தொடர்கள்
கவர் ஸ்டோரி
தெருவிற்கு வரும் சன் டிவி சண்டை - ஜாசன்

20250521003930882.jpeg

சன் டிவி நிறுவன பங்குகள் தொடர்பாக கலாநிதி மாறன் மற்றும் ஏழு பேர் பதில் அளிக்குமாறு திமுக எம் பி தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக மணி கண்ட்ரோல் டாட் காம் என்ற இணையதளம் செய்தி இப்போது தலைப்புச் செய்தியாக மாறிவிட்டது.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட மொத்தம் எட்டு பேருக்கு சுரேஷ் என்ற வழக்கறிஞர் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் தயாநிதி மாறன்.


தயாநிதி மாறன்தனது சகோதரர் கலாநிதி மாறன் மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் என்ன என்ற பட்டியல்

இதோ :

1.தனிப்பட்ட ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த நிறுவனம் மற்றும் சொத்துக்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மோசடி நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்று வழியில் கலாநிதி மாறன் திட்டம் தீட்டி ஏமாற்று வழியில் சதி செய்து உள்ளார்.

2.இந்த சட்ட போர் நடவடிக்கை 2003இல் முரசொலி மாறன் மரணப்படுக்கையில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது.

3.தந்தையின் மரணத்திற்குப் பிறகு உரிய சட்ட ஆவணங்கள் இன்றி தாய் மல்லிகா மாறன் பெயருக்கு சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டன.

4.இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ்கள் சில மாதங்களுக்குப் பிறகு வெளியான நிலையில் அதற்கு முன்பே சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன.

5.இந்த நடவடிக்கையால் நிறுவன பங்குகளை கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றிக்கொள்ள உதவியாக இருந்தது.

6.செப்டம்பர் 2003ல் 12 லட்சம் பங்குகள் சட்டவிரோதமாக நம்பிக்கை துரோகம் செய்து மாற்றப்பட்டன.

7.சன் டிவியில் 60 சதவீத பங்குகள் நிறுவனத்தில் மற்ற பங்குதாரர்களின் எந்தவித ஆலோசனை ஒப்புதல் இன்றி கலாநிதி மாறன் பெயருக்கு மாற்றப்பட்டன.

8.அதற்கு முன்பு வரை கலாநிதியிடம் பங்குகள் இல்லாத நிலையில் பங்குகள் மாற்றத்துக்கு பின் ஐ.பி.ஓ வெளியிடப்பட்டது .

9.இதன் விளைவு பெரும்பான்மை உரிமையாளராக கலாநிதிமாறன் மாறினார். குடும்பத்தின் பங்கு 50 சதவீதத்தில் இருந்து 20% ஆக குறைந்தது.

10.கம்பெனி சட்டத்தின் படி இது தீவிர குற்ற நடவடிக்கையாக கருதப்படும். குற்ற விசாரணை அலுவலகத்தில் எஸ்.எஃப். ஐ. ஓ விசாரணைக்கு தகுதியான குற்ற நடவடிக்கை இது

11.கலாநிதி மாறன் 3498 கோடி மோசடி செய்துள்ளார். சன் டிவி குழுமத்தின் 12 லட்சம் பங்குகளை தலா பத்து ரூபாய் என நிர்ணயித்து 1.2கோடிக்கு கலாநிதிமாறன் வாங்கியதாக சொல்கிறார். உண்மையில் அப்போது அந்த பங்கின் மதிப்பு 3498 கோடி. இது உண்மையில் மோசடி மற்றும் கிரிமினல் குற்றம்.

12.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாவின் சன் டிவி பங்குகளையும் மோசடி செய்து குறைந்த விலைக்கு வாங்கி இருக்கிறார் .இந்த மோசடி பரிவர்த்தனை யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தனது சகோதரி அன்புக்கரசி இந்த உண்மையை வெளியிடக்கூடாது என்று சொல்லி 500 கோடி தந்திருக்கிறார்.

