சினுங்கல், சருகுகளில் ஊர்வனவற்றின் ஓசை, நிலவின் ஒளி சிதறல் இன்று பயமும் ஆச்சரியமும் நிறைந்த இரவு பொழுதொன்றில் ஒரு இரவு அடிப் பறவையான பக்கியை பார்த்த அனுபவத்தை முதல் கட்டுரையில் பகிர்கிறார்.

இந்த இரவாடி பறவையானது தனது உருமறை தோற்றத்தால் பகல் நேரத்தில் இருந்து எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கிறதாம். இதன் உடல் நிறத்தின் பாதுகாப்பால் தரையிலும் கூட கூடு கட்டக் கூடியது.

நமக்கு அனைவருக்கும் வானவில் பார்க்க பிடிக்கும். அதில் இருக்கக்கூடிய ஏழு வண்ணங்களும் பார்க்கப் பார்க்க சலிக்காதவை. ஆனால் 9 வண்ணங்கள் தன் உடலில் கொண்ட ஒரு பறவையைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்தப் பறவை தான் ஆறு மணிக்கு குருவி எனச் சொல்லப்படும் பிட்டா. இந்தக் கட்டுரையை பார்த்த பிறகு பிட்டாவை பார்க்க வேண்டும் என்ற பித்து எங்களுக்கும் பிடித்து விட்டது.

என் வீடு வரைக்கும் வா என்னை பிடிக்கும்.. என்றொரு திரைப்பட பாடல் உண்டு. அதுபோல மலபார் இருவாசியின் வீட்டுக்குச் சென்று இணையோடு அது பரிமாறும் அன்பு மொழிகளை கூர்ந்து கவனித்த பிறகு, காதலுக்கு உவமையாய் இருவாச்சி பறவைகள் தான் தோன்றும்.

பறவைகளில் ஆண் பறவைகளுக்கு தான் அழகான இறக்கைத் தொகுதிகள் இருக்குமாம். ஏனெனில் அதைக் கொண்டுதான் பெண்ணை கவர்ந்து தன் இனத்தை விருத்தி செய்து கொள்ளும். அப்படி அழகான கொண்டை நீண்ட அழகிய வால் கொண்ட வேதி வால் குருவியின் கட்டுரை மிக ரசனையானது.

எத்தனை பேருக்கு விசில் அடிக்க தெரியும்? நான் எல்லாம் கல்லூரி நாட்களில் விசில் அடிக்க தெரியாமல் பேனா முடியை வைத்து அடித்து இருக்கிறேன். ஆனால் நமக்கெல்லாம் கடும் போட்டியாளர் பறவைகளில் ஒருவர் இருக்கிறார். அவர்தான் சீழ்கை வித்துவான் சீகாரப் பூங்குருவி.

பல புது மேடை நிகழ்வுகளில் ஆடல் பாடலோடு நமக்கு பிடித்த மற்றொரு விஷயம் பல குரல்களில் பேசுவது. உண்மையில் நாம் அதை ரசித்து கேட்போம். ஹலோ மனிதர்களே ..ரொம்ப பீத்திக்காதீங்க..நானும் 25 குரல்களில் பேசுவேன் என்று போட்டிக்கு வரும் இனிய பறவை தான் துடுப்பு வால் கரிச்சான்.

நம் வாழ்வில் சில கணங்கள் மட்டும் சித்திரமாய் மனதில் தங்கிவிடும். அது என்றென்றைக்கும் நினைவில் விட்டு அழியாது. அப்படியான அழகியதொரு நீங்கா சித்திர மாலைப்பொழுது பூ நாரைகளால் ஆசிரியருக்கு வாய்த்த அனுபவத்தையும் ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார்.

இருளில் தீப்பந்தம் அங்கும் இங்கும் நகர்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படியான ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் அழகிய பறவை தான் தீக்காக்கை. டீ காக்கையின் அசைவு மட்டும் அல்ல அதன் அழகிய நிறங்களும், நாம் கண்டு மகிழ இயற்கை நமக்குத் தந்த சிறந்ததொரு பரிசு.

மழலையின் தளிர் நடை பார்ப்பவர்களை எல்லாம் கொள்ளை கொள்ளும். அப்படி மழலையின் தளிர் நடை போல அழகியதொரு நடையை செந்தலை பூங்குருவியிடம் கண்ட அனுபவ கட்டுரை..

ஆர்ப்பரிக்கும் ஆகாய கங்கையை காணச் சென்ற போது இனிமையான காதல் மொழிகளால் ஈர்த்த வெண் கண்ணக் குக்குறுவான், இன்னிசை பாடகன் பொரி மார்பு சிலம்பன் கட்டுரை, சங்க இலக்கியங்கள் தொட்டே பாடப்பட்டு வரும் அரிவாள் மூக்கன், தேன் சிட்டு, கருப்பு வெள்ளை மீன் கொத்தி , போன்ற பல்வேறு பறவைகளைப் பற்றி என்ன நூலில் அழகியதொரு கட்டுரைகள் வாசிக்கலாம்.

கண்ணுக்கொரு அழகிய நிறம் தரும் செமிசை சின்னானை பற்றி வாசிக்கும் போது, உன்னி செடியின் பழங்களை சாப்பிட்டு விட்டு தன்னை அறியாமல், அந்தச் செடியின் விதைப்பரவளை காடு முழுக்க ஏற்படுத்தும் செய்தி நினைவில் வந்து போனது.

தான் பார்த்து ரசித்த சின்னஞ்சிறு உயிர்களைப் பற்றி இந்த நூலில் உள்ள அனைத்து கட்டுரைகளிலும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளை எல்லாம் வாசிக்கும் போது சிறு பறவையின் குரல்வளையிலிருந்து அதிரசெய்யும் ஒலி பிறக்க வைக்கும், இந்த இயற்கையின் பேராற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.