13.இது தவிர சன் டிவி பங்குகள் மீதான டிவிடெண்டிலும் ஊழல் மோசடி கலாநிதி மாறன் செய்திருக்கிறார்

வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸில் சன் டிவி குழும சேனல்களை முடக்கப் போவதாகவும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி உரிமத்தை ரத்து செய்யப் போவதாகவும் தயாநிதி மாறன் குறிப்பிட்டு இருக்கிறார்.

சன் குழும வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது இந்த மோதல் பத்தாண்டுகளாக நடக்கிறது

இரண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு என்றாலும் பேச்சுவார்த்தை இல்லை.

இந்த விஷயத்தில் மல்லிகா மாறன் கலாநிதி மாறனுக்கு ஆதரவாக இருக்கிறார்.

சன் குழுமத்தை பொறுத்தவரை அவற்றை முழுக்க முழுக்க நிர்வாகம் செய்வது கலாநிதி மாறன் திருமதி காவேரி மாறன் தான்.

சினிமா விஷயங்களை மட்டும் கலாநிதி மாறன் கவனித்து வருகிறார் என்கிறார்கள்.

இவர்களின் மகள் காவ்யா மாறனுக்காக மிகப்பெரிய மாளிகை ஒன்றையும் தற்சமயம் கட்டி இருக்கிறார்கள்.

கலாநிதி மாறனை பொருத்தவரை நான் பிசினஸ்மேன் அரசியல் தலைவர் இல்லை நான் திமுக அனுதாபி திமுகவுக்கு ஓட்டு போடுவேன் திமுகவில் உறுப்பினர் இல்லை என்பதை வெளிப்படையாக பேசுவார்.

சன் செய்தியில் கலைஞர் என்று சொல்வதற்கு பதில் மண்டையில் அடித்தால் போல் கருணாநிதியென்று செய்தி வாசிப்பவர்கள் சொல்வதை கவனித்த கருணாநிதி நமது சேனல் தானே நீங்களே கருணாநிதி என்று சொல்லலாமா என்று ஆற்காடு வீராசாமி மூலமாக கலாநிதி மாறனிடம் சொன்னபோது இது திமுக சேனல் இல்லை என்று சொல்லி, கலைஞர் என்று சொல்ல முடியாது என்று மறுத்தவர் தான் கலாநிதி மாறன்.

திமுகவில் யார் செல்வாக்கு உள்ளவர்கள் அழகிரியா , ஸ்டாலினா கருத்துக்கணிப்பு நடத்துகிறார்கள் இந்த செய்தி கேள்விப்பட்டு கலைஞர் அதை தடுத்து நிறுத்த ஆற்காடு வீராசாமியைத்தான் அனுப்பினார்.

அப்போதும் அவரது வேண்டுகோள் ஏற்கப்படாமல் அந்தக் கருத்துக் கணிப்பு வந்து மதுரையில் தினகரன் பத்திரிக்கை எரிப்பு மூன்று பேர் கருகி சாவு என்று ஆனாது.

கலாநிதி மாறன் வர்த்தகர் டோன்ட் கேர் ஆசாமி.

அவருக்கு எல்லா நெளிவு சுளிவும் தெரியும் .இதுவரை இரண்டு நோட்டீஸ்கள் தயாநிதி அனுப்பியிருக்கிறார்.

எனக்கு என்ன கவலை என்ற ரீதியில் தான் இப்போதைக்கும் கலாநிதி இருக்கிறார்.

அப்படித்தான் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தையும் கைப்பற்றி சரியான சமயத்தில் அதிலிருந்து வெளிவந்தவர் கலாநிதி.

இந்த விஷயம் இப்போதைக்கு பேசும் பொருள் ஆனதும் இது ரொம்ப பழைய செய்தி இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று சன் டிவி சார்பில் பதில் சொல்லி இருக்கிறார்கள்